ஞாயிறு, 28 ஜூன், 2026

தலைக்கூத்தல்: முதியவர்களை கொலை செய்யும் பழக்கம் வெளிச்சத்திற்கு வந்த கதை.

தலைக்கூத்தல் என்ற பெயரில் தமிழில் ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. 13ஆண்டுகளுக்கு முன் முதல்முறையாக தலைக்கூத்தல் என்ற சொல்லை நான் எதிர்கொண்டபோது, எனக்கு அது அதிர்ச்சியைத் தந்தது. விருதுநகர் மாவட்டத்தில், நோய்வாய்ப்பட்ட முதியவர்களை அவர்களின் பிள்ளைகளே எண்ணெய் குளியல் மூலமாக கொலை செய்யும் வழக்கத்திற்குப் பெயர்தான் தலைக்கூத்தல். 

இந்த கொலை பழக்கத்தை 2010ல் முதன்முதலில் செய்தியாக வெளியிட்டபின்னர், பல முதியவர்கள் தங்களது குடும்பத்தினர் விரித்த கொலை வலையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்குக் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் பழக்கம் தமிழ்நாட்டில் 1990களில் பரவலாக இருந்தது. 

அதுபோலவே 2010ல் விருதுநகர் மாவட்டத்தில் பல கிராமங்களில் தலைக்கூத்தல் என்ற முதியவர்களை கொலைசெய்யும் பழக்கம் இருந்தது. இது பற்றி தெரிய வந்ததும் முதியவர்களுக்குக் கொடுக்கப்படும் ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளதாகக் கூறி, கிராமங்களில் உள்ள முதியவர்கள் பலரிடம் பேசி தகவலைச் சேகரித்தேன். 

பல வீடுகளுக்கு ஏறி, இறங்கினேன். தலைக்கூத்தல் பற்றி கேட்டபோது, அது ஒரு சமூகப்பழக்கம், முடியாத நேரத்தில் தலைக்கூத்தல் செய்து முதியவரை 'அனுப்பி' வைப்பதில் தவறில்லை என்று பலரும் சொன்னார்கள். அதை கருணைக் கொலை என்றும் சொன்னார்கள். 

சில முதியவர்கள் தங்களது பெற்றோருக்கு தலைக்கூத்தல் செய்ததையும், தங்களது பிள்ளைகள் தங்களுக்கு செய்தாலும், அதில் தவறில்லை என்றும் சொன்னார்கள். இந்த செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பல நாட்களில் எனக்கு என் தாத்தாவின் பிம்பம் என் கண் முன் வந்துவந்து போனது. 

வேலை காரணமாக சென்னையில் குடியேறியிருந்தாலும், அவரிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசுவது, அவரை நலம் விசாரிப்பது என்ற புதிய பழக்கம் எனக்குள் வந்தது. மூன்று மாதங்களில் நான் விருதுநகரில் சந்தித்த பல முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரிடம் பேசியபோது, தலைக்கூத்தல் என்ற பழக்கம் இருப்பதை உறுதிப்படுத்த பல சான்றுகள் கிடைத்தன. ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரிடம் பேசியபோது, தனது நண்பர் ஒருவர் தனது மகன்கள் தலைக்கூத்தல் செய்யவுள்ளதைத் தெரிந்துகொண்டு தன்னிடம் அழுத கதையைச் சொன்னார். ''இரண்டு நாட்கள் கழித்து என் நண்பர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. 

அவர் தனது பிள்ளைகளால் கொல்லப்பட்டிருந்தார் என்று ஊரில் பலருக்கும் தெரியும். ஆனால் யாரும் புகார் கொடுக்கமாட்டார்கள். அப்படி புகார் கொடுத்தால் எங்கள் கிராமத்தில் பாதிப் பேர் இந்த பிரச்னையில் மாட்டிக்கொள்வார்கள்,'' என்றார். 

தனது இரண்டு மகன்கள் தனக்கு தலைக்கூத்தல் நடத்தப்போவதை உணர்ந்த பெருமாள் என்ற முதியவர் விருதுநகரில் இருந்து வெளியேறி பரமக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாக சொன்னார். ''என் மகன்கள் எனக்கு தலைக்கூத்தல் நடத்த முடிவு செய்திருந்தார்கள். கொஞ்சம் நடமாடும் நிலையில் இருப்பதால், நான் ஊரில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டேன். என்னை போல வாய்ப்பு கிடைக்காத பல முதியவர்கள் கொல்லப்படுவார்கள்,''என்றார். 

முதியவர் பெருமாளின் உரையாடல் என்னை உறையவைத்தது. அடுத்ததாக நான் சந்தித்த ஒரு நபர், தீபாவளி பண்டிகையின்போது தனது தந்தையை 'அனுப்பி'வைத்ததாகவும், பொங்கல் வந்தால் அம்மாவை 'அனுப்பி'வைக்கலாம் என்று முடிவுசெய்திருப்பதாகச் சொன்னார். ''எத்தனை காலத்திற்குதான் போகும் உயிரை பார்த்துக்கொண்டு இருப்பது...பண்டிகை தினங்களில் உறவினர்கள் பலர் இறப்புக்கு வரமாட்டார்கள், செலவு குறையும்,'' என்றார். 

இந்த பயணத்தில் பெற்றோரை கொலை செய்த பலரை நான் சந்தித்தேன். அவர்கள் அதிர்ச்சியை இரட்டிப்பாக்கினார்கள். எண்ணெய் குளியல் மட்டுமே அல்ல பலவிதங்களிலும் முதியவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். 

ஒரு சிலர் போலி மருத்துவர்களைக் கொண்டு ஊசி செலுத்துவதும் உண்டு. அதுபோன்ற ஊசி போடும் பெண் ஒருவரையும் சந்தித்தேன். என்னுடன் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பூங்கோதை என்ற தன்னார்வலர் என் அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டார். 

எனக்கு டெல்லியில் வேலை கிடைத்துவிட்டது என்பதால், நானும், அம்மாவும் செல்கிறோம், ஊரில் தாத்தாவை விட்டுச் செல்லமுடியாது, ஊசி போடமுடியுமா என்று கேட்டேன். அவரும் ஒத்துக்கொண்டார். ''தாத்தாவை 'அனுப்பி'வைக்க நல்ல நேரம் பார்த்துவிட்டு வா, உன் தாத்தா எப்படி இருக்கிறார் என்று பார்த்துவிட்டு, எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்கிறேன். 

நான்கு நாட்களுக்கு முந்திதான் ஒரு தாத்தாவுக்கு ஊசிபோட்டேன்,'' என்றார் அந்த பெண். இவற்றை ஆடியோ பதிவு செய்துகொண்டேன். விருதுநகர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான அசோகன் தனது உறவினர் குடும்பத்தில் நடந்த கொலையைப் பற்றி என்னிடம் வலியுடன் பகிர்ந்துகொண்டார். 

அவரின் உதவியால் கிராமங்களில் பல போலி மருத்துவர்கள் இருப்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது. அவரது உறவினர் 76 வயதான முதியவர் ஒருவரை அவரது குடும்பத்தினர் போலி மருத்துவரின் உதவியால் கொலை செய்திருந்ததை என்னிடம் தெரிவித்தார்.

பல சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு, கிராமங்களில் முதியவர்களை அவர்களின் குடும்பத்தினர் கொலை செய்வதைச் செய்தியாக வெளியிட்டவுடன், விருதுநகர் மாவட்ட அதிகாரிகள் ஊசி போடும் போலி மருத்துவர்களை முதலில் கைது செய்தார்கள். கிராமங்களில் தலைக்கூத்தல் பழக்கத்தைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முதியவர்களின் இறப்பை கிராம நிர்வாக அதிகாரிகள் கண்காணித்தனர். செய்தி வெளியிட்ட பிறகு எனக்கு சொந்தங்கள் பெருகின.

 பல முதியவர்கள் எனக்கு தொலைபேசியில் அழைத்து பேசினார்கள். அவர்கள் குடும்பங்களில் நடந்த கொலைகளைப் பற்றி விவரித்தார்கள். விருதுநகரில் இருந்து பல அழைப்புகள். அதில் ஒரு அழைப்பை இன்றும் என்னால் மறக்கமுடியாது. மும்பையில் வசிக்கும் ஒரு மகன், வயதான தாய் ஒருவருக்கு தலைக்கூத்தல் நிகழ்த்த முடிவுசெய்திருந்தார் என்றும் தலைக்கூத்தல் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்ததால், அந்த நிகழ்வை நிறுத்திவிட்டார் என்றும் தகவல் வந்தது. எனக்கு பெரிய திருப்தி கிடைத்தது. 

பல முதியவர்கள் தங்களது நட்பு வட்டத்தில் உள்ள முதியவருக்கு தலைக்கூத்தல் ஏற்பாடு செய்வது பற்றிய தகவல் தெரிந்தால் உடனே மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார்கள். அதனால், பல கொலைகள் நிறுத்தப்பட்டிருந்தன. 

இந்த செய்தியை தொடர்ந்து, பல முறை விருதுநகருக்குச் சென்றேன். எனக்கு ஒரு நட்பு வட்டம் உருவாகியிருந்தது. தன்னார்வலர் இளங்கோ மூலமாக ஹெல்ப்ஏஜ் இந்தியா தொண்டு நிறுவனம் முதியவர்கள் சுயஉதவி குழுக்களை ஏற்படுத்தியது.

 100க்கும் மேற்பட்ட அந்த சுயஉதவி குழுக்கள் மூலம் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் முதியவர்களுக்கு, நல்ல உடல்நலத்துடன் இருக்கும் முதியவர்கள் நண்பர்களாக மாறினார்கள். அந்த சுயஉதவி குழுக் கூட்டங்களுக்கும் சென்றுவந்தேன். முதியவர்கள் தங்களது பிள்ளைகளிடம் அஞ்சி இருந்த நிலை மாறி, தங்களது உரிமைகளைக் கேட்டுப் பெறும் முதியவர்களாக மாறியிருந்தனர்.

 அடுத்தடுத்த பயணங்களில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முதியவர்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் நடத்துவது, தேர்தல் காலங்களில் முதியவர்களின் உதவித்தொகை குறித்து அரசியல் தலைவர்களை சந்திக்க அவர்களை அழைத்துச்செல்வது என பல நிகழ்வுகளில் தொடர்ந்து அவர்களுடன் பயணித்தேன். 

பல பாட்டிகளின் அன்பு முத்தங்கள், பல தாத்தாக்களின் கனிவான அழைப்புகள் இன்றும் தொடருகின்றன. அவர்கள் சமீபமாக எனக்குப் பரிசளித்த ஒரு கைத்தறி துண்டு எனக்குக் கிடைத்த பெரிய விருதாக பார்க்கிறேன். 2012ல் வட இந்திய நடிகர் ஆமிர்கான் நடத்திய 'சத்தியமேவ ஜெயதே' என்ற நிகழ்ச்சியில் தலைக்கூத்தல் குறித்த செய்தியை பற்றி பேசவேண்டும் என்று கேட்டனர்.

 என்னுடைய அனுபவத்தைக் கேட்ட அமீர்கான், நிகழ்ச்சி முடிந்த பின்னர், என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, கண்கலங்கினார். ''பெற்றோர்களைக் கூட கொலை செய்ய துணிந்துவிட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்று முதலில் தோன்றியது. ஆனால் அதுபோன்ற சமூக அவலங்களை வெளிக்கொண்டுவர உங்களை போன்ற பேத்திகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது,''என்றார். 

சமீபமாக தன்னார்வலர் பூங்கோதையிடம் பேசியபோது, ''அந்த செய்தி வந்தபிறகு, தலைக்கூத்தல் குறைந்துவிட்டது. இப்போது அதுபோல யாரும் கொலை செய்வது இல்லை. முதியவர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு வந்துவிட்டது,''என்றார். 

அதேபோல, முதியவர்கள் தங்களது வீடுகளில் ஏதாவது துன்புறுத்தல்கள் இருந்தால்,காவல் நிலையத்திற்குச் செல்லவும் தயங்குவதில்லை என்றார். இந்த செய்தி சேகரிப்பின் ஊடாக சமூக மாற்றம் ஏற்பட்டதில் பெரிய மகிழ்ச்சி, அதேநேரம், எனக்குள் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டிருந்தது. 

முதியவர்களை நேசிக்கத் தொடங்கிய நான், என் தாத்தா ராமுவுக்கு பிரியமான தோழியாக மாறினேன். அவருக்காக நேரம் ஒதுக்கினேன். அவரின் இறுதிக் காலங்களில், அவருக்கு வாசிப்புப் பழக்கத்தில் ஆர்வத்தை ஊட்டி, அவரை கதை எழுத வைத்தேன், ஒரு புத்தகம் வெளியிடவைத்தேன். அவர் இறப்புக்கு முன்தினம் அவர் எழுத்தாளராக இருந்தார்.

லங்காவிசிறி கனடா

போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதை ஈரான் கண்டிக்கிறது.

ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள கண்காணிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீண்டும் மீறியதை ஈரான் வெளியுறவு அமைச்சகம் வன்மையாகக் கண்டித்தது. "ஜூன் 28, 2026 ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள பல கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் நிலையங்கள் மீது அமெரிக்காவின் பயங்கரவாத இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களை ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் வெளியுறவு அமைச்சகம் வன்மையாகக் கண்டிக்கிறது," என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 "ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரிவு 2-ன் பத்தி 4-ஐ அப்பட்டமாக மீறுவதாகவும், அதேவேளையில் ஜூன் 18, 2026 அன்று கையெழுத்தான, திணிக்கப்பட்ட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் பத்தியை வெளிப்படையாக மீறுவதாகவும் அமைந்துள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், அமெரிக்க நிர்வாகம் தனது உறுதிமொழிகளுக்கு மிகக் குறைந்த மதிப்பையும் நம்பகத்தன்மையையும் மட்டுமே அளிக்கிறது என்பதையும், உறுதிமொழிகளை மீறுவது அந்த நிர்வாகத்தின் இயல்பிலேயே உள்ளது என்பதையும் காட்டுகின்றன," என்று அந்த அறிக்கை கூறியது.

 "சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மற்றும் அதன் பொதுச் செயலாளரின் பொறுப்புகளை நினைவுகூரும் அதே வேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரிவு 51-க்கு இணங்க, அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈரானின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தனக்குள்ள உறுதியை ஈரானிய இஸ்லாமியக் குடியரசு வலியுறுத்துகிறது," என்று வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியது.

ஈரானின் ட்ரோன் களஞ்சியங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்க விமானப் படையினரால் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) களஞ்சியங்களை இலக்கு வைத்து தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

ஹோமுஸ் நீரிணையில் வைத்து கப்பல் ஒன்றின் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 மேலும், ஈரானின் கடலோர ரேடார் மையம் மீதும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், போர்நிறுத்த உடன்படிக்கையை ஈரான் மீண்டும் ஒருமுறை மீறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

 அவர்கள் ஒருபோதும் கற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது போல் தோன்றுவதாகவும், இனிவரும் காலங்களில் அவர்களுடன் நியாயமான முறையில் நடந்துகொள்ள முடியாது என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் சுகாதாரப் புரட்சி அமைச்சர் பச்சைக் கொடி !

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஏற்றுக்கொண்டுள்ளார். 


ஏனைய மாகாணங்களைப் போலன்றி, வடக்கில் மாவட்டப் பொது வைத்தியசாலைகளை மாகாண சபையின் கீழ் இயங்குவதைக் கருத்தில் கொண்டு, நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி விசேட மேலதிக நிதி ஒதுக்கீடுகள் பெற்றுத் தரப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

 வடக்கு மாகாண சுகாதாரத்துறை மேம்பாடு தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நேற்று (27.06.2026) மாலை நடைபெற்றது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

வடக்கு மாகாண சபை மொத்தம் 117 வைத்தியசாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. ஏனைய மாகாணங்களில் மத்திய அமைச்சால் நிர்வகிக்கப்படும் மாவட்டப் பொது வைத்தியசாலைகளை, வடக்கில் மாகாண சபையே நிர்வகிப்பதால் நிதிச் சுமை ஏற்படுகிறது.

 எனவே, மத்திய அமைச்சு ஏனைய மாவட்டப் பொது வைத்தியசாலைகளுக்குச் செலவிடும் அதே அளவிலான நிதியை வடக்கு மாகாண சபைக்கும் வழங்க வேண்டும். அத்துடன், பராமரிப்பு மற்றும் மூலதன ஒதுக்கீடுகள் போதாமையைக் கருத்தில் கொண்டு, மத்திய அமைச்சின் ஊடாகப் பல வருட மூலதன முதலீட்டுத் திட்டமொன்றை உருவாக்க வேண்டும்.

 கிளிநொச்சி விசேட பெண்கள் வைத்தியசாலைக்கெனப் புதிதாக அனுமதிக்கப்பட்ட 58 ஆளணிகளில், மத்திய அமைச்சின் கீழுள்ள 45 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வடக்கு - கிழக்கு மாகாணப் பிரிப்பின் பின்னர் வடக்கில் 1,500 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இழக்கப்பட்டுள்ளன. 55 பிரதேச வைத்தியசாலைகளில் 34 வைத்தியசாலைகள் தாதியர் இன்றி இயங்குகின்றன. 

11 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருக்கும் அடிப்படை நிலை ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் மற்றும் மருந்தாளுநர்களாக மாற்றப்பட வேண்டிய/நிரப்பப்பட வேண்டிய பகிர்ந்தளிப்பாளர் வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைகளில் நிலவும் விசேட வைத்திய நிபுணர் வெற்றிடங்களுக்குத் தற்காலிக இணைப்புகளுக்குப் பதிலாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். 

தாதியர்கள் கட்டாய சேவையின் பின்னர் வடக்கிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க, அவர்களுக்கான குறைந்தபட்ச சேவைக் காலத்தை நீட்டிக்க வேண்டும். வவுனியா வைத்தியசாலையின் பழுதடைந்த சி.ரி.ஸ்கேனரை மாற்றுவதுடன், மன்னார் வைத்தியசாலைக்குப் புதிய சி.ரி. ஸ்கேனர் வழங்கப்பட வேண்டும். 

தெல்லிப்பழை கதிரியக்கத் தொகுதி மற்றும் செட்டிகுளம் சிறுநீரக நோய் மத்திய நிலையம் போன்ற இடைநிறுத்தப்பட்ட செயற்றிட்டங்களை நிறைவு செய்ய உடனடி நிதி தேவை. 

அத்துடன், பழுதடைந்துள்ள நோயாளர் காவு வண்டிகள் மாற்றப்பட வேண்டும். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை 'தேசிய வைத்தியசாலையாக' மாற்றுவதை உறுதியான இலக்காகக் கொண்டு அதன் உட்கட்டமைப்பு மற்றும் ஆளணியை மேம்படுத்த வேண்டும். தெல்லிப்பழையை மாவட்டப் பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்த வேண்டும். 

மேலும் சங்கானை, சிலாவத்துறை, கோப்பாய் மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளின் தரமுயர்த்தல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். 

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் இணைந்து சிறப்பான முறையில் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றன. மத்திய சுகாதார அமைச்சு இதற்கென ஒதுக்கும் நிதியை மாகாண சபைக்கு வழங்கினால், வேலைத்திட்டத்தை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்க முடியும், என்றார் ஆளுநர். 

ஆளுநரின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த சுகாதார அமைச்சர், ஒவ்வொரு விடயத்துக்கும் சாதகமான பதில்களை வழங்கினார். வடக்கு மாகாணத்தின் தனித்துவமான நிர்வாகச் சுமையைக் கருத்தில் கொண்டு, நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், பராமரிப்புத் தேவைகளுக்கான நிதியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சனி, 27 ஜூன், 2026

ஈரான் போருக்கான கூடுதல் நிதியை வெள்ளை மாளிகை கோருகிறது.

ஹார்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினார்; மேலும், இது அமெரிக்காவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் "முட்டாள்தனமான மீறல்" என்றும் அவர் குறிப்பிட்டார். 

 ஒரு ட்ரோன் தாக்குதலால் கப்பலின் மேல் தளம் சேதமடைந்த போதிலும், அந்தக் கப்பலால் தொடர்ந்து பயணிக்க முடிந்தது என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார். அந்தக் கப்பலை குறிவைத்து வந்த வேறு மூன்று ட்ரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் கூறினார். 

 சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட பதிவில், பாதிக்கப்பட்ட கப்பல் அல்லது தாக்குதல் நடந்த நேரம் குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை; இருப்பினும், ஓமன் கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பல் ஏவுகணை அல்லது அது போன்ற ஒரு பொருளால் தாக்கப்பட்டதாக பிரிட்டிஷ் ராணுவம் வியாழக்கிழமையன்று தெரிவித்திருந்தது. 

போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவும் ஈரானும் ஈடுபட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மென்மையான ஒரு கட்டத்தில் இருக்கும்போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அமெரிக்காவுடன் கடந்த வாரம் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதிலும், ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு விவகாரத்தில் ஈரான் தொடர்ந்து அப்பிராந்தியத்திலும் அமெரிக்காவுக்கும் சவால் விடுத்து வருகிறது.

யாழில் யுவதியொருவரிடம் இராணுவ கப்டன் பாலியல் சேட்டை!

யுவதியொருவரிடம் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் இராணுவ கப்டன் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில், பயணித்த யுவதியிடம் ஒருவர் அங்க சேட்டை புரிந்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 


 இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி, யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியதை அடுத்து, விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் ஆரியகுளம் பகுதியில் வைத்து பேருந்தை மறித்து குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் 09ஆவது காலாட்படை பிரிவை சேர்ந்த கப்டன் தர அதிகாரி என தெரியவந்துள்ளது.இந்த நிலையில், சந்தேகநபரை யாழ்ப்பாண காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 920 ஆக உயர்வு.

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்றைய தினம் (27) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.< .
  ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமும் அந்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டே ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது கடந்த புதன்கிழமை வெனிசுலா ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு முகங்கொடுத்திருந்தது. அந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரையில் 900க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 920 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளதுடன், நிலநடுக்க இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் 243 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்களினால் 3,360க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த புதன்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்க நிலைமையினால் அந்நாட்டின் தலைநகரான கராகஸ் உள்ளிட்ட வடக்குப் பகுதியில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் தற்காலிக மருத்துவ வசதிகளின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

 நிலநடுக்கத்தின் பின்னர் மேலும் பலர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களைத் தேடும் நோக்கில் தற்போது தேடுதல் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதேவேளை, நிலநடுக்க மீட்புப் பணிகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளுக்காகப் பல சர்வதேச மீட்புப் பணியாளர்களும் வெனிசுலாவிற்கு வருகை தந்துள்ளனர். அத்துடன், முதலாவது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 214 அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அந்நாட்டின் தலைநகருக்கு வடக்கே அமைந்துள்ள 'லா குவைரா' (La Guaira) பகுதியே அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. 

மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த அனர்த்த நிலைமையைத் தொடர்ந்து அந்நாட்டின் 1,000க்கும் மேற்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்களால் வைத்தியசாலைகள் நிறைந்து காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Thank You Google

Thank You Google
Thanks