வெள்ளி, 11 செப்டம்பர், 2026

வெளிநாடுகளிலும் சில தமிழர்கள் அநாகரிகக் கூத்துகள்!!

இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா , பிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளுக்குப் பிழைப்பு தேடிச் சென்றுவிட்டு, அங்கே நிலவும் உயரிய நாகரிகச் சூழலையும் மீறிச் சில தமிழர்கள் நிகழ்த்தும் அநாகரிகக் கூத்துகள் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் மீதும் கரும்புள்ளியைப் பூசி வருகின்றன. கல்வியிலும், தொழிலும், வியாபாரத்திலும் நமது இனத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கானோர் சிறந்து விளங்கி, தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கும் சொந்த இனத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். 


 ஆனால், இந்த நல்மதிப்பைத் தூக்கியெறிந்துவிட்டு, சில காட்டுமிராண்டித்தனமான செயல்களைச் செய்யும் ஒரு சிறு கூட்டத்தால் ஒட்டுமொத்தச் சமூகமும் தலைகுனிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நம்பிக்கைகளும் வழிபாடுகளும் அவரவர் தனிப்பட்ட உரிமை; அது நான்கு சுவர்களுக்குள் அல்லது அதற்கென ஒதுக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்குள் இருக்கும் வரை யாருக்கும் எந்தத் தொல்லையும் இல்லை. 

 ஆனால், அதை விடுத்து நாகரிகமான ஒரு நாட்டின் நடுத்தெருவில் கொண்டு வந்து இறக்குவதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம். UK போன்ற ஒரு ⁠Civilized Society⁠-யில் போய், தங்களின் மூன்றாம் உலக நாட்டு ⁠Uncivilized, Barbaric Attitude⁠-களைக் காட்ட முற்படும்போதுதான் அங்கே மிகப்பெரிய முரண்பாடு வெடிக்கிறது. பக்தி என்ற பெயரிலும் கலாச்சாரப் பேரணி என்ற பெயரிலும் ரோட்டுகளில் உருண்டு, முதுகில் கோரமாக முள்ளில் குத்திக்கொண்டு, தூக்கு காவடி ஆடுவதும், போக்குவரத்தை முழுமையாக ஸ்தம்பிக்க வைத்து தேர் இழுப்பதும் எந்த வகையில் நாகரிகம்? 

அங்கே வாழும் உள்ளூர் மக்கள் முகஞ்சுளிக்கும் படியும், "இவர்கள் இன்னும் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து மாறவில்லை" என்று முகம் திருப்பும் படியும் நடந்து கொள்வது எத்தகைய மனநிலை? பிரிட்டிஷ்காரன் காலனித்துவ ஆட்சியில் விட்டுச் சென்ற நற்பண்புகளையும், நவீனச் சட்ட விதிகளையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல், காட்டுமிராண்டித்தனமான பழக்கவழக்கங்களை வெளிநாடுகளிலும் கட்டிக்கொண்டு அழுவது நாம் இன்னும் நாகரிகமடையவில்லை என்பதையே அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

இத்தகைய பொறுப்பற்ற செயல்களால்தான் இன்றைக்கு சமூக ஊடகங்களில் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் மீது கடுமையான வெறுப்பு விஷம் கக்கி வரப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் மக்களைக் குறிவைத்து இனவெறித் தாக்குதல்கள் நடப்பதற்கும், இணையத்தில் அவர்களை மட்டம் தட்டிப் பேசுவதற்கும் இதுபோன்ற செயல்களும் ஒரு மறைமுகக் காரணமாக அமைந்துவிடுகின்றன. Generalisation தவறு என்றாலும்...: 

எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒரு சிலரின் மடையத்தனமான செயல்களுக்காக ஒட்டுமொத்தச் சமூகத்தையும் குறைசொல்வது தவறுதான். ஆனால், அந்தத் தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல் "எங்கள் இஷ்டம், நாங்கள் இப்படித்தான் இருப்போம்" என்று திமிர் காட்டுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? 

ஜப்பானில் குப்பைகளைச் சொந்த மாணவர்களே தூய்மைப்படுத்துகிறார்கள். ஆனால், நம் ஊரிலோ எங்கு குப்பை போட்டாலும் அதை எடுக்க ஒருவன் இருக்கிறான் என்ற அலட்சியம் சிறு வயதிலிருந்தே நம் ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. 

அந்தத் திமிரையும் குப்பை மனநிலையையும் அப்படியே வெளிநாடுகளுக்கும் தூக்கிச் சென்று, அங்குள்ள சுத்தமான பொதுவெளிகளை நாசம் செய்வது எந்தச் சட்டத்தின்படி நியாயம்?

நம்மவர்களில் பலருக்குச் சிறிதும் இல்லாதது இந்த Civic Sense எனப்படும் பொதுவெளிப் பொறுப்புணர்ச்சிகள்தான். ஒரு நாட்டின் சட்டதிட்டங்களையும், பொதுமக்களின் அமைதியையும் மதிக்கத் தெரியாமல், அதிக சத்தத்துடன் ஸ்பீக்கர்களை வைத்துக்கொண்டு பொதுவெளியில் ஆடுவதும் கூச்சலிடுவதும் சுதந்திரம் அல்ல.

அது அடுத்தவனின் உரிமையைப் பறிக்கும் அநாகரிகம். இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களால்தான் வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான இனத்துவேசம் தலைதூக்கக் காரணமாக அமைகிறது. "இவர்கள் நம் நாட்டுக்கு வந்து நம் அமைதியைக் கெடுக்கிறார்கள், நம் கலாச்சாரத்தை மதிக்கத் தெரியாதவர்கள்" என்ற எண்ணம் அங்கே உள்ளூர் மக்களிடையே ஆழமாக வேரூன்ற இதுவே வழிவகுக்கிறது.

மற்றவர்களின் சுதந்திரத்திற்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்காத வகையில் ஒரு சமூகத்தின் கலாச்சாரம் இருக்க வேண்டும். அதை மீறி, "இது எங்கள் கலாச்சாரம், நாங்கள் இப்படித்தான் இருப்போம்" என்று திமிர் காட்டுவது நம்மை நாமே தரம் தாழ்த்திக் கொள்வதற்குச் சமம். வெஸ்டர்ன் மக்களிடமிருந்து நாம் எல்லாவற்றையும் குருட்டுத்தனமாகப் பின்பற்ற வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. 

ஆனால், ஒழுக்கம், பொதுவெளிப் பொறுப்பு, அடுத்த மனிதனின் அமைதிக்கு இடையூறு செய்யாதிருத்தல் போன்ற அடிப்படை நாகரிகங்களைக் கற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அங்கே கட்டப்பட்டுள்ள உயரமான கட்டிடங்களிலோ அல்லது நவீன தொழில்நுட்பங்களிலோ மட்டும் அடங்கிவிடுவதில்லை.

அந்த நாட்டு மக்கள் ஒருவருக்கொருவர் எத்தகைய மரியாதையுடன் நடக்கிறார்கள் என்பதில்தான் அந்தச் சமூகத்தின் உண்மையான நாகரிகம் அடங்கியிருக்கிறது. அதிகாரமும், பணமும், கூட்டமும் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பொதுவெளியில் செய்யலாம் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, வாழும் நாட்டின் சட்டங்களையும் விதிகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

 கலாச்சாரத்தைக் காப்பது என்பது ஊருக்கு நடுவே காது செவிடுபடும் அளவுக்குக் கத்துவதிலோ, போக்குவரத்தை மறித்து ஊர்வலம் நடத்துவதிலோ இல்லை; மாறாக, நம்முடைய நற்பண்புகளாலும், பொறுப்பான நடத்தையாலும் பிறர் நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பதில்தான் இருக்கிறது. இனியாவது இந்த மூடத்தனமான, நாகரிகமற்ற பழக்கவழக்கங்களை வெளிநாடுகளிலும் அரங்கேற்றுவதை விடுத்து, பொறுப்புள்ள நாகரிகக் குடிமக்களாக நடந்து கொள்ளப் பழக வேண்டும். 

இல்லையேல், வெளிநாட்டவர்கள் நம்மைத் துச்சமாக மதிப்பதற்கும், நம் மீது இனத்துவேசம் கக்குவதற்கும் நாமே முழுக்காரணமாக இருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து திருந்துங்கள்.

ஒரு சிந்தனைக்கு: மாற்றம் என்பது அரசாங்கத்தாலோ அல்லது சட்டத்தாலோ மட்டும் வந்துவிடாது. நம்முடைய மனநிலையிலும், அன்றாடப் பழக்கவழக்கங்களிலும்தான் அது தொடங்க வேண்டும். வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சரி, ஊரில் வாழ்ந்தாலும் சரி , நம்முடைய செய்கை நம் இனத்திற்கு பெருமையை தர வேண்டுமே தவிர, கேவலத்தைத் தேடித்தரக் கூடாது.

முகிந்தன் துரைராஜசிங்கம்

இந்தியா நான்கு நாள் வங்கி முடக்கம்

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, நான்கு நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும், சாதாரண ஊழியர்களுக்கு காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கையை மாற்ற வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள் நாடு முழுவதும் நாளை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி என, தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழகப் பொதுச்செயலாளர் ரோஷன் கார்க்கி கூறியதாவது: வங்கி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் உயர் அதிகாரிகளுக்கும், சாதாரண ஊழியர்களுக்கும் இடையே காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கைகளைக் கண்டித்தும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், இரண்டு கட்ட வேலைநிறுத்தப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், வரும் 28 முதல் 30-ம் தேதி வரை மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தமும் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை டெல்லியில் !!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை (12) மற்றும் நாளை மறுதினங்களில் (13) டெல்லியில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டிற்கு 4-வது முறையாக இந்தியா தலைமை ஏற்கிறது. 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், தென் ஆபிரிக்கா ஜனாதிபதி சிரில் ரமபோஸா, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தேல் பட்டா எல் சிசி, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது, இந்தோனேஷியாஜனாதிபதி பிரபாவோ சுபியான்டோ, யுஏஇ சார்பில், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல்நஹ்யான், பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியிரா ஆகியோர் பங்கேற்கின்றனர். 

இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று காலை டெல்லி வந்தடைந்தார். மொஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த புடினை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கேவி சிங்க் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். 

 அவரது வருகையை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியை வரவேற்றது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஷ்வால் கூறியிருப்பதாவது: 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை அன்புடன் வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

​தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்

தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.இன்று (11) அதிகாலை இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் என மூன்று பேர் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

 அவர்களில் 10 மற்றும் 14 வயதுகளையுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்தனர். அதேநேரம் உயிரிழந்த சிறுவர்களின் 55 வயதுடைய தந்தை தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வியாழன், 10 செப்டம்பர், 2026

பாலியல் தொல்லை: போக்சோவில் ஜிஎஸ்டி ஆய்வாளர் கைது

சென்னை முகப்பேர் 2வது பிரதான சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆய்வாளராக பெண் பணியாற்றி வருகிறார்.‌ இதே அலுவலகத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சவுரவ் (28) என்பவரும் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆய்வாளர் சவுரவ், தன்னுடன் பணியாற்றி வரும் பெண் ஆய்வாளருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துவந்துள்ளார். 

அடிக்கடி இரட்டை அர்த்தத்தில் பேசி டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெண் ஜிஎஸ்டி ஆய்வாளரின் புகைப்படங்களை திருடி அதனை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியது, உயர் அதிகாரிகளோடு இணைத்து காதலுக்கு வயது தடையில்லை என்பதுபோன்ற வாசகங்களை இணைத்து பதிவிடுவது என தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஜிஎஸ்டி ஆய்வாளர் புகார் அளித்தார். அதன்பேரில், மகளிர் போலீசார் விசாரித்து, சவுரவ் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சவுரவை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போதைப்பொருள் மூலம் ஈட்டப்பட்ட பல கோடி பெறுமதியான சொத்துக்கள்

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகச் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. 


 2020 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி பேலியகொடை பொலிஸாரால் ஜீப் வண்டியொன்றில் ஹெரோயின் கடத்திச் சென்ற 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் தொடர்பாகப் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினராலும் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

 அந்த விசாரணைகளில், பேலியகொடை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்திச் சொத்துக்களைக் கொள்முதல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இதற்கமைய, மஹர, கடவத்தை பகுதியில் 19.90 பேர்ச்சஸ் காணியில் அமைக்கப்பட்டுள்ள இருமாடி வீடு மற்றும் சிங்காரமுல்ல, களனி பகுதியில் 18 பேர்ச்சஸ் காணியில் அமைக்கப்பட்டுள்ள 

இருமாடி வீடு தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு சொத்துக்களின் தோராயமான பெறுமதி தலா 500 இலட்சம் ரூபாவாகும் என்பதுடன், இதன் மொத்தத் தோராய பெறுமதி 10 கோடி ரூபாய்க்கும் அதிகமானதாகும். 

 விசாரணைகளின்படி, போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் இச்சொத்துக்கள் வாங்கப்பட்டதாகக் கருதப்படுவதால், பணச்சலவை தடுப்புச் சட்டத்திற்கு அமைவாக 2026 செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு அவற்றை முடக்குவதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு திரும்பியவர் மீது வாள்வெட்டு!

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்றில் சாட்சியமளித்துவிட்டு வெளியேறிய நபர் மீது மர்ம கும்பலொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


நெடுந்தீவைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக நேற்று நீதிமன்றத்திற்கு வந்தவர்கள், சாட்சியம் அளித்த பின்னர் நெடுந்தீவுக்குச் செல்வதற்காகப் பயணித்துக் கொண்டிருந்தபோது, முகங்களை மூடிய நிலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பலொன்று அவர்களை வழிமறித்து வாள்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பின்னர் குறித்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு இலக்கான இளைஞர், தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அது தொடர்பில் காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றில் சாட்சியமளித்த பின்னர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளில் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படாதிருப்பது தொடர்பில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சாட்சிகளை அச்சுறுத்துதல் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் நீதியின் செயற்பாட்டை பாதிக்கக்கூடியவை என்பதால், சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Thank You Google

Thank You Google
Thanks