சனி, 30 மே, 2026

கென்னடி மையத்தை இலக்கு வைத்த ட்ரம்பு.

அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள கலை வளாகமானது மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின்(John F. Kennedy) பெயரால் அழைக்கப்படுகிறது என்று கூறி, தனது பெயரைச் சேர்ப்பதற்கான திட்டத்துக்கு அமெரிக்கா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இது குறித்து நேற்று (29.05.2026) வழங்கிய தீர்ப்பில், ஜூலை மாதம் தொடங்கவிருந்த இரண்டு வருட புனரமைப்புப் பணிகளுக்காக கென்னடி மையத்தை மூடுவதற்கும் அந்த நீதிபதி நிர்வாகத்திற்கு தற்காலிகத் தடை விதித்துள்ளார்.

கென்னடி மையத்தின் அடிப்படை விதிகளின்படி, அந்த மையத்திற்கு ஜனாதிபதி கென்னடியின் பெயரே சூட்டப்பட வேண்டும் என்பது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நிர்வாகக் குழுவின் தன்னிச்சையான முடிவின் அடிப்படையில், அதற்கு வேறு எந்த முறையான பெயரோ அல்லது பொது நினைவிடமோ சூட்டப்பட முடியாது. 

 காங்கிரஸ்தான் கென்னடி மையத்திற்கு அதன் பெயரை வழங்கியது, அதை மாற்றும் அதிகாரம் காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது என வெளிப்படுத்தியுள்ளார்.

தேரர்களால் பாலியல் அத்துமீறல் 488 சிறுவர்கள் வழக்குப் பதிவு!!

2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், தேரர்களால் பாலியல் மற்றும் பிற அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 488 சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் ஜுவைரியா முகைதீன் தெரிவித்துள்ளார்.

 மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த கண்டனப் பேரணி நேற்று (29) வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகம் முன்பாக நடைபெற்றது. சமய அதிகாரம் கொண்ட சிலரால் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜுவைரியா முகைதீன், “அனுராதபுரத்தில் 13 வயது சிறுமி மீதான பாலியல் வல்லுறவு சம்பவம் முழு நாட்டையும் உலுக்கும் அளவுக்கு வேதனையானது. இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடி மற்றும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

'டிக் டொக் தங்கை கொலை 14 வயதுச் சிறுவன் கைது!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றில், தனியாக இருந்த 11 வயதுச் சகோதரி வைத்திருந்த கைபேசியைத் தர மறுத்ததால், அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம் தொடர்பாக 14 வயதுச் சிறுவனை இன்று ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கடந்த வியாழக்கிழமை மாலையில், ஏறாவூர் 5ஆம் பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா என்ற சிறுமி, குளியலறைத் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

 குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளார். தந்தையார் சம்பவ தினத்தன்று வேலைக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில், 14 வயதுச் சகோதரனும் 11 வயதுச் சகோதரியும் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர். 

இந்நிலையில், 'டிக் டொக்' பார்ப்பதற்காகச் சகோதரி வைத்திருந்த கைபேசியைத் தருமாறு சகோதரன் கேட்டுள்ளார். அதற்குச் சகோதரி கொடுக்க மறுக்கவே, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சகோதரன், தன் சகோதரியின் கழுத்தை நெரித்ததில் அவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தன் சகோதரியின் உடலை இழுத்துச் சென்று குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாதது போல வீட்டிலிருந்து பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளார். அதேநேரம், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த தந்தை, வீட்டில் பிள்ளைகளைக் காணாமல் தேடியுள்ளார். 

அப்போது குளியலறைத் தண்ணீர் தொட்டியில் 11 வயது மகள் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறான நிலையில், 14 வயதுச் சிறுவன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், அந்தச் சிறுவனே தன் சகோதரியைக் கொலை செய்துள்ளார் என்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 இதனைத் தொடர்ந்து, குறித்த சிறுவனைக் கைது செய்துள்ளதாகவும், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் பொலிஸ் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளி, 29 மே, 2026

எபோலா தடுப்பூசி உலக சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது.

எபோலாவின் புண்டிபுக்யோ திரிபுக்கான மூன்று சோதனை சிகிச்சைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இதில் மேப் பயோபார்மசூட்டிக்கல்ஸின் MBP134, ரீஜெனரானின் மாஃப்டிவிமாப் மற்றும் கிலியட் சயின்சஸின் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிர் ஆகியவை அடங்கும். 


இந்த மருந்துகளையும் மற்ற சாத்தியமான தடுப்பூசிகளையும் மருத்துவப் பரிசோதனைகளில் மதிப்பீடு செய்து, அவற்றின் பயன்பாடு குறித்த தரவுகளை உருவாக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை கூறியது. அந்த அமைப்பும் வெளி நிபுணர்களும் பல சாத்தியமான மருந்துகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

 காங்கோ ஜனநாயகக் குடியரசில் நோய் பரவல் தொடர்வதாலும், உகாண்டாவிலும் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புண்டிபுக்யோ வைரஸ் நோய்க்கென பிரத்யேகமாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ தற்போது இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.

 உடனடி சிகிச்சைக்காகவோ அல்லது ஆய்வின் ஒரு கூடுதல் அங்கமாகவோ உலக சுகாதார அமைப்பு பயன்படுத்த விரும்பினால், மாஃப்டிவிமாப் மருந்து ஏற்கனவே காங்கோ ஜனநாயகக் குடியரசில் கையிருப்பில் உள்ளது என்று ரீஜெனரான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கையாக, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு, நோய்த்தொற்றுக்குப் பிந்தைய பயன்பாட்டிற்காக கிலியட்டின் சோதனைக்குட்பட்ட வாய்வழி வைரஸ் எதிர்ப்பு மருந்தான ஒபெல்டெசிவிர் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இருப்பினும், அதன் செயல்திறன் வலுவான தொடர்புத் தடமறிதலைச் சார்ந்திருக்கும். தடுப்பூசிகளில், சர்வதேச எய்ட்ஸ் தடுப்பூசி முயற்சியால் உருவாக்கப்பட்டு வரும் rVSV பண்டிபுக்யோ எனப்படும் ஒற்றை டோஸ் தடுப்பூசி மிகவும் நம்பிக்கைக்குரியதாகக் கருதப்பட்டது. இருப்பினும், இது சோதனைகளுக்குத் தயாராவதற்கு இன்னும் ஏழு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும் என அந்த அமைப்பு கூறியது. 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா இணைந்து உருவாக்கிய மற்றொரு தடுப்பூசியான ChAdOx1 பண்டிபுக்யோ, இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் சோதனைக்குக் கிடைக்கக்கூடும், இருப்பினும் கூடுதல் விலங்கு தரவுகள் இன்னும் தேவைப்படுகின்றன. 

 உலக சுகாதார அமைப்பு, உரிமம் பெற்ற ஒரே எபோலா தடுப்பூசியான மெர்க்கின் (MRK.N) எர்வெபோவின் சாத்தியமான பயன்பாட்டையும் ஆய்வு செய்தது, ஆனால் பண்டிபுக்யோ வைரஸுக்கு எதிரான பாதுகாப்பிற்கான சான்றுகள் குறைவாகவும் உறுதியற்றதாகவும் இருப்பதால், அதை ஆராய்ச்சி அமைப்புகளுக்கு வெளியே பயன்படுத்தக்கூடாது என்று கூறியது.

 ரெம்டெசிவிர் உடன் ஒரு மோனோக்ளோனல் ஆன்டிபாடியைப் பயன்படுத்தி கூட்டு சிகிச்சையை மதிப்பீடு செய்யுமாறு உலக சுகாதார அமைப்பின் ஆலோசகர்கள் பரிந்துரைத்தனர். கடுமையான நெறிமுறைத் தரங்களின் கீழ் மருத்துவப் பரிசோதனைகளை வடிவமைத்துச் செயல்படுத்த, காங்கோ மற்றும் உகாண்டா அதிகாரிகளுடனும், ஆப்பிரிக்கா சிடிசி உள்ளிட்ட கூட்டாளர்களுடனும் இணைந்து பணியாற்றி வருவதாக அந்த அமைப்பு கூறியது. 

 ஆதாரம்: ராய்ட்டர்ஸ்

யாழ். வடமராட்சி கடலில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்.

யாழ் வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி இன்றைய தினமும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 


காணாமல் போனவர்களை மீட்பதற்காகப் பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியிலிருந்து சுமார் 10 படகுகளும், முனை பகுதியிலிருந்து 10-க்கும் மேற்பட்ட படகுகளும் என 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சக கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை முதலே கடலுக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.முன்னதாக, நேற்று முன்தினம் புதன்கிழமை (27) கடலுக்குச் சென்ற இவர்களைத் தேடி சக கடற்றொழிலாளர்கள்சென்றிருந்த போதிலும், பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர்.

இந்த நிலையில், இன்று வானிலை சற்றே சாதகமாக உள்ளதால் தேடுதல் பணி முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை - முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற பின்வருவோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

பாலச்சந்திரமூர்த்தி இராமகிருஸ்ணன் (வயது 54) மற்றும் அவரது மகனான இராமகிருஸ்ணன் ரவிராஜ் (கற்கோவளம்) கதிர்காமம் சோதிலிங்கம் (வயது 52) மற்றும் சுமியோம்பிள்ளை சுஜிக்குமார் (வயது 37) (முனை கடற்றொழிலாளர் சங்கம்) இவர்களின் நிலை என்னவென்று தெரியாததால், கடற்கரையோரம் திரண்டுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கண்ணீருடன் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை, கடற்றொழிலாளர்கள் காணாமல் போனது குறித்து கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை பிரதிப் பணிப்பாளர் ஆகியோருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டும், கடற்படையினர் தேடுதல் பணியில் ஈடுபடவில்லை என உள்ளூர் கடற்றொழிலாளர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அரச தரப்பும் கடற்படையும் காட்டி வரும் இந்த அசமந்தப் போக்கைக் கண்டித்துள்ள கடற்றொழிலாளர்கள், தங்களின் சொந்தப் பொறுப்பிலேயே இன்றைய மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

டிரம்பின் கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்!

இஸ்ரேலுடன் உறவை புதுப்பிக்கும் ஆபிரகாம் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் ஒருபோதும் இணையாது என்றும், தங்களின் அடிப்படை கொள்கை களுக்கு எதிரான எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈரான் – அமெரிக்கா இடையேயான போரை நிறுத்துவதில், பாகிஸ் தான் நடுநிலையாளராகச் செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலை பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பாகிஸ்தானிடம் ஒரு கட்டாய கோரிக்கையை விடுத்திருந்தார்.

 ஈரான் விவகாரத்தில் அமைதி உடன்படிக்கை ஏற்பட வேண்டும் என்றால், சில முக்கிய முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலை முறைப்படி அங்கீகரித்து, ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது தான் அது. சவுதி அரேபியா, கத்தார், துருக்கி ஆகிய நாடுகளை தொடர்ந்து, பாகிஸ்தானும் இந்த ஒப்பந்தத்தில் இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 அமெரிக்காவுடன் சில காலமாக நட்புறவில் இருந்தாலும், டிரம்பின் இந்த மிரட்டலுக்கு, பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.நம் அடிப்படைக் கொள்கை மற்றும் சித்தாந்தங்களுக்கு முரணாக இருக்கும் எந்தவொரு உடன்படிக்கையிலும் பாகிஸ்தான் இணையக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒரு நாள் கூட சொன்ன வார்த்தையை காப்பாற்றாத, நம்பகத்தன்மையே இல்லாத மனிதர்களுடன் நாம் எப்படி ஒன்றாக அமர்ந்து பேச முடியும்? இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. 

இவ்வாறு அவர் கூறினார்.ஆபிரகாம் ஒப்பந்தம் என்பது, 2020ல் டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் மேற்காசியாவில் இஸ்ரேல் மற்றும் இஸ்லாமிய நாடுகளுக் கிடையே அதிகாரப்பூர்வ உறவை உருவாக்க, அமெரிக்கா முன்னெடுத்த அமைதி ஒப்பந்தமாகும். அதாவது, இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்து, அதனுடன் நட்பு மற்றும் வர்த்தக உறவை தொடங்குவது. இந்த ஒப்பந்தத்தில், அய்க்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், மொராக்கோ ஆகிய நாடுகள் ஏற்கனவே இணைந்திருக்கின்றன. 

ஆனால், சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகள் தங்களின் இஸ்லாமிய கொள்கைகளின்படி, பாலஸ்தீனத்திற்கு விடுதலை கிடைக்கும் வரை இந்த உடன்படிக்கையில் இணைய மாட்டோம் என திட்டவட்டமாக மறுத்து வருகின்றன.ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த கோரிக்கையை, சவுதி அரேபியா நிராகரித்துள்ளது.

இது குறித்த தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள சவுதி அரசு தரப்பு, ‘பாலஸ்தீன விவகாரத்தில் எங்கள் கொள்கையில் எள்ளளவும் மாற்றமில்லை. பாலஸ்தீன மக்களுக்கு என்று தனி நாடு அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ, நிரந்தரமான வழி வகை செய்ய வேண்டும். அந்தப் பாதை யாராலும் மாற்ற முடியாததாக இருக்க வேண்டும். அதுவரை இஸ்ரேலுடன் எவ்வித துாதரக உறவு, சமரசம் கிடையாது’ என குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் மோசமாகி இருக்கும் பசி!!

அமெரிக்காவில் கொரோனா காலத்தை விட தற்போது உணவுப்பற்றாக்குறை மற்றும் பசி பிரச்சனை மோசமடைந்து இருப்பதாக நியூயார்க் ஃபெடரல் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் பல மாகாணங்களில் சுமார் 1200 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், செலவுகளை சமாளிக்க நீங்கள் சேமிப்பு அல்லது அவசர கால கணக்குகளில் இருந்து பணம் எடுக்க வேண்டிய சூழல் உருவானதா! போதிய உணவு கிடைக்காமல் நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ சிரமப்படுகிறீர்களா?

உணவு அல்லது மளிகை பொருட்களை வாங்குவதற்காக உணவு நன்கொடைகள் அல்லது அரசாங்க உதவியை பெற்றீர்களா என்பன உள்ளிட்ட பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த ஆய்வின் மூலம் கிடைத்துள்ள அமெரிக்க மக்களின் பதில்கள் தற்போது அமெரிக்காவில் பசி ஒரு பரவலான மற்றும் முக்கிய பிரச்சனையாக உள்ளதை காட்டுகிறது. 

கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு உச்சத்தில் இருந்த போது 4 சதவீத குடும்பங்கள் மட்டுமே எங்களுக்கு போதிய உணவுகள் கிடைக்கவில்லை அல்லது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை என்று கூறியிருந்த நிலையில், தற்போதைய சூழலில் அந்த எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறி இருக்கிறது. அதே போல 2020-ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் 21.8% குடும்பங்கள் சேமிப்பை பயன்படுத்தியதாக கூறி இருந்ததாகவும், அது தற்போது 33 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக கோடிக்கணக்கான குடும்பங்கள் உணவுக்கே போராடும் நிலை உருவாகியுள்ளதாக நியூயார்க் ஃபெடரல் வங்கியின் ஆய்வு எச்சரித்து உள்ளது.

குறிப்பாகக் குறைந்த கல்வி மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களிடையே உணவுப் பாதுகாப்பின்மையில் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை நாங்கள் காண்கிறோம் என்று ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்கள்.

Thank You Google

Thank You Google
Thanks