மன்னாரில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில், தரம் 5 இல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் வகுப்பாசிரியரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
புலமைப்பரிசில் பரீட்சைக்கான விசேட வகுப்பின் போது, ஆசிரியர் கேட்ட கேள்விக்கு அந்த மாணவி தவறான பதிலை அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வகுப்பாசிரியர், சக மாணவர்கள் முன்னிலையிலேயே அந்தப் பிஞ்சுச் சிறுமியின் கன்னத்தில் பலமுறை பலமாக அறைந்துள்ளார்.
ஆசிரியரின் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலால், சிறுமியின் கன்னத்தில் இரத்தக் கசிவு மற்றும் பலத்த காயங்கள் (இரத்தக் கண்டல்கள்) ஏற்பட்டுள்ளன.
அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமியை மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தவறு செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே, இப்படி மிருகத்தனமாக நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!
சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உறவினர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


