வெள்ளி, 4 செப்டம்பர், 2026

தியாகிகளின் இரத்தம் மறக்கப்படாது: ஐ.ஆர்.ஜி.சி தலைவர்

தெஹ்ரான் (தஸ்னிம்) – அமெரிக்கக் குற்றப் படைகளால் கொல்லப்பட்ட நமது தியாகிகளின் அப்பாவி இரத்தம் மறக்கப்படாது என்றும், அந்த இரத்தச் சிந்தல் தண்டிக்கப்படாமல் போகாது என்றும் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) தளபதி கூறினார். 


வியாழக்கிழமை அன்று வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள ஒரு கடலோர நகரத்தில் திருமண விழா ஒன்றின் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்திய, பயங்கரவாத அமெரிக்க இராணுவத்தின் சமீபத்திய போர்க்குற்றத்தை மேஜர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி கண்டித்தார். ஹோர்முஸ் நீரிணையை ஒட்டியுள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் சிரிக் கவுண்டியில் உள்ள குஹெஸ்டாக் நகரில், ஒரு தனியார் இல்லத்தில் செவ்வாயன்று நடைபெற்ற திருமணக் கொண்டாட்டத்தின் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஒரு குழந்தை உட்பட நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 68 பேர் காயமடைந்தனர். 

இதனைத் தொடர்ந்து இந்தக் கண்டனங்கள் வெளியாகியுள்ளன. "மாண்புமிகு ஈரானிய தேசத்தின் வாழ்க்கையிலிருந்து மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அகற்றி, அப்பாவி பொதுமக்களிடையே பீதியை உருவாக்கும் நோக்கம் கொண்ட ஒரு பயங்கரவாத மற்றும் மனிதாபிமானமற்ற செயலில், அமெரிக்காவின் தீய மற்றும் அரக்க முகம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது," என்று மேஜர் ஜெனரல் வாஹிதி தனது செய்தியில் தெரிவித்தார்.

 "நமது அன்புக்குரிய தாய்நாட்டின் பாதுகாப்பான புகலிடத்தில், ஒரு திருமண விழாவில் கூடியிருந்த அப்பாவிப் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நிகழ்ந்த இந்தக் கொடூரமான குற்றம், புரட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்பின் எதிரிகளிடையே நிலவும் நீண்டகாலப் பகை மற்றும் வெறுப்பின் ஆழத்தையும், இந்த மண்ணின் மக்களின் உச்சகட்ட எதிர்ப்பு மற்றும் உறுதியான மனவுறுதிக்கு முன்னால் அவர்கள் அடைந்திருக்கும் கையறுநிலையையும் விரக்தியையும் காட்டுகிறது," என்று அவர் குறிப்பிட்டார். 

 இஸ்லாமியப் புரட்சியின் தலைவருக்கும், மாபெரும் ஈரானிய தேசத்திற்கும், குறிப்பாக இந்த மாபெரும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துயருற்ற மற்றும் வேதனையுறும் குடும்பங்களான உங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அப்பாவி தியாகிகளின் தூய இரத்தம் சிந்தப்பட்டது தண்டிக்கப்படாமல் போகாது என்று ஐ.ஆர்.ஜி.சி தலைவர் மேலும் கூறினார். 

 ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஐ.ஆர்.ஜி.சி மற்றும் பிற சக்திவாய்ந்த ஆயுதப் படைகள், திணிக்கப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது அமெரிக்க-சியோனிசப் போர்களில், குறிப்பாக ஹோர்முஸ் போரில், இஸ்லாமிய ஈரானின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்த அன்புக்குரியவர்கள் மற்றும் பிற தியாகிகளின் இரத்தத்தின் புனிதத்தைக் காத்து வந்துள்ளன.

 மேலும், அவை தங்களின் முழு பலத்துடனும் ஆற்றலுடனும் தேசத்தின் மற்றும் இஸ்லாமிய நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியின் பாதுகாவலர்களாகத் திகழும் என்று அவர் வலியுறுத்தினார். தியாகிகளின் நினைவு ஈரானிய தேசத்தின் வரலாற்று நினைவில் என்றென்றும் உயிருடனும் நித்தியத்துடனும் நிலைத்திருக்கும் என்று அவர் கூறி முடித்தார்.

மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழம் சிறுவன் பலி!!

மட்டக்களப்பு, வெல்லாவெளியில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

மட்டு வெல்லாவெளி காவல்துறை பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (03) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6ம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று மாலை எடுத்து உண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்ததையடுத்து அவரை உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதால் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

 இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட் படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.றுவன் மரத்தடியில் விழுந்து கிடந்த நாவற்பழத்தை எடுத்துச் சாப்பிட்டதாகவும், அதில் பாம்பின் விஷம் பட்டிருந்ததாலேயே இந்த மரணம் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. 

ஆனால், மருத்துவ மற்றும் விஞ்ஞான ரீதியாக ஆராயும்போது, பாம்பின் விஷம் பட்ட ஒரு பழத்தைச் சாப்பிட்டதால் ஒருவர் உயிரிழப்பது என்பது முற்றிலும் சாத்தியமற்ற ஒரு விஷயமாகும். இது மக்களிடையே நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு தவறான நம்பிக்கையே தவிர இதில் எந்த அறிவியல் உண்மையும் இல்லை. ​

இதற்கான முக்கிய காரணம், பாம்பின் விஷம் என்பது அடிப்படையில் சில புரதங்கள் மற்றும் நொதிகளால் ஆன ஒரு திரவமாகும். பாம்பு ஒருவரைக் கடிக்கும் போது அந்த விஷம் தோலினூடாக நேரடியாக இரத்தத்தில் கலப்பதால் மட்டுமே அது மனிதர்களுக்கு ஆபத்தாக மாறுகிறது. ஆனால், விஷம் பட்ட ஒரு பழத்தையோ அல்லது உணவையோ நாம் சாப்பிடும்போது, அது நேரடியாக நமது இரைப்பையைச் சென்றடைகிறது. 

நமது வயிற்றில் சுரக்கும் சக்திவாய்ந்த அமிலங்கள், சாதாரண உணவைச் செரிப்பது போலவே அந்த விஷத்திலுள்ள புரதங்களையும் சிதைத்து முற்றிலும் செயலிழக்கச் செய்துவிடும். விஷத்தை உண்பதும், அது நேரடியாக இரத்தத்தில் செலுத்தப்படுவதும் முற்றிலும் வெவ்வேறானவை. ​அப்படியானால் இந்த மரணத்திற்கான உண்மையான காரணம் என்னவாக இருக்கலாம் என்று சிந்தித்தால், வேறு சில நடைமுறைச் சாத்தியங்களே உள்ளன. 

சிறுவன் பழத்தைப் பொறுக்கும்போது, எறும்பு கடிப்பது போன்று மிகச் சிறிய வலியை மட்டுமே ஏற்படுத்தக்கூடிய கட்டுவிரியன் போன்ற கொடிய பாம்புகள் ஏதேனும் நேரடியாகக் கடித்திருக்கலாம், அதைச் சிறுவனும் உணராமல் விட்டிருக்கலாம். அல்லது கீழே கிடந்த பழத்தில் அல்லது அந்த நிலப்பகுதியில் வீரியமிக்க விவசாயப் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருக்கலாம். 

இது தவிர, திடீரென ஏற்பட்ட கடுமையான ஒவ்வாமை (அலர்ஜி) அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பாதிப்புகள் கூட இந்தத் திடீர் மரணத்திற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். ​எனவே, "பாம்பின் விஷம் பட்ட நாவல் பழம்" என்பது ஆரம்பக்கட்ட விசாரணையின் யூகமே தவிர, அது முடிவான உண்மையல்ல. 

சிறுவனின் உடற்கூற்றுப் பரிசோதனை (Post-mortem) முடிவுகள் மூலமாக மட்டுமே மரணத்திற்கான உண்மையான காரணத்தை மருத்துவத்துறையினரால் உறுதியாகக் கூற முடியும். அதுவரை தேவையற்ற அச்சத்தையும், அறிவியலுக்குப் புறம்பான தகவல்களையும் பகிர்வதைத் தவிர்த்து, துயரத்தில் இருக்கும் அந்தச் சிறுவனின் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்போம்.

நீலாங்கரை, உத்தண்டி பகுதிகளில் 21 பங்களாக்களுக்கு நோட்டீஸ்

துரைப்பாக்கம், செப்.4: கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட 21 சொகுசு வீடுகளுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. 

கிழக்கு கடற்கரை சாலை என்பது சென்னை திருவான்மியூரில் தொடங்கி கன்னியாகுமரி வரை நீண்டுள்ள ஒரு அழகிய மற்றும் முக்கியமான கடலோர சாலையாகும். இதில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடற்கரை ரிசார்ட்டுகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கலாச்சார மையங்கள், கேளிக்கை விடுதிகள் அதிகளவில் அமைந்துள்ளன. 

இந்த பகுதியின் கடற்கரையின் அழகை ரசிப்பதற்காக பல பிரபலங்களும், வசதி படைத்தவர்களும் கோடிக்கணக்கில் செலவு செய்து, கடற்கரை அருகில் சொகுசு பங்களாக்களை கட்டி உள்ளனர்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளில், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதியை மீறி கட்டப்பட்ட 21 சொகுசு வீடுகள் மற்றும் பங்களாக்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 அதாவது வீட்டின் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து வீடுகளை காலி செய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பிறகு கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, இடிக்கும் பணிகள் தொடங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த குடியிருப்போரின் மேல்முறையீட்டு மனுக்களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நிராகரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. 

கடற்கரை ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி, 1991ம் ஆண்டுக்கு முன்பு ஏற்கனவே இருந்த சாலைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட உள்கட்டமைப்பு சார்ந்த உட்புற பகுதியில் உள்ள நிலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி உண்டு.

 இங்கு அனுமதிக்கப்பட்ட தரையமைப்பு குறியீடு 0.8 ஆகும். ஆனால் கடலோரப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட தள பரப்பளவு குறியீடு 0.8 அளவுக்கு மேல் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பது மற்றும் உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 

 அதாவது, 192, 194 மற்றும் 197 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பல கட்டிடங்கள் 0.8க்கும் அதிகமான அனுமதிக்கப்பட்ட தரையமைப்பு குறியீடு அளவை கொண்டு விதிமுறைகளை மீறியுள்ளன.கடற்கரையோரம் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வீடுகள், கட்டிடங்கள் இருக்கக் கூடாது என்ற தீர்ப்பு சில வருடங்களுக்கு முன்பு நீதிமன்றம் வழங்கியது. 

இதை தொடர்ந்து நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி ஆகிய பகுதிகளில் கடற்கரை அருகில் உள்ள வீடுகளை சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 798 வீடுகள் விதிகளை மீறி கட்டப்பட்டு உள்ளதாக தெரியவந்தது. இதுகுறித்த விவரங்களை, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையிடம் மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.

கடலோர ஒழுங்கு முறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை அறிந்த 440 வீடுகளின் உரிமையாளர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையிடம் மேல் முறையிடு செய்து மனு அளித்தனர். 

அதில் 24 வீடுகளின் மனுக்களை தள்ளுபடி செய்த தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை 21 வீடுகளை அகற்ற சென்னை மாநகராட்சி 15வது மண்டத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. 

இதையடுத்து 21 வீடுகளுக்கு சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு மண்டல உதவி கமிஷனர் லோகேஸ்வரன் தலைமையில் செயற்பொறியாளர் மனோகரன் மற்றும் உதவி பொறியாளர்கள் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கினார்.

நாமல் ராஜபக்‌ஷவுக்கு இலஞ்ச,ஊழல் ஆணைக்குழு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார். இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வியாழன், 3 செப்டம்பர், 2026

மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி

மலையக மக்கள் நாட்டிற்கு வருகை தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அவர்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் கூடிய சொந்த வீடொன்றையும் நிரந்தர முகவரியையும் வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அசாதாரண சூழ்நிலையினால் வீடுகளை இழந்த மக்களுக்காக பாலிந்தநுவர, பெலேத மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் முஹமதியாவத்தை புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 17 வீடுகளை அமைக்கும் பணிகள் இன்று (03) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

 அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பும் கலந்துகொண்டார். 

முஹமதியாவத்தை புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு வீடு 34 இலட்சம் ரூபா செலவில் 17 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

 அவற்றில் 12 வீடுகள் பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழும், எஞ்சிய 5 வீடுகள் இந்திய வீட்டுவசதி உதவித் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலையீட்டுடனும் அமைக்கப்படவுள்ளன. 

 9 ஆண்டுகளாக கடும் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வீடற்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்காக இரு அமைச்சுகளின் கூட்டுப் பங்களிப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

 இதேவேளை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் “சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை” வீடமைப்பு உதவித் திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 16 பயனாளிகளுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதமான வீடமைப்பு உதவி காசோலைகளும் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

 மேலும், எதிர்வரும் ஆண்டிற்கான அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் வரலாற்றிலேயே அதிகபட்ச தொகையாக 2,000 பில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

 நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிரந்தர மற்றும் பாதுகாப்பான வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்றும், குறித்த வீடுகளை விரைவாக மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2026 பரீட்சையில் யாழ் சுரேந்தர் சபின் செய்த சாதனை

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்றுக் கொண்ட சுரேந்தர் சபின் தமிழ் மொழிமூலம் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்

யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் இவர், தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அதேநேரம் சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியது.

 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (2) மாலை வௌியாகின. இம்முறை அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 139 அமைந்துள்ளதுடன், பெறுபேறுகளுக்கு அமைய 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 

 கடந்த ஒகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சைக்காக 294,132 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுலா முன்னாள் ஜனாதிபதி மதுரோ மனு

அமெரிக்க நீதிமன்றத்தில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மனு தாக்கல் செய்துள்ளார். 

தன்னாதிக்கம் கொண்ட ஒரு நாட்டின் தலைவர் (Head of State) என்ற ரீதியில் தனக்கு சர்வதேச சட்டங்களின்படி குற்றவியல் நடவடிக்கைகளிலிருந்து முழுமையான விலக்குரிமை (Immunity) உள்ளதாக அவர் தனது மனுவில் வாதிட்டுள்ளார். அமெரிக்காவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 3-ஆம் திகதி காரகாஸ் நகரில் வைத்து மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

தற்போது புரூக்ளின் கூட்டாட்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதுரோவின் சட்டத்தரணி பாரி போலாக் (Barry Pollack), மன்ஹாட்டன் நீதிமன்ற நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டீனிடம் (Alvin Hellerstein) சமர்ப்பித்த மனுவில், “நூற்றாண்டுகளாக வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு உள்ள முழுமையான பாதுகாப்பை மீறி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

 2018 மற்றும் 2024 வெனிசுலா தேர்தல்கள் முறைகேடானவை என்று கூறி, 2019-ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்க ஜனாதிபதி நிர்வாகம் மதுரோவை அந்நாட்டின் முறையான ஜனாதிபதியாக அங்கீகரிக்க மறுத்து வருகிறது. 

இந்த மனு மீது அமெரிக்க அரசுத் தரப்பு எதிர்வரும் ஒக்டோபர் 2-ஆம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான விசாரணை நவம்பர் 17-ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நிராகரிக்கப்பட்டால், மதுரோ மீதான நீதிமன்ற விசாரணை 2027 ஜூன் 1-ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

Thank You Google

Thank You Google
Thanks