யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களில் சாதகமான முடிவுகளை எம்மால் வழங்க முடியும்.
அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை எமக்குள்ளது.
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கொண்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
அது உள்நாட்டு அரசியலாக இருந்தாலும் சரி, அல்லது சர்வதேச விவகாரங்களாக இருந்தாலும் சரி, அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கையின் அரசியலோடு தொடர்புடையவை. எனவே, எமது பேச்சுவார்த்தைகள் நேர்மறையான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆயினும், நாம் இன்னும் பல விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. இந்த அரசாங்கம் இலங்கை முழுவதும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தே நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, இந்த ஆட்சியில் நிலவும் ஊழல்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல செயல்பாடுகளுடன் நாங்கள் ஒருபோதும் உடன்படப் போவதில்லை.
அதனால்தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பொதுத் தளத்தை உருவாக்க முயல்கிறோம். எதிர்க்கட்சியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு அடையாளங்கள் உள்ளன, அவை குறித்தும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சியினர் வலுவான போராட்டங்களை முன்னெடுப்பதில்லை என்ற எண்ணம் உள்ளது அது முற்றிலும் தவறானது. கடந்த சில வாரங்களாக முக்கிய ஊடகங்களைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும், எமது மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் ஊடாக பல போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் எமது எதிர்க்கட்சித் தலைவர் போராட்டக் களங்களுக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் கீழ் அவர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார்.
நாடாளுமன்றத்தை ஒரு போராட்டக் களமாக நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.”
“தேசிய பாதுகாப்பு மற்றும் தற்போதைய சூழல் குறித்து எமது எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் மிகத் தெளிவான அறிக்கையை வழங்கியுள்ளார். அதுவே எமது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும். ஜனாதிபதி தற்போது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்.
ஆனால் எமக்கு ஒரு நிலையான கொள்கை உண்டு. எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் எப்போதும் போதுமான கையிருப்பு இருப்பதாகவே கூறி வருகிறது. ஆனால் திடீரென விலையை உயர்த்துகிறார்கள்.
போதுமான கையிருப்பு இருந்தால் ஏன் விலையை உயர்த்த வேண்டும்? இது ஒரு பெரிய கேள்வி. எதிர்காலத்தில் மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்படுமா என்பதை இப்போதே கணிக்க முடியாது. அது அந்த நெருக்கடியின் ஆழத்தைப் பொறுத்தே அமையும் என தெரிவித்தார்.

