ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து, தொலைதூர சிபி மாவட்டத்தில் ரயிலைச் சிறைப்படுத்தியதாக பலூச் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாதக் குழு அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது. மேலும், தங்களுடைய கட்டுப்பாட்டில் அந்த ரயில் இருப்பதாக அக்குழு கூறியுள்ளது.
ரயிலில் பயணித்த பல பயணிகளை தீவிரவாதிகள் மலைப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்று பாகிஸ்தான் உள்துறை இணை அமைச்சர் தலால் சௌத்ரி நேற்று தெரிவித்தார்.
செவ்வாய்க் கிழமை பிற்பகலில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டது. அந்த ரயிலில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த பயணிகளில் 155 பேரை இதுவரை மீட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ரயிலில் 400க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இதுவரை மீட்கப்பட்டுள்ள 155 பயணிகள் தவிர மீதமுள்ளவர்கள் இன்னும் ரயிலில் இருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தாக்குதல் நடத்திய ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் சில பயணிகளை பணயக் கைதிகளாக கடத்திக்கொண்டு மலைகளுக்கு அழைத்துச் சென்றதாக உள்துறை இணை அமைச்சர் தலால் சௌற்றி நேற்றிரவு தெரிவித்தார்.
கடத்தப்பட்ட ரயில் மற்றும் அதிலுள்ள பயணிகளை மீட்கும் முயற்சியில் இதுவரை 27 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரத்தில் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள பலூச் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த பலரைக் கொன்றுள்ளதாகக் கூறியுள்ளது.
இந்த மீட்பு முயற்சியில் இதுவரை மீட்கப்பட்ட 37 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜாஃபர் எக்ஸ்பிரஸை தாக்கிய ஆயுதக்குழுவினர் ஆப்கானிஸ்தானில் உள்ள அவர்களது உதவியாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் தற்கொலைப் படையினர் பணயக் கைதிகளாக பயணிகளுடன் இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக