ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

யாழில் கோடிக்கணக்கில் தங்கநகை கொள்ளை - பெண் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் பெண் உள்ளிட்ட மூவர் காவல்துறையினரால் அதிரடியாக செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை, உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


யாழ்ப்பாணத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த சாவகச்சேரி காவல்துறையினர் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் . கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, வெவ்வேறு இடங்களில் அடகு வைத்து பணம் பெற்றமை தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் , அடகு வைக்கப்பட்ட நகைகளை மீள பெற விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் ,அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

50% இறக்குமதி வரி அமெரிக்கா - அதே அளவு வரி கனடா

அமெரிக்கா-கனடா இடையேயான இறுதிகட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான கனடா பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரியை விதித்தது. இதற்கு பதிலடியாக அதே அளவுக்கான வரியை விதிப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். 

இதைத் தொடர்ந்து இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வடஅமெரிக்க நாடுகளான அமெரிக்காவும் கனடாவும் நீண்ட கால நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. கனடாவின் சரக்கு ஏற்றுமதியில் 72 சதவீதம் அமெரிக்காவுக்கே செல்கிறது. 

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்குப் பிறகு அமெரிக்கா-கனடா வர்த்தக உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருதரப்பு வர்த்தக கவலைகளை தீர்க்க இறுதிகட்ட பேச்சுவார்த்தை கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இப்பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நள்ளிரவு தோல்வியில் முடிந்தது. 

இதைத் தொடர்ந்து, கனடாவின் ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக அமல்படுத்தியது. இது கனடா ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 5 சதவீதத்தை பாதிக்கும். ஏற்கனவே இந்த வரி விதிப்பு 3 நாட்களுக்கு முன்பு அமல்படுத்த அதிபர் டிரம்ப் திட்டமிட்டிருந்தார். பேச்சுவார்த்தைக்காகவே இந்த அமலாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

திருகோணமலை திறப்பு விழாவில் களம் இறங்கிய நடிகர்கள்!!

யுத்தத்தின் சுவடுகள் மீண்டும் வரக்கூடாது-கலாநிதி ஹரிணி

மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் தடைகளையும் தாண்டி, துணிச்சலுடனும் விடாமுயற்சியுடனும் கல்வியில் முன்னேறி வருவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

 யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் (22) நடைபெற்ற, பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் விசேட உரையாற்றிய பிரதமர் இதனை தெரிவித்தார்.

 "இன்று எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். சவால்கள், இடையூறுகள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி, துணிச்சல், தன்னம்பிக்கை, திறமை மற்றும் விடாமுயற்சியால் இந்நிலையை அடைந்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் சாதனை பாராட்டுக்குரியது" எனப் பிரதமர் தெரிவித்தார். 

 ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இன்று வழங்கப்படும் உதவிகள், அவர்களின் துணிச்சலான பயணத்திற்கு மேலும் வலுசேர்ப்பதற்காகவே வழங்கப்படுகின்றன எனத் தெரிவித்த பிரதமர், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தமக்குப் பின்னால் வரும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதே இந்த உதவித் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் எனவும் குறிப்பிட்டார். 

 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள், வேதனைகள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி சாதித்திருப்பது பாராட்டுக்குரியது எனப் பிரதமர் தெரிவித்தார். அவர்களின் துணிச்சல், விடாமுயற்சி மற்றும் சாதனை, பின்னர் வரும் மாணவர்களுக்கு நம்பிக்கையையும் முன்மாதிரியையும் ஏற்படுத்த வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் சமூகத்திற்கு மதிப்புமிக்கவர்கள் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். 

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்த காலத்தில் இடம்பெற்ற கவலைக்குரிய யுத்தத்தின் மிகப் பெரும் பாதிப்புகளில் ஒன்றாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். 


மீண்டும் ஒருபோதும் அவ்வாறான ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்படுவதும், அவ்வாறான நிலைமைகள் உருவாகுவதற்கான காரணிகளை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதேவேளை, கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றும் பிரதமர் தெரிவித்தார். 

மாற்றுத்திறனாளி மாணவர்கள் இன்று அடைந்துள்ள நிலைக்கு அவர்களது பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கிய பங்களிப்பையும் பிரதமர் பாராட்டினார். 

ஜனாதிபதி நிதியம் கடந்த காலங்களில் சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் அனுபவித்தவர்களுக்கு மாத்திரம் உதவும் நிறுவனமாக இருந்த நிலைமையை மாற்றி, உண்மையில் உதவி தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு, அவர்களது தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை வழங்கும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கு மிகவும் நெருக்கமான நிறுவனமாக மாற்றி, உண்மையில் உதவி தேவைப்படும் மக்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

 கல்வித்துறைக்கு அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவம் வழங்கி வருவதாகத் தெரிவித்த பிரதமர், முன்பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான மாணவர்களின் கல்விப் பயணத்திற்குத் தேவையான பல்வேறு உதவித் திட்டங்களை ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுத்து வருவதாகவும் கூறினார். 

 இன்று பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வியில் முன்னேறி வரும் மாணவர்களின் இளைய சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களுக்குப் பின்னால் வரும் மாணவர்களுக்குக் கல்வியைத் தொடர்வதற்கான பாதையை மேலும் இலகுவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் தெரிவித்தார். 

 மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு மேலும் இலகுவாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற முடியும் என்பது தொடர்பான முன்னோடித் திட்டங்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். 

 "மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூகத்தின் ஏனையோருக்கு நிகரான சம வாய்ப்புகளும் சம உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்களைப் பற்றிய சமூகத்தின் பார்வையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். 

ஒவ்வொரு மாற்றுத்திறனாளி மாணவரின் துணிச்சல், போராட்டம் மற்றும் வெற்றிக் கதைகள் மற்றவர்களுக்கு நம்பிக்கையையும் முன்மாதிரியையும் வழங்கும் வகையில் உலகிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்" எனப் பிரதமர் தெரிவித்தார். 

 இறுதியாக, மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு ஆதரவளித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

சனி, 22 ஆகஸ்ட், 2026

மத்திய சுவீடனின் ஃபேகர்ஸ்டா பாடசாலையில் வாள்வீச்சுத் தாக்குதல்!!

மத்திய சுவீடனின் ஃபேகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல் மேல்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (21.08.2026) மதியம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


18 வயதுடைய இளைஞர் ஒருவர் வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரை அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கைது செய்துள்ளனர். கிட்டதட்ட 450 மாணவர்கள் கல்வி கற்கும் இந்தப் பாடசாலையில், கோடைக்கால விடுமுறைக்குப் பின்னர் பாடசாலை மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சந்தேகநபர் குறித்த பாடசாலையின் முன்னாள் மாணவர் எனவும், அவர் தலைக்கவசம் அணிந்து வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்குதல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பாக சுவீடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வணிக வளாகத்தின் மீது ரஷ்யாவின் கொடிய தாக்குதல் - 15 பேர் பலி, 130 பேர் காயம்.

மத்திய உக்ரைன் நகரமான Kryvyi Rih க்ரிவி ரிஹ் இல் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய இரண்டு தாக்குதல்களில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 மேலும் 130 பேர் - 23 குழந்தைகள் உட்பட - நகரின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் காயமடைந்தனர். ஷாப்பிங் மால் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் உள்ளது. 

 சம்பவ இடத்தில் இருந்த அவசர பணியாளர்களை குறிவைத்து இரண்டாவது ட்ரோன் கட்டிடத்தை தாக்கியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழில் பண்டத்தரிப்பு ஆலயத் திருவிழா கண்கள் பாதிப்புக்குள்ளான பரிதாபம்!

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலய திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள், அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் மற்றும் ஒலி பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் பாதிப்பு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது ஆண்கள் 58 பேர், பெண்கள் 44 பேர் மற்றும் சிறுவர்கள் 55 பேர் என மொத்தம் 157 பேர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கண் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது பார்வையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக திருவிழாவில் கலந்து கொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிக்குமாறும், கண்களை தேய்க்காமல், சுயமாக கண் மருந்துகளை பயன்படுத்தாமல் மருத்துவ ஆலோசனையை பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார், சுகாதார அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர். 

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள், அதிகளவிலான பட்டாசுகள், வாணவேடிக்கைகள் மற்றும் தேவையற்ற ஒலி பயன்பாடுகளை தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Thank You Google

Thank You Google
Thanks