சனி, 12 செப்டம்பர், 2026

லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

லண்டனில் 17-வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீயை சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர். 


சனிக்கிழமை அதிகாலை 4.35 மணிக்கு பாப்லரில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்திற்கு லண்டன் தீயணைப்புப் படை வரவழைக்கப்பட்டது. "பாப்லரில் உள்ள பிளாக்வால் வேயில் உள்ள ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைக்க பத்து தீயணைப்பு வாகனங்களும் சுமார் 70 தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்," என்று அந்தப் படை கூறியது. 

பிளாக்வால் வேயில் உள்ள 22 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு அடுக்குமாடிக் கட்டிடத்தின் 17-வது மாடியில் உள்ள சொத்தின் பாதி சேதமடைந்தது. காலை 6.41 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

 "படையின் 999 கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிகாலை 04.35 மணிக்கு வரவழைக்கப்பட்டு, பாப்லர், வைட்சேப்பல், பிளைஸ்டோ, ஸ்ட்ராட்ஃபோர்ட், ஷாட்வெல், ஈஸ்ட் ஹாம், ஈஸ்ட் கிரீன்விச், பெத்னல் கிரீன் மற்றும் கிரீன்விச் தீயணைப்பு நிலையங்களிலிருந்து குழுக்கள் வரவழைக்கப்பட்டன."

ஞானசார தேரர் தலைமறைவு

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தாம் தங்கியிருந்த ராஜகிரிய ஸ்ரீ சதர்மராஜிக விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் தறைமறைவாகியுள்ளதாக தென்னிலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னர் உயர் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் சந்தியா ஏக்னலிகொடவை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக 2018 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையின் எஞ்சிய பகுதியை அனுபவிப்பதற்காக அவர் மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்றின் இத்தீர்ப்பு வெளியானதனைத் தொடர்ந்து அவர் விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், இதுவரை காவல்துறையினரோ அல்லது பாதுகாப்புத் தரப்பினரோ அவரைக் கைது செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கடலின் மோச்சா துறைமுகம் ஹவுதி வசம்

செங்கடலின் முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்துள்ள ஏமனின் மோச்சா துறைமுகத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த நடவடிக்கையால் செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

குறிப்பாக, சர்வதேச சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கு இந்தச் சம்பவம் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற போரில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் கடுமையாகப் பலவீனமடைந்தன.

இதன் பின்னணியில், மத்திய கிழக்கில் தனது செல்வாக்கைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவுக்கு அழுத்தம் கொடுக்கவும் ஈரான் தற்போது ஏமனின் ஹவுதி அமைப்பையும் ஈராக் ஆயுதக் குழுக்களையும் அதிகமாகப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மோச்சா துறைமுகம், உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் பல்வேறு சரக்குகள் கொண்டு செல்லப்படும் பாப் அல்-மந்தெப் கடல் பாதைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த முக்கியமான கடல் வழித்தடத்துக்கு அருகிலுள்ள துறைமுகத்தை ஹவுதிகள் கைப்பற்றியிருப்பதால், செங்கடலில் பயணிக்கும் சர்வதேச சரக்குக் கப்பல்களை அவர்கள் எளிதில் குறிவைக்க முடியும் என்று கூறப்படுகிறது. 

இதனால், கப்பல் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகப் போக்குவரத்து தொடர்பாக புதிய அச்சம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களின் பின்னணியில், ஈராக் ஆயுதக் குழுக்களும் ஹவுதிகளும் இணைந்து செயல்பட்டதாக சவுதி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. 

எனினும், ஹவுதிகள் தங்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அவர்கள் சுயமாகவே செயல்பட்டு வருகிறார்கள் என்றும் ஈரான் அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மோதலால் செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.

ஏஐ மூலம் பேரழிவு முயற்சி

ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மனித குலத்திற்கு பேரழிவு ஏற்படுத்த சீனா ரஷ்யா ஈரான் முயற்சி செய்தது அம்பலம் ஆகி உள்ளது. ஆந்த்ரோபிக் என்ற அமெரிக்க ஏஐ நிறுவனம் உருவாக்கிய ‘கிளாட்’ என்ற செயற்கை நுண்ணறிவுச் செயலியை சீனா, ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் தவறான வழிகளில் பயன்படுத்த முயற்சித்துள்ளன. 

உளவு பார்ப்பதற்கும், ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை தயாரிப்பதற்கான தகவல்களைப் பெறுவதற்கும் ஏஐ-ஐப் பயன்படுத்தியுள்ளனர். அறிக்கையின் பின்னணி: இதை ஆந்த்ரோபிக் நிறுவனம் கண்டறிந்து, தனது அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து எச்சரித்துள்ளது. 

சுருக்கமாகச் சொன்னால், பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கில் ஏஐ தொழில்நுட்பத்தை இந்த நாடுகள் தவறாகப் பயன்படுத்தியிருப்பதை ஆந்த்ரோபிக் நிறுவனம் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அதிக ஆற்றலைப்பெற்று வரும் வேளையில், அதன் முறைகேடான பயன்பாட்டின் ஆபத்தும் தீவிரமடைந்து வருகிறது. 

பிரபல ஏஐ நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ வெளியிட்டுள்ள புதிய பாதுகாப்பு அறிக்கையில், தனது ‘கிளாட்’ மாதிரியை பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் உயிரியல் ஆயுத ஆராய்ச்சி, தீவிர கண்காணிப்பு, உளவு வேலை, சைபர் தாக்குதல், ஆயுத உருவாக்கம் மற்றும் போலி பிரச்சாரங்களுக்காக பயன்படுத்த முயன்ற பல சம்பவங்களை அம்பலப்படுத்தியுள்ளது. 

2025 டிசம்பர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்ட பல முறைகேடு சம்பவங்களை இந்த அறிக்கை விரிவாக விளக்குகிறது. அரசு ஆதரவு பெற்ற குழுக்கள், நிதி ஆதாயத்திற்காக சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், பிரச்சார அமைப்புகள், ஸ்பைவேர் விற்பனையாளர்கள் மற்றும் அரசியல் நோக்கங்களைக் கொண்ட அமைப்புகள் இந்த முறைகேடு முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாக ஆந்த்ரோபிக் தெரிவித்துள்ளது. கிளாட் ஹைக்கூ சொனெட் மற்றும் ஓபஸ் ஆகிய மாதிரிகள் இந்தச் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 இவை வழக்கமான முறைகேடு சம்பவங்கள் அல்ல என்றும், இதுவரை கண்டறியப்பட்டவற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் புதிய வடிவிலான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. அபாயகரமான உயிரியல் ஆராய்ச்சிகள்: ஆந்த்ரோபிக் அறிக்கையில் உள்ள மிகவும் உணர்திறன் வாய்ந்த வழக்குகள் உயிரியல் ஆராய்ச்சி தொடர்பானவையாகும். சில விஞ்ஞானிகள் கிளாட்டின் உதவியுடன் அபாயகரமான வைரஸ்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய முயன்றது கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த மே மாதத்தில், விஞ்ஞானி ஒருவர் சிக்குன்குனியா வைரஸ் குறித்த ‘கெய்ன் ஆஃப் பங்க்ஷன்’ (Gain of Function) ஆராய்ச்சிக்கு நிதி உதவி கோரும் விண்ணப்பத்தை தயாரிக்க கிளாட்டின் உதவியை நாடியிருந்தார். 

உயிருள்ள விலங்குகளில் வைரஸை மீண்டும் மீண்டும் தொற்ற வைத்து, அதன் அபாயகரமான குணங்களை அதிகரிக்கும் மரபணு மாற்றங்களை உள்ளடக்கிய ஆராய்ச்சியாக இது இருந்தது என்று ஆந்த்ரோபிக் தெரிவித்துள்ளது. 

இந்த ஆராய்ச்சி ஒரு ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகமும் அந்நிறுவனத்திற்கு எழுந்தது. கிளாட்டின் உயிரியல் பாதுகாப்பு அமைப்பு இந்த கோரிக்கையை தடுத்த போதிலும், பயனர்கள் மற்றொரு மூன்றாம் தரப்பு AI சேவையைப் பயன்படுத்தி கட்டுப்பாடுகளை மீற முயன்றதாக அறிக்கை கூறுகிறது.

 மற்றொரு சம்பவத்தில், ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்களின் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பது குறித்த நிதி உதவி விண்ணப்பம் கிளாட் ஓபஸ் மூலம் சுமார் ஒரு மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டது. 

இதேவேளையில், பறவைக் காய்ச்சல் வைரஸை பாலூட்டிகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் வகையில் ஆராய்ச்சி செய்து வந்த மற்றொரு ஆராய்ச்சியாளருக்கு, ஆந்த்ரோபிக்கின் திறன் குறைந்த மாதிரியை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதுதவிர, விஷம் அல்லது நச்சுக்களின் அமைப்பை மாற்றியமைக்கும் இரண்டு அரசு ஆதரவு திட்டங்களையும் தடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

30 நாள் பரிசீலனையில் அரசுடன் தொடர்புடைய சுமார் 35 உயிரியல் ஆராய்ச்சி முயற்சிகள் கண்டறியப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை சிவில் ஆராய்ச்சிகளாக இருந்தபோதிலும், சில ‘இரட்டை பயன்பாடு’ தன்மையைக் கொண்டிருந்தன. 

ஏவுகணை மற்றும் ட்ரோன் உருவாக்கத்திற்கும் கிளாட் பயன்பாடு: உயிரியல் ஆயுதங்கள் மட்டுமன்றி, பாரம்பரிய ஆயுதங்களை உருவாக்குவதற்கும் கிளாட் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. சீனாவில் மூன்று, ரஷியாவில் இரண்டு மற்றும் ஏமனில் ஒன்று என மொத்தம் பல சம்பவங்களை ஆந்த்ரோபிக் அடையாளம் கண்டுள்ளது. 

ஏமனில் இருந்த ஒரு குழு, கிளாட் குறியீட்டைப் பயன்படுத்தி வழிகாட்டுதல், வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கான மென்பொருளை உருவாக்க முயன்றது. வழிகாட்டப்பட்ட ராக்கெட், 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை அடையும் நோக்கத்திலான பலகட்ட பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஹைப்பர்சோனிக் கிளைட் வாகனத்தின் மறுவடிவமைப்பு தொடர்பான பணிகளும் நடந்ததாக அறிக்கை கூறுகிறது. 

வழிகாட்டப்பட்ட ராக்கெட்டின் சோதனை ஏவுதல் நடந்தபோதிலும், அது தோல்வியடைந்திருக்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷியாவில் ‘ட்ரோன்டாக்’ அல்லது ‘செராஃபிம்’ என்ற முயற்சியுடன் தொடர்புடைய ஒரு நபர், கிளாட் குறியீட்டைப் பயன்படுத்தி தானியங்கி எஃப்.பி.வி கமிகேஸ் ட்ரோன் கூட்டங்களை உருவாக்க முயன்றதாக ஆந்த்ரோபிக் கூறியுள்ளது. மனிதக் கட்டுப்பாடு இன்றி இலக்கைத் தேர்ந்தெடுத்துத் தாக்கும் திறன் கொண்ட அமைப்பை உருவாக்க முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறது.

எல் நினோ நாட்டில் 8 மாவட்டங்களில் 1.6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (12) காலை வெளியிட்ட அண்மைய தரவு அறிக்கையின்படி, நாடு முழுவதிலும் உள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து குடிநீர் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதற்கமைய 36 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வாழும் 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 நபர்களுக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக இன்று காலை (12) சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெறுகிறது. 

 அநுர அரசு பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளை செயற்படுத்தவில்லை என்கின்ற அடிப்படையில் இந்த போராட்டம் சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்படுகிறது. 

அத்துடன் அரசியல் கைதிகளுடைய விடுதலை, கையகப்படுத்தியிருக்கக்கூடிய காணிகளை விடுவித்தல், செம்மணி புதைகுழிக்கான நீதி கோரல், மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்டத்தில் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

வெளிநாடுகளிலும் சில தமிழர்கள் அநாகரிகக் கூத்துகள்!!

இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா , பிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளுக்குப் பிழைப்பு தேடிச் சென்றுவிட்டு, அங்கே நிலவும் உயரிய நாகரிகச் சூழலையும் மீறிச் சில தமிழர்கள் நிகழ்த்தும் அநாகரிகக் கூத்துகள் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் மீதும் கரும்புள்ளியைப் பூசி வருகின்றன. கல்வியிலும், தொழிலும், வியாபாரத்திலும் நமது இனத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கானோர் சிறந்து விளங்கி, தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கும் சொந்த இனத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். 


 ஆனால், இந்த நல்மதிப்பைத் தூக்கியெறிந்துவிட்டு, சில காட்டுமிராண்டித்தனமான செயல்களைச் செய்யும் ஒரு சிறு கூட்டத்தால் ஒட்டுமொத்தச் சமூகமும் தலைகுனிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நம்பிக்கைகளும் வழிபாடுகளும் அவரவர் தனிப்பட்ட உரிமை; அது நான்கு சுவர்களுக்குள் அல்லது அதற்கென ஒதுக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்குள் இருக்கும் வரை யாருக்கும் எந்தத் தொல்லையும் இல்லை. 

 ஆனால், அதை விடுத்து நாகரிகமான ஒரு நாட்டின் நடுத்தெருவில் கொண்டு வந்து இறக்குவதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம். UK போன்ற ஒரு ⁠Civilized Society⁠-யில் போய், தங்களின் மூன்றாம் உலக நாட்டு ⁠Uncivilized, Barbaric Attitude⁠-களைக் காட்ட முற்படும்போதுதான் அங்கே மிகப்பெரிய முரண்பாடு வெடிக்கிறது. பக்தி என்ற பெயரிலும் கலாச்சாரப் பேரணி என்ற பெயரிலும் ரோட்டுகளில் உருண்டு, முதுகில் கோரமாக முள்ளில் குத்திக்கொண்டு, தூக்கு காவடி ஆடுவதும், போக்குவரத்தை முழுமையாக ஸ்தம்பிக்க வைத்து தேர் இழுப்பதும் எந்த வகையில் நாகரிகம்? 

அங்கே வாழும் உள்ளூர் மக்கள் முகஞ்சுளிக்கும் படியும், "இவர்கள் இன்னும் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து மாறவில்லை" என்று முகம் திருப்பும் படியும் நடந்து கொள்வது எத்தகைய மனநிலை? பிரிட்டிஷ்காரன் காலனித்துவ ஆட்சியில் விட்டுச் சென்ற நற்பண்புகளையும், நவீனச் சட்ட விதிகளையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல், காட்டுமிராண்டித்தனமான பழக்கவழக்கங்களை வெளிநாடுகளிலும் கட்டிக்கொண்டு அழுவது நாம் இன்னும் நாகரிகமடையவில்லை என்பதையே அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

இத்தகைய பொறுப்பற்ற செயல்களால்தான் இன்றைக்கு சமூக ஊடகங்களில் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் மீது கடுமையான வெறுப்பு விஷம் கக்கி வரப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் மக்களைக் குறிவைத்து இனவெறித் தாக்குதல்கள் நடப்பதற்கும், இணையத்தில் அவர்களை மட்டம் தட்டிப் பேசுவதற்கும் இதுபோன்ற செயல்களும் ஒரு மறைமுகக் காரணமாக அமைந்துவிடுகின்றன. Generalisation தவறு என்றாலும்...: 

எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒரு சிலரின் மடையத்தனமான செயல்களுக்காக ஒட்டுமொத்தச் சமூகத்தையும் குறைசொல்வது தவறுதான். ஆனால், அந்தத் தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல் "எங்கள் இஷ்டம், நாங்கள் இப்படித்தான் இருப்போம்" என்று திமிர் காட்டுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? 

ஜப்பானில் குப்பைகளைச் சொந்த மாணவர்களே தூய்மைப்படுத்துகிறார்கள். ஆனால், நம் ஊரிலோ எங்கு குப்பை போட்டாலும் அதை எடுக்க ஒருவன் இருக்கிறான் என்ற அலட்சியம் சிறு வயதிலிருந்தே நம் ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. 

அந்தத் திமிரையும் குப்பை மனநிலையையும் அப்படியே வெளிநாடுகளுக்கும் தூக்கிச் சென்று, அங்குள்ள சுத்தமான பொதுவெளிகளை நாசம் செய்வது எந்தச் சட்டத்தின்படி நியாயம்?

நம்மவர்களில் பலருக்குச் சிறிதும் இல்லாதது இந்த Civic Sense எனப்படும் பொதுவெளிப் பொறுப்புணர்ச்சிகள்தான். ஒரு நாட்டின் சட்டதிட்டங்களையும், பொதுமக்களின் அமைதியையும் மதிக்கத் தெரியாமல், அதிக சத்தத்துடன் ஸ்பீக்கர்களை வைத்துக்கொண்டு பொதுவெளியில் ஆடுவதும் கூச்சலிடுவதும் சுதந்திரம் அல்ல.

அது அடுத்தவனின் உரிமையைப் பறிக்கும் அநாகரிகம். இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களால்தான் வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான இனத்துவேசம் தலைதூக்கக் காரணமாக அமைகிறது. "இவர்கள் நம் நாட்டுக்கு வந்து நம் அமைதியைக் கெடுக்கிறார்கள், நம் கலாச்சாரத்தை மதிக்கத் தெரியாதவர்கள்" என்ற எண்ணம் அங்கே உள்ளூர் மக்களிடையே ஆழமாக வேரூன்ற இதுவே வழிவகுக்கிறது.

மற்றவர்களின் சுதந்திரத்திற்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்காத வகையில் ஒரு சமூகத்தின் கலாச்சாரம் இருக்க வேண்டும். அதை மீறி, "இது எங்கள் கலாச்சாரம், நாங்கள் இப்படித்தான் இருப்போம்" என்று திமிர் காட்டுவது நம்மை நாமே தரம் தாழ்த்திக் கொள்வதற்குச் சமம். வெஸ்டர்ன் மக்களிடமிருந்து நாம் எல்லாவற்றையும் குருட்டுத்தனமாகப் பின்பற்ற வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. 

ஆனால், ஒழுக்கம், பொதுவெளிப் பொறுப்பு, அடுத்த மனிதனின் அமைதிக்கு இடையூறு செய்யாதிருத்தல் போன்ற அடிப்படை நாகரிகங்களைக் கற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அங்கே கட்டப்பட்டுள்ள உயரமான கட்டிடங்களிலோ அல்லது நவீன தொழில்நுட்பங்களிலோ மட்டும் அடங்கிவிடுவதில்லை.

அந்த நாட்டு மக்கள் ஒருவருக்கொருவர் எத்தகைய மரியாதையுடன் நடக்கிறார்கள் என்பதில்தான் அந்தச் சமூகத்தின் உண்மையான நாகரிகம் அடங்கியிருக்கிறது. அதிகாரமும், பணமும், கூட்டமும் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பொதுவெளியில் செய்யலாம் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, வாழும் நாட்டின் சட்டங்களையும் விதிகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

 கலாச்சாரத்தைக் காப்பது என்பது ஊருக்கு நடுவே காது செவிடுபடும் அளவுக்குக் கத்துவதிலோ, போக்குவரத்தை மறித்து ஊர்வலம் நடத்துவதிலோ இல்லை; மாறாக, நம்முடைய நற்பண்புகளாலும், பொறுப்பான நடத்தையாலும் பிறர் நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பதில்தான் இருக்கிறது. இனியாவது இந்த மூடத்தனமான, நாகரிகமற்ற பழக்கவழக்கங்களை வெளிநாடுகளிலும் அரங்கேற்றுவதை விடுத்து, பொறுப்புள்ள நாகரிகக் குடிமக்களாக நடந்து கொள்ளப் பழக வேண்டும். 

இல்லையேல், வெளிநாட்டவர்கள் நம்மைத் துச்சமாக மதிப்பதற்கும், நம் மீது இனத்துவேசம் கக்குவதற்கும் நாமே முழுக்காரணமாக இருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து திருந்துங்கள்.

ஒரு சிந்தனைக்கு: மாற்றம் என்பது அரசாங்கத்தாலோ அல்லது சட்டத்தாலோ மட்டும் வந்துவிடாது. நம்முடைய மனநிலையிலும், அன்றாடப் பழக்கவழக்கங்களிலும்தான் அது தொடங்க வேண்டும். வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சரி, ஊரில் வாழ்ந்தாலும் சரி , நம்முடைய செய்கை நம் இனத்திற்கு பெருமையை தர வேண்டுமே தவிர, கேவலத்தைத் தேடித்தரக் கூடாது.

முகிந்தன் துரைராஜசிங்கம்

Thank You Google

Thank You Google
Thanks