வியாழன், 2 ஜூலை, 2026

கஞ்சிகுடியாறு காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு!

அம்பாறை மாவட்டம், தமண காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு – பக்மிட்டியா காட்டுப்பகுதியில், மரப்பொந்து ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்னைப்பர் (Sniper) ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை விசேட அதிரடிப்படையினர் (STF) மீட்டுள்ளனர். 

நேற்று திங்கட்கிழமை (2026 ஜூன் 29) மாலை, திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் வேட்டையின் போதே இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 

நீண்டகாலமாக மரப்பொந்து ஒன்றினுள் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமையால், மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதன் பாகங்கள் பெரிதும் துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்றன. இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு ஸ்னைப்பர் துப்பாக்கி, அதனுடன் பொருத்தப்படும் ஒரு தொலைநோக்கி (Telescope), ஒரு ரவைக்கூடு (Magazine) மற்றும் 7 தோட்டாக்கள் (Live Ammunition) என்பன கைப்பற்றப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம்கள் அமைந்திருந்த கஞ்சிகுடியாறு காட்டுப்பகுதியில், யுத்த காலத்தில் இவற்றுடன் தொடர்புடையவர்களால் இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 கைப்பற்றப்பட்ட அனைத்து ஆயுதங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் தீவிர விசாரணைகளுக்காக தமண காவல் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது குறித்த மேலதிக விசாரணைகளை தமண காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

 இது அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. அதிமுக கட்சி நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருவதாக அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து சட்டமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியாக பிரிந்து செயல்பட்டனர். 

பின்னர், அவர்களுக்கு தவெகவில் அமைச்சர் பதவி கிடைக்காததால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து, மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இணைந்தாலும், அவர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாக செயல்பட மறுத்து வருகிறார்கள். 

 இதில் அதிருப்தி அடைந்த எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 4 பேர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.

 இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களும் தற்போதைய அதிமுக எம்எல்ஏக்களுமான சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 2 பேரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர்.சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளர்மதி ஆகியோர் தவெக பொதுச் செயலரும், அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தனர். இவர்களுடன் புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் தவெகவில் இணைந்துள்ளனர்.

பதின்ம வயதினரிடையே பாலியல் நோய் அதிகரிப்பு!!

பதின்ம வயது பிள்ளைகளிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் தொற்றும் போக்கு அதிகரித்து வருவதாக ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


 கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார். "HIV மற்றும் STI எனப்படும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள், குறிப்பாக பதின்ம வயது இளைஞர், யுவதிகளிடையே முந்தைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் ஓரளவுக்கு அதிகரிப்பைக் காட்டியுள்ளன. 

 இது தொடர்பாக சுகாதார அமைச்சின் பிரிவினால் கலந்துரையாடப்பட்டதன் பின்னரும், சில பாடசாலை மாணவர்களும் சில பல்கலைக்கழக மாணவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாலும், இது குறித்து பிரதமருடனும், சிறுவர் விவகார அமைச்சருடனும் கலந்துரையாடப்பட்டது. 

 அரசாங்கம் என்ற ரீதியில், சம்பந்தப்பட்ட தரப்பினரை ஒன்றிணைத்து இந்த நிலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிலர் தாங்கள் அறியாமலேயே இதற்கு இரையாகிவிட்டதாகத் தங்களது தரப்பில் தெரிவித்துள்ளனர். 

 இதேவேளை, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் திரைகளுக்கு அதிகமாக அடிமையாவதன் மூலம், பிள்ளைகள் பிற்காலத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு தூண்டப்படும் போக்கு காணப்படுவதாக மனநல மருத்துவர் சமிந்த வீரசிறிவர்தன தெரிவித்துள்ளார். 

 டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாவதால் மூளையில் ஏற்படும் இரசாயனக் கலவை மாற்றங்கள் காரணமாக, பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டை நோக்கித் தள்ளப்படலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு வெல்லாவெளியில் குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வயல் நிலத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம், கூழாவடி நெல்லிக்காடு பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. ​


நேற்று (01) மாலை தமது வீட்டில் இருந்து வௌியில் சென்ற நபர், இரவு நேரமாகியும் வீடு திரும்பாமையினால் ஏற்பட்ட சந்தேகத்தில் உறவினர்கள் தேடியுள்ளனர். இந்நிலையில் இரவு 7 மணியளவில் வயல் காணிக்குள் அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டுள்ளனர். 

உயிரிழந்த நபர் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு மருத்துவப் சிகிச்சைகளை பெற்றுவந்தவர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். 

இன்று (02) காலை களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக, திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டார். விசாரணைகளின் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ​

புதன், 1 ஜூலை, 2026

எல் ஃபாஷரில் சூடானின் ஆர்.எஸ்.எஃப் (RSF) மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்!!

சூடானிய துணை ராணுவப் படையான ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (RSF), எல் ஃபாஷரைக் கைப்பற்றும் நடவடிக்கையின் போது,மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் இன அழிப்பையும் செய்ததாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது. 

கொலை, சித்திரவதை, பாலியல் வன்கொடுமை, அடிமைப்படுத்துதல் மற்றும் பாலியல் அடிமைத்தனம் உள்ளிட்ட பல குற்றங்கள், பொதுமக்களுக்கு எதிரான பரவலான மற்றும் திட்டமிட்ட தாக்குதலின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன என்றும், அவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்குச் சமமானவை என்றும் அந்த மனித உரிமைகள் அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

வடக்கு டார்ஃபூர் மாநிலத்தில் உள்ள அந்த நகரில் நடந்த தாக்குதல்களின் போது, ​​RSF வேண்டுமென்றே குழந்தைகளைக் குறிவைத்ததாகவும் அந்த அறிக்கையில் அம்னெஸ்டி குற்றம் சாட்டியுள்ளது. அக்டோபர் மாதம், 18 மாத முற்றுகைக்குப் பிறகு, டார்ஃபூர் பிராந்தியத்தில் சூடான் ஆயுதப் படைகளின் கடைசி கோட்டையான எல் ஃபாஷரை அந்த துணை ராணுவப் படை கைப்பற்றியது. 

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட பரவலான படுகொலைகளால் இந்தக் கொடூரமான கைப்பற்றல் நிகழ்ந்தது.டிசம்பர் 2024 முதல் மார்ச் 2025 வரை, அரபு அல்லாத இனக்குழுக்கள் வசிக்கும் அபு செரேகா உட்பட, நகரங்களையும் கிராமங்களையும் ஆர்.எஸ்.எஃப் அழித்தது இனச் சுத்திகரிப்புக்கு ஒத்ததாக இருந்தது என்று மனித உரிமைகள் அமைப்பு கூறியது. 

 அந்த துணை ராணுவப் படையால் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்கள் எண்ணற்ற குழந்தைகளை அனாதைகளாக்கியுள்ளதாகவும், நூறாயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்துள்ளதாகவும், தாக்குதல்களின் போதும் அல்லது தப்பி ஓடும்போதும் அவர்களை இறப்புக்கும் காயத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியது. ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் கல்லமார்ட் கூறினார்.

 “சூடானில் நடக்கும் போர் என்பது பொதுமக்கள் மீதான போர். ஆர்.எஸ்.எஃப் எல் ஃபாஷர் நகரை முற்றுகையிட்டபோது, அங்குள்ள பொதுமக்கள் எதிர்கொண்ட கொடூரங்கள் குறித்து உலகிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது மனிதகுலத்தின் மனசாட்சியில் படிந்த ஒரு கறை.” சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறியதற்குப் பொறுப்பானவர்கள் என்று அந்த அறிக்கை கூறிய மூன்று RSF தளபதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டது.

 “அபு ஷோக்” என்று அழைக்கப்படும் மேஜர் ஜெனரல் கெடோ ஹம்தான் அகமது முகமது, லெப்டினன்ட் கர்னல் அப்பாஸ் காதர் பக்கித் மற்றும் “அபு லுலு” என்று அழைக்கப்படும் தளபதி அல்-ஃபதே அப்துல்லா இத்ரிஸ்.

80 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் தாயகம் திரும்புகிறார்.

சீனாவில் உள்ள ஒரு விமான தளத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற 80 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்க ராணுவ விமானப்படை விமானி ஒருவர் இப்போது தாயகம் திரும்புகிறார். 


முதல் லெப்டினன்ட் ஃபிராங்க்ளின் மெக்கின்னியின் (Franklin McKinney) தாயகத் திரும்புதல் பயணம் நீண்டது; இப்பயணத்திற்கான பாதை அமெரிக்க விமானப்படை அகாடமி மாணவர் ஒருவரின் ஆய்வுக் கட்டுரை, தாய்லாந்து விமானப்படை அதிகாரி ஒருவரின் நட்பு, 90-களின் மத்தியில் வயதான கிராமத்து மூதாட்டி ஒருவரின் தெளிவான நினைவுகள், தாய்லாந்தில் வசிக்கும் அமெரிக்கர் ஒருவரின் ஆர்வம் மற்றும் நம்பமுடியாத வகையில் பாங்காக்கில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் ஆகியவற்றால் அமைக்கப்பட்டது.

வடக்கு தாய்லாந்தில் உள்ள நெல் வயல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட உடல் எச்சங்கள் மெக்கின்னியுடையவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாங்காக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. 

இவர் நவம்பர் 5, 1944 அன்று, இரட்டை எஞ்சின் மற்றும் இரட்டை வால் கொண்ட P-38 லைட்னிங் (P-38 Lightning) போர் விமானத்தின் உளவுப் பணி வகையைச் சேர்ந்த F-5E விமானத்தை ஓட்டிச் சென்றபோது காணாமல் போனவர் ஆவார். ரோட் தீவின் பிராவிடன்ஸைச் சேர்ந்த மெக்கின்னியின் உடல் எச்சங்களோ அல்லது விமானம் விபத்துக்குள்ளான இடமோ கண்டறியப்படாத நிலையிலும், 1946 மார்ச் மாதத்தில் ராணுவம் அவரை இறந்தவராக அறிவித்தது. 

 ஆனால் தூதரகத்தின் அறிக்கை கூறுவது போல, அமெரிக்க ராணுவம் "எவரையும் விட்டுவிடக்கூடாது" என்ற புனிதமான வாக்குறுதியைக் கொண்டுள்ளது – அது பல தசாப்தங்களுக்குப் பிறகும் கூட. தற்செயல் நிகழ்வுகளும் கடின உழைப்பும் இந்தக் கண்டுபிடிப்பின் தொடக்கம் 2008-ஆம் ஆண்டிற்குச் செல்கிறது. 

கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள அமெரிக்க விமானப்படை அகாடமியில் அப்போதைய முதலாம் ஆண்டு மாணவராக (cadet) இருந்த டான் ஜாக்சன் (Dan Jackson), தனது இறுதி ஆண்டு ஆய்வுக் கட்டுரைக்காக உதவி கோரி ராயல் தாய்லாந்து விமானப்படை அருங்காட்சியகத்தின் அப்போதைய தலைவரான சாக்பினிட் ப்ரோம்தெப்பை (Sakpinit Promthep) தொடர்பு கொண்டார். 

அந்த ஆய்வு, இரண்டாம் உலகப் போரின்போது தாய்லாந்து வான்பரப்பில் சண்டையிட்ட சீனாவை தளமாகக் கொண்ட போர் விமானப் படைப்பிரிவின் வரலாற்றைப் பற்றியது. 

அவர்கள் இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். 2010-இல், ஜாக்சன் தனது முதல் புத்தகமான "மறக்கப்பட்ட படைப்பிரிவு" (Forgotten Squadron) என்பதை வெளியிட்டார். 

இது P-38 படைப்பிரிவின் சாதனைகளை விவரித்தது; இப்படைப்பிரிவு புகழ்பெற்ற 'ஃப்ளையிங் டைகர்ஸ்' (Flying Tigers) அமைப்பின் ஒரு பகுதியாகச் செயல்பட்டது. 'ஃப்ளையிங் டைகர்ஸ்' என்பது அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நுழைவதற்கு முன்பே, ஜப்பானை எதிர்த்துப் போரிட சீனாவிற்கு ஒரு விமானப்படையை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமெரிக்க தன்னார்வலர்களின் குழுவாகும். 

1944-வாக்கில், 'ஃப்ளையிங் டைகர்ஸ்' அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது, ஆனால் அப்போதும் அவை சீனாவில் உள்ள விமான தளங்களிலிருந்தே இயங்கின; மெக்கின்னி பணியிலிருந்த சீனாவின் யுன்னான் (Yunnan) பகுதியிலுள்ள தளமும் இதில் அடங்கும். தாய்லாந்தின் சியாங் மாய் (Chiang Mai) நகரில் வசிக்கும் ரிச்சர்ட் ஹாகன்சன் (Richard Hakanson) என்ற சுயாதீன அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜாக்சனின் ஆய்வுக்கு உதவினார்.

 "மர்மங்களை விடுவிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்" என்று ஜாக்சன் இவரைக் குறிப்பிடுகிறார். அந்தப் புத்தகம் வெளியான நிலையில், மெக்கின்னி உட்பட தாய்லாந்தில் நடந்த போரின்போது காணாமல் போன சில அமெரிக்க விமானிகளின் கதி என்ன என்பதை அறிய அந்த இருவரும் விரும்பினர். 

ஆனால், மெக்கின்னியின் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தைக் கண்டறிவதற்கான தடயங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. 2012-ஆம் ஆண்டு வரை நிலைமை அப்படித்தான் இருந்தது; ஆனால், இயல்பாகவே மிகுந்த ஆர்வம் கொண்ட ஜாக்சன், அருங்காட்சியகத்தில் இருந்த சாக்பினிட்டை மீண்டும் தொடர்பு கொண்டார். 

நவம்பர் 5, 1944 அன்று சியாங் மாய் (Chiang Mai) பகுதிக்கு அருகில் அமெரிக்க விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது தொடர்பான ஏதேனும் தகவல் தாய்லாந்திடம் உள்ளதா என்று அவர் கேட்டறிந்தார்.

அருங்காட்சியகத்திற்கு விடுதலைப் புலிகள் நினைவுப் பரிசு!

2008ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவ தளபதி ஜனக பெரேரா உள்ளிட்ட 31 பேரைக் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் படுகொலை செய்த வழக்கின் இரண்டாவது குற்றவாளிக்கு நீதிமன்றம் விசேட உத்தரவை பிறப்பித்துள்ளது.

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் நினைவுப் பரிசாக வழங்கிய ஒரு பொருளை எதிர்காலத்தில் உருவாக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு வழங்குமாறு குறித்த குற்றவாளிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சுவிட்சர்லாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட பெறுமதி மிக்க கைக்கடிகாரம், சைனைட் குப்பி உள்ளிட்ட சில பொருட்களையே இவ்வாறு ஒப்படைக்கும்படி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படுகொலை செய்த வழக்கின் மேன்முறையீட்டு மனு விசாரணை நேற்று இடம்பெற்றது.இதன்படி குறித்த வழக்கில் இரண்டாவது குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அனுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனைக்கு எதிராகக் குற்றவாளி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், அத்தண்டனையை உறுதி செய்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மதவாச்சி, சியம்பலாகஸ்கட பகுதியைச் சேர்ந்த முஹம்மது உமர் ஹபிதாப் (உமர் ஹபிதாப் என்றும் அழைக்கப்படுபவர்) என்பவரே இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியாவார். 

இவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த 48 குற்றச்சாட்டுகளில் 31 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, 2019 மே 21 அன்று அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி கேமா ஸ்வர்ணதிபதி இவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தார்.

Thank You Google

Thank You Google
Thanks