வியாழன், 13 ஆகஸ்ட், 2026

வெப்பம் NHS செவிலியர்கள் மயங்கி விழுவதாகத் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

கடுமையான வெப்பம் மற்றும் 'மனிதாபிமானமற்ற' சூழலால் செவிலியர்கள் மயங்கி விழுவதாகத் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.கடும் வெப்பத்தால் ஏற்படும் "மனிதாபிமானமற்ற மற்றும் சாத்தியமற்ற" சூழ்நிலைகளுக்கு மத்தியில், பணி நேரங்களில் செவிலியர்கள் மயங்கி விழுவதாக அவர்களின் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. அதேவேளையில், காலநிலை தழுவலின் "பெரிய கேள்விகளை" எதிர்கொள்வதாக ஆண்டி பர்ன்ஹாம் உறுதியளித்துள்ளார். 

காலநிலை நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், தழுவல் நடவடிக்கைகளின் அவசரத்தை முழுமையாக அங்கீகரிக்க வேண்டும் என்று தொழிலாளர் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களிடமிருந்து அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு மத்தியில், தொடர்ந்து வரும் கோடைக்கால கடும் வெப்பத்தால் ஏற்பட்ட உடனடி நெருக்கடிகளில் தற்போதைக்கு கவனம் செலுத்துவதாக பர்ன்ஹாம் கூறினார். 

 அரசாங்கத்தின் கோப்ரா அவசரகாலக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு பேசிய பர்ன்ஹாம், தனது அரசாங்கம் பரிசீலித்து வரும் வட கடலில் மீண்டும் துளையிடும் பணிகளுக்கு எதிராக இந்தக் கோடைக்காலம் ஒரு காரணத்தை உருவாக்கிவிட்டதா என்று கூற மறுத்துவிட்டார். 

 "நாம் தற்போது இருக்கும் சூழ்நிலையை இன்று கையாள்வதும், நாடு முழுவதும் தீவிரமான சம்பவங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதும் மிகவும் முக்கியம்," என்று அவர் கூறினார்.

யாழ். ஆனைக்கோட்டையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள்

யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாவாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் இந்தக் காட்சிப்படுத்தல் நிகழ்வானது இன்று (13.08.2026) மற்றும் நாளை (14.08.2026) ஆகிய இருதினங்கள் இடம்பெறவுள்ளது. இக் கண்காட்சியில் எமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பண்டைய பண்பாட்டு எச்சங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவும் காட்சிப்படுத்தப்படுகின்றன.இக் கண்காட்சியில் ஈழத்தின் பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தின் தொன்மைச் சிறப்பையும் நேரில் கண்டுகொள்ள முடிகிறது.இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதகுருக்கள், வாழ்நாள் பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராசா, தொல்லியல் பேராசிரியர் ராஜ்சேமதேவா, யாழ். பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் அனித்தா சசிதரன். மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரபாகரமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், களனி பல்கலைக்கழக மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மக்கள் என பலரும் கலந்துகொண்டு தொல்லியல் சின்னங்களை பார்வையிட்டனர்.

எல் நினோவின் தாக்கம் 2027 ஏப்ரல் வரை

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு அவதானிக்க வேண்டிய அளவிற்கு உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போது நிலவும் இந்த வறட்சியான வானிலை முடிவடைந்து, போதுமான மழைவீழ்ச்சியை வரும் ஒக்டோபர் மாதத்திலேயே எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும், மொனராகலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது. 

இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வெளியில் நடமாடும் போது இலகுவான ஆடைகளைப் பயன்படுத்துதல். அவ்வப்போது ஓய்வெடுத்தல் மற்றும் முடிந்தவரை அதிகளவில் நீர் அருந்துதல். நோயாளிகள் மற்றும் முதியவர்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துதல். நாட்டில் தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை நிலவுகிறது. 

 இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இருப்பினும், வரும் நாட்களில் ஒட்டுமொத்தமாக மழைவீழ்ச்சி குறையும் என எதிர்பார்ப்பதாகப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

காற்றின் நிலையைக் கருத்திற்கொள்ளும்போது, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் செப்டம்பர் மாதம் வரை மேலும் வறட்சியான வானிலையே எதிர்பார்க்கப்படுகிறது. 

மே முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலத்தில் இந்தப் பகுதிகளில் மழை குறைவது சாதாரண நிலை என்ற போதிலும், 'எல் நினோ' (El Niño) நிலை காரணமாக இது மேலும் தீவிரமடையக்கூடும்.

புதன், 12 ஆகஸ்ட், 2026

சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்து சிதறிய விண்கலம்!

சீனாவில் விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் ஒன்று ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியுள்ளது. சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் (Wenchang) ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட லாங் மார்ச் 7A (Long March 7A) விண்கலமே இவ்வாறு வெடிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த விண்கலம் மூலம் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்த சோங்ஜிங்-4பி (Zhongxing-4B / ChinaSat-4B) என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் முழுமையாக அழிந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 8:02 மணிக்கு ஏவப்பட்ட இந்த விண்கலம், முதல் நிலை பிரிப்புக்கு (First-stage separation) முன்னரே வானில் ஒரு பெரிய தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியுள்ளது.விண்கலம் பயணத்தின் போது அசாதாரண தொழில்நுட்பக் கோளாறு (flight anomaly) ஏற்பட்டதால் திட்டம் தோல்வியடைந்ததைச் சீனா உறுதி செய்துள்ளது.விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா சீட் பெல்ட் அணிய அடம்பிடித்த குழந்தை!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள விக்டோரியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டொராண்டோ நோக்கி போர்ட்டர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. விமானம் ஓடுபாதையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அதில் பயணித்த சிறு குழந்தை ஒன்று தனது இருக்கையில் அமராமல் எழுந்து நின்றதாகவும், சீட் பெல்ட் அணிய மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

விமானப் பாதுகாப்பு விதிகளின்படி, குழந்தையைப் பாதுகாப்பாக இருக்கையில் அமரவைக்க முடியாததால் விமானத்தைத் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விமானம் மீண்டும் டெர்மினலுக்குத் திரும்பியுள்ளது. தொடர்ந்து, குழந்தையையும் அவரது பெற்றோரையும் அவர்களது உடைமைகளுடன் விமானத்தில் இருந்து இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஆனால், குழந்தை மற்றும் பெற்றோரை இறக்கிவிட்டு மீண்டும் விமானத்தை இயக்குவதற்குள் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டது. விக்டோரியா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை இயக்க நேரம் இரவு 12.30 மணியுடன் முடிவடைவதால், அதற்குள் விமானத்தை மீண்டும் இயக்க முடியவில்லை.

இதனால், அந்த விமானத்தை அன்றைய தினம் தொடர்ந்து இயக்க முடியாமல் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டனர். அவர்களுக்கு மறுநாள் டொராண்டோ செல்லும் மற்றொரு விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்தச் சம்பவத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு போர்ட்டர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. ஒரு சிறு குழந்தையின் அடம்பிடிப்பின் காரணமாக ஒட்டுமொத்த விமானமே ரத்து செய்யப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அதே நேரத்தில், சிறு குழந்தையாக இருந்தாலும் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்பதையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

யாழ்-செம்மணி மனித புதைகுழி 539 மனித எலும்புக்கூடு!!

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் 11 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று யாழ்ப்பாணம் நீதவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. அதன்படி இதுவரை மொத்தமாக 539 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 524 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

516வது இலக்கமிடப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதியின் இடுப்பு பகுதியில் மீட்கப்பட்ட தாயத்து போன்ற ஒன்றும்,மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய் நாணயக்குற்றி ஒன்றும் பிற சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

தங்காலை குடவெல்லயில் துப்பாக்கிச் சூடு

தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று (12) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

மீன்பிடிப் படகு உரிமையாளர் ஒருவரின் வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Thank You Google

Thank You Google
Thanks