செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று 24 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் நடைபெற்றது.
இன்றுடன் 355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 341 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 02 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்தார்.
இவற்றில் 04 என்புகள் சிறுவர்களுடையதும், 02 வளர்ந்தவர்களுடையதும், ஒன்று குழந்தையினதுமாக காணப்பட்டுள்ளன.
இன்று புதிய வாரம் ஆரம்பித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் மேற்கொள்ளப்பட்டது.
அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.
தற்போது மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று (15) முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் 17ஆம் திகதி வரை நகரங்கள், வடிகால் அமைப்புகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் சுத்தம் செய்யப்படவுள்ளன.
அதேபோல், 18ஆம் திகதி பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும், அவற்றின் சுற்றுப்புற வளாகங்களும் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களைச் சுத்தம் செய்யும் நாளாக 19ஆம் திகதி பெயரிடப்பட்டுள்ளதுடன், தனிப்பட்ட வீடுகள் மற்றும் வீடுகளைச் சுற்றியுள்ள வளாகங்களைச் சுத்தம் செய்யும் பணிகள் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளன.
தெஹ்ரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறக்கூடாது’ என ஐரோப்பியத் தலைவர்கள் எச்சரித்துள்ள நிலையில், அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்காவும் ஈரானும் தெரிவித்துள்ளன.
அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தை விமர்சித்த இஸ்ரேலிய தீவிர வலதுசாரி அமைச்சர், லெபனானில் வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், லெபனான் உட்பட மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை திங்களன்று கடுமையாகக் கண்டித்தார்.
மேலும், தனது நாடு அந்த ஒப்பந்தத்தால் கட்டுப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
"டிரம்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது.நாங்கள் இந்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக இல்லை.
இது எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யாது," என்று பென் கிவிர் தனது டெலிகிராம் சேனலில் கூறினார். இந்த ஒப்பந்தம் குறித்து ஒரு இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்த முதல் எதிர்வினை இதுவாகும்.
"ஹிஸ்புல்லாவை ஒழிப்பதை விடக் குறைவான எதற்கும் நாம் உடன்படக்கூடாது.
நமது வீரர்கள் கைப்பற்றி, பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அகற்றிய ஒரு அங்குல நிலப்பரப்பில் இருந்தும் நாம் பின்வாங்கக்கூடாது," என்றும் அவர் கூறினார்.அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகள் தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையை மீண்டும் திறக்க ஒரு உடன்பாட்டிற்கு வந்துவிட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி மீண்டும் கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றப்பட வேண்டும் என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வாடேஃபுல் திங்களன்று கூறினார்.
லக்சம்பர்க்கில் ஐரோப்பிய சகாக்களைச் சந்திப்பதற்கு முன்பு வாடேஃபுல், “ஹோர்முஸ் ஜலசந்தி எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி, சுங்க வரிகள் அல்லது அதுபோன்ற கட்டணங்களை விதிக்கும் சாத்தியக்கூறுகள் ஏதுமின்றி, மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்,” என்று கூறினார்.
சனிக்கிழமையன்று தெற்கு லெபனானின் பல மாவட்டங்களில் ஜெஸ்ஸின், நபாத்தியா, டயர் மற்றும் மர்ஜாயூன் ஆகிய நகரங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களையும் பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தியது.
அல் மயாதீனின் செய்தியாளரின் கூற்றுப்படி, ஜெஸ்ஸின் மாவட்டத்தில் மிகவும் கடுமையான தாக்குதல்கள் நிகழ்ந்தன.
கஃபார் ஹூனா நகரில் ஒரு வாகனத்தைக் குறிவைத்து ஆரம்பகட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது, அதே நேரத்தில், அந்நகருக்கு அருகிலுள்ள லெபனான் இராணுவ சோதனைச் சாவடியின் சுற்றுப்புறத்தில் மேலும் மூன்று வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அதே மாவட்டத்தில், அல்-ரிஹான் நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின, அதே நேரத்தில் சோஜோத் நகரின் புறநகர்ப் பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நபாத்தியா மாவட்டத்தில் பீரங்கித் தாக்குதல் மீண்டும் தொடங்கியது,
அங்கு நபாத்தியா நகரின் ரஹ்பத் பகுதியில் குண்டுகள் விழுந்தன. மேலும் தெற்கே, டயர் மாவட்டத்தில், இஸ்ரேலியப் படைகள் சரிஃபா நகரின் மீது குண்டுவீச்சு நடத்தியதுடன், மாரகே நகரின் மீதும் தாக்குதல் நடத்தின.
கியாம் நகரின் மீதான தாக்குதலுடன், இந்த மோதல்கள் மர்ஜாயூன் மாவட்டம் வரை விரிவடைந்தன.
நாட்டில் போர் தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும், இஸ்ரேலிய அதிகாரிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தும் பாதையைத் தொடர வேண்டும் என்று லெபனான் அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்துகிறது.
இருப்பினும், இந்த இராஜதந்திர அணுகுமுறை தேசிய அளவிலும் மக்கள் மத்தியிலும் பரவலாக நிராகரிக்கப்படுகிறது. மோதல்கள் தொடரும் நிலையில், பல லெபனான் குடிமக்கள் நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவது தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வரவிருக்கும் இந்த விவாதங்கள் மிகவும் முக்கியமானவை என்று விவரித்த லெபனான் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு இடையேயான ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜூன் 22 அன்று வாஷிங்டனில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என லெபனான் அதிகாரப்பூர்வ வட்டாரம் ஒன்று அல் மயாதீனிடம் தெரிவித்துள்ளது.
அந்த வட்டாரத்தின்படி, லெபனான் தூதுக்குழுவில் இராணுவ அதிகாரிகளும் இடம்பெறுவார்கள். இது, "முன்னோட்ட மண்டலங்கள்" என்று விவரிக்கப்படும் பகுதிகள் மூலம் இஸ்ரேல் வெளியேறுவதற்கான ஒரு கட்டமைப்பைத் தீர்மானிப்பதில் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்துவதையும், அதன் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.
லெபனான் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும், அதிகாரப்பூர்வ அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசு தலைமையிலான திட்டத்தைச் செயல்படுத்துவதற்கும் இணையாக, இந்த முன்னோட்ட மண்டலங்களில் குறிப்பிட்ட இடங்களிலிருந்து இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக வெளியேறுவது அடங்கும் என்று அந்த வட்டாரம் விளக்கியது.
வரவிருக்கும் சுற்று, களத்தில் படைகளைத் திரும்பப் பெறும் ஏற்பாடுகளைச் செயல்படுத்துவதற்கான நடைமுறை வழிமுறைகள் மற்றும் பிராந்தியம் முழுவதும் லெபனான் இராணுவப் படைகளின் விரிவாக்கப்பட்ட நிலைநிறுத்தத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மதிப்பிடுவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகி, மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14, 2026) கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் நேற்று சனிக்கிழமை இதனைப் பதிவிட்ட அவர், ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) உடனடியாக மீண்டும் திறக்கப்படும் என்றும், ஈரான் இனி அணு ஆயுதங்களை நாடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தன்னிடம் மாற்று இறுதி வழிமுறை உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த அமைதி ஒப்பந்தத்திற்கான இடைஸ்திரப் பணிகளை மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பும், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மின்முறை (Electronic signing) மூலமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் திகதி குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் மிகவும் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei), அமெரிக்கத் தரப்பின் தயக்கம் காரணமாக உடன்படிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆயினும், வரும் நாட்களில் இந்த உடன்பாடு எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் குறித்து இரு நாடுகளும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
ஈரானின் முடக்கப்பட்ட 24 பில்லியன் டொலர் சொத்துக்களை விடுவித்தல், அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல் மற்றும் லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம் ஆகியன இதில் அடங்குவதாக ஈரான் தரப்பு கூறினாலும், ஈரானுக்கு எந்த நிதியும் வழங்கப்பட மாட்டாது என்றும், அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அழிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சூழலில், ஈரானின் மஷாத் (Mashhad) நகரில் வெளியுறவு அமைச்சக அலுவலகத்திற்கு வெளியே, இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீவிரப்போக்குடைய ஈரானியர்கள் சனிக்கிழமை போராட்டங்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிகாலை 05.30 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நாளாந்த வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும், பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவுக்குப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது சிறுவர்களிடையே சில நோய்கள் பரவி வருவதால் பெற்றோர் அது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
டெங்கு, இன்ஃப்ளூயன்சா, கை, கால் மற்றும் வாய் நோய், மற்றும் மெனிஞ்சைடிஸ் ஆகிய நோய்கள் தற்போது சிறுவர்களிடையே பரவி வருவதைக் காணக்கூடியதாக உள்ளதாக விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, இந்நோய் நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருந்து, இந்நோய்களுக்கு ஆளாவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும் என்றும் விசேட வைத்திய நிபுணர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அங்கு டெங்கு நோய் பற்றிக் குறிப்பிடுகையில், அது ஒரு உயிராபத்தான நோய் என்றும் காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, உடல் வலி, மூட்டு வலி மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் காண முடியும் என்றும், 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் காணப்பட்டால் அது குறித்து அவதானமாக இருக்குமாறும் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.
இன்ஃப்ளூயன்சா நோய் பற்றிக் குறிப்பிடுகையிலும் காய்ச்சலுடன் இருமல், தடிமன், உடல் வலி, மூட்டு வலி போன்ற அறிகுறிகளைக் காண முடியும் எனச் சுட்டிக்காட்டிய விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, இருமல், தடிமனுடன் காய்ச்சல் காணப்பட்டால் பிள்ளைகளை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
அத்துடன், இந்நோய் காணப்பட்டால் பிள்ளைகளுக்கு ஓய்வளிப்பது மிகவும் பொருத்தமானது எனச் சுட்டிக்காட்டிய வைத்தியர், பிள்ளைகளைப் பாடசாலைகள் அல்லது முன்பள்ளிகள், பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பும்போது முகக்கவசம் அணிவிக்குமாறும், அதன் மூலம் மற்றைய தரப்பினருக்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போது சிறுவர்களிடையே கை, கால் மற்றும் வாய் நோய் பரவி வருவதைக் காணக்கூடியதாக உள்ளதாகச் சுட்டிக்காட்டிய விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, அந்த நோயின் அறிகுறிகளாக கால்கள், முழங்கைகள், வாய் சார்ந்த பகுதிகளில் சிவப்புப் புள்ளிகள் மற்றும் சில வேளைகளில் வெள்ளை நிற நீர் கொப்புளங்கள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
இந்நோய்க்கான காரணி Coxsackievirus எனப்படும் வைரஸ் எனச் சுட்டிக்காட்டிய விசேட வைத்திய நிபுணர், இந்நோய் பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையின் உடல் மற்றுமொரு பிள்ளையின் உடலில் படுவதன் மூலம் அந்தப் பிள்ளைக்குப் பரவுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த அறிகுறிகளைக் கொண்ட பிள்ளைகளை 3-4 நாட்கள் வீட்டில் வைத்திருக்குமாறும், தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறும் விசேட வைத்திய நிபுணர் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், தற்போது சிறுவர்களிடையே மெனிஞ்சைடிஸ் நோய் பரவி வருவதாகவும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குக் காரணம் ஒரு வைரஸின் தாக்கம் என்றும், இதன் அறிகுறிகளாக காய்ச்சலுடன் தலைவலி, வாந்தி, மின் ஒளி அல்லது ஏதேனும் ஒரு வெளிச்சத்தைப் பார்ப்பதில் சிரமம், அதேபோல் சில சமயங்களில் சத்தங்களைக் கேட்பதற்குக் கூட விருப்பமின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்படும் என்றும் வைத்தியர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இந்நோய் செரிமானப் பாதை மற்றும் சுவாசப் பாதை மூலம் பரவுகிறது என்றும், இந்நோய் பரவுவதைக் குறைப்பதற்காக சுத்தமான உணவு, கொதித்தாறிய நீரைப் பருகுதல், இருமல் மற்றும் தடிமன் காணப்பட்டால் முகக்கவசம் அணிவது பொருத்தமானது என்றும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.