செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் எனத் தமிழ்க் குடும்பங்கள் முழுவதுமாகக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர்.
இது இலங்கையின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்திற்கான நிலையான சாட்சியாக விளங்கும் நிலையில், இதற்கு இலங்கை அரசும் சர்வதேச நாடுகளும் என்ன பதில் கூறப்போகின்றன என்று அவர் கேள்வி எழுப்பினார்.
செம்மணி புதைகுழி விவகாரம் மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய சந்தேகத்திற்குரிய புதைகுழிகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“தமிழ் இனத்தின் மீதான திட்டமிட்ட அழிவை இலங்கை அரசின் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தொடர்ச்சியாகச் செய்து வந்துள்ளனர். முன்னாள் ஆட்சியாளர்கள் எமது இனத்தை வன்முறையாக அழித்தமைக்கான அசைக்க முடியாத சாட்சிகள் இயற்கையின் நீதியால் இப்போது ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன.
செம்மணியில் தற்போதைய அகழ்வுகள் மூலம் வெளிவரும் உண்மைகள் உலகத்தையே உலுக்கியுள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளில் இன்னும் எத்தனையோ இடங்களில் இதுபோன்ற மனிதப் புதைகுழிகள் இரகசியமாக மூடிமறைக்கப்பட்டுள்ளன.
அவற்றை முறையாகத் தோண்டத் தொடங்கினால், இன்னும் பேரதிர்ச்சியைத் தரும் வகையில் மனித எலும்புக் குவியல்கள் தொடர்ந்து கிடைக்கும்.
குறிப்பாக முல்லைத்தீவு வட்டுவாகாலில் உள்ள விகாரைக்குக் கீழே அகழ்வு செய்தால், செம்மணியை விடப் பெரிய புதைகுழி வெளிச்சத்துக்கு வரும். இதற்காக விகாரையை உடைக்க வேண்டிய அவசியமில்லை.
நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி நிலத்தடியை ஸ்கேன் செய்வதன் மூலமே அங்கு எத்தனை ஆயிரக்கணக்கான எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாக அறிய முடியும்.
இதேபோல் கேப்பாப்பிலவு போன்ற இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பாரிய புதைகுழிகள் இருக்கலாம் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இன்றும் வாழ்கின்றனர்.
வடக்கு-கிழக்கின் பல இடங்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கூட்டமாகப் புதைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகத்திற்குரிய அனைத்துப் புதைகுழிகளும் சர்வதேச கண்காணிப்பின் கீழ் முழுமையாகத் தோண்டப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சர்வதேச சமூகம் நேரடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பாரபட்சமற்ற நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே எங்கள் முக்கிய எதிர்பார்ப்பு!
முல்லை வெளிச்சம்

