புதன், 17 ஜூன், 2026

சுரேஷ் சலே ஆடை இன்றி நிர்வாணமாக்கப்பட்டு சோதனை!!

அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் ஆடை இன்றி நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒப்புக்கொண்டுள்ளதாக சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.

சுரேஷ் தொடர்ந்து உண்பதோ, குடிப்பதோ இல்லை. அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை. நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. 

பேசுவதற்கும் சற்று சிரமப்படுகிறார். அவரால் தொடர்ந்து அமர்ந்திருக்க முடியாது. கைகளில் செலுத்தப்பட்டிருந்த ஊசிகள் காரணமாக கைகள் அனைத்தும் வீங்கியிருந்ததால், தற்போது அவற்றை அகற்றிவிட்டு வைத்தியர்கள் சிறு சிறு துளிகளாக திரவ ஆகாரங்களை வழங்கி வருகின்றனர். 

அதன் மூலமே வைத்தியர்கள் எப்படியோ அவரது உயிரைத் தக்கவைத்துள்ளனர்." கேள்வி: நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் மற்றும் நீங்கள் அழைக்கப்பட்டிருந்ததை நாங்கள் அவதானித்தோம். 

அப்போது அங்கு என்ன நடந்தது? அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா? "ஆம், நேற்று எங்கள் இரு தரப்பையும் அழைத்துப் பேசினார்கள். கடந்த முறை CID அதிகாரிகளால் வர முடியாமல் போனது, இந்த முறைதான் வந்திருந்தார்கள். 

முதன்முறையாக அவர்கள் ஒப்புக்கொண்டார்கள் – நாங்கள் கூறியது போலவே, சுரேஷைச் சிறை அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து, எல்லோர் முன்னிலையிலும் நிர்வாணப்படுத்தி சோதனை செய்ததை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். 

இவ்வளவு காலமாக அவர்கள் அதனை ஒப்புக்கொள்ளவில்லை, ஆனால் இப்போது அதனைச் செய்ததாக அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்."

யோஷித ராஜபக்ச கைது!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த விசாரணை ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

 அவரை நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டரீதியான காரணங்களினால் அவரால் முன்னிலையாக முடியாது என ஆணைக்குழுவுக்குக் கடிதம் மூலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து நடத்தவிருந்த தாக்குதல்!!

மெரிக்காவின் வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து நடத்தவிருந்த தொடர் கொடூரத் தாக்குதல்களை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) நிறுவனம் முறியடித்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் நடத்தவிருந்த தற்காப்புக் கலை போட்டித் தொடரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 தாக்குதல்தாரர்கள் வெடிபொருட்களை ஏற்றிய ட்ரோன்களைப் பயன்படுத்தி, இந்தத் தொடரைக் காண வருகை தரும் பெருந்திரளான மக்களை இலக்கு வைத்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக அரச தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் களமிறங்கிய பாதுகாப்புப் பிரிவினர், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே அதனுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்த அதே நாளில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 80ஆவது பிறந்தநாள் கொண்டாட்டமும் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எலோன் மஸ்க் போன்ற முக்கியஸ்தர்கள் இந்தத் தாக்குதல்தாரர்களின் இலக்காக இருந்ததாக கூறப்படுகின்றது. 

 இந்த நிலையில் அவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் நீட் வினாத்தாள்கள்!!

மருத்துவப் படிப்பிற்கான நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21- ஆம் தேதி மதியம் 02.00 மணி முதல் மாலை 05.15 மணி வரை நடைபெறவுள்ளது. கடந்த மே 3- ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த தேர்வை முழுமையாக ரத்துச் செய்வதாக மத்திய கல்வி அமைச்சகமும், தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையும் அறிவித்திருந்தனர். இந்த சூழலில் நீட் மறுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிவதை தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் டெல்லியில் இருந்து மதுரைக்கு ராணுவ பாதுகாப்புடன் விமானம் மூலமாக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் முதலாவது ஹெலிகாப்டர் வந்து இறங்கியுள்ளது. 

அஞ்சல்துறை சார்பில் வினாத்தாள் கொண்டுவர நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது. இந்த வினாத்தாள் பாரத ஸ்டேட் வங்கியில் இருக்கக்கூடிய லாக்கரில் வைக்கப்படவுள்ளது. மேலும் மற்றொரு ஹெலிகாப்டர் வர இருப்பதாக கூறப்படுகிறது. 

அதில் வரக்கூடிய வினாத்தாள்கள் கனரா வங்கியின் லாக்கரில் வைக்கப்படவுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 13,000- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் மறுதேர்வை எழுதுகின்றனர். இந்த வினாத்தாள்கள் ஜூன் 21ஆம் தேதி அன்று தேர்வு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

செவ்வாய், 16 ஜூன், 2026

கடற்படை முற்றுகையை நீக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவு!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே 100 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பாகிஸ்தான் மற்றும் கட்டார் நாடுகளின் தீவிர மத்திஸ்தத்துவத்தின் மூலம் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, லெபனான் உள்ளிட்ட அனைத்து முன்னணிகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க கடற்படையின் முற்றுகையை உடனடியாக நீக்குவதற்கும், சர்வதேச எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான ‘ஹோர்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) எவ்வித கட்டணமுமின்றி கப்பல் போக்குவரத்திற்காக திறப்பதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) முழுமையான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தீர்வாக அமையவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம், வரும் பெப்ரவரி அல்லாமல், ஜூன் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடராஜர் சிலை சர்ச்சை - கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரர்

நாடாளுமன்றில் பொய்யுரைக்கும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் உடனடியாக பதவி விலக வேண்டும் என சிதம்பரநாதன் மோகன் கோரியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைப்பதற்காக அனுமதிகள் கோரிய போது, அதனை கடற்தொழில் அமைச்சர் மறுத்திருந்தார்.

இது தொடர்பிலான செய்திகள் வெளியாகிய நிலையில், நாடாளுமன்றில் தான் அவ்வாறு மறுக்கவில்லை என பொய்யுரைத்துள்ளார்.இவ்வாறான பொய்யர்கள் அமைச்சராக பதவி வகிக்க முடியாது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என சிதம்பரநாதன் மோகன் கோரியுள்ளார்.

ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி-முதல்வர் விஜய்

கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி என்று தவெக அரசு அறிவித்திருந்தது.

முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி கோரி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் 25ம் தேதி 50,000/- வரை பயிர்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து பயிர் கடன் தள்ளுபடித் திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

மாநிலம் முழுவதிலுமிருந்து இவ்விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்ய உத்திரவிட்டதற்கிணங்க மேற்கண்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட நேற்று தலைமைச் செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இம்மறு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் மறு பரிசீலனை செய்யப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும்,
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர் கடன் பெற்ற 14.43 இலட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

Thank You Google

Thank You Google
Thanks