பூமியின் மிக அதிக பல்லுயிர் வளம் கொண்ட பகுதிகளில் ஒன்றைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட, இந்தோனேசியாவின் முதல் பெண்கள் மட்டுமே கொண்ட தீயணைப்புக் குழுவான 'பவர் ஆஃப் மாமா' (Power of Mama) அமைப்பின் உறுப்பினராக 39 வயதான இவர் உள்ளார்."நாங்கள் இல்லத்தரசிகளாக இருப்பதால், இதன் பாதிப்புகளை அதிகம் உணர்வது நாங்கள்தான்; எனவே இது குறித்து ஏதேனும் செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன்," என்று இதில் இணைவதற்கான தனது உந்துதல் குறித்து இர்மா கூறுகிறார்.
இந்தோனேசியாவின் போர்னியோ பகுதியில் உள்ள மேற்கு கலிமந்தன் (West Kalimantan) பிராந்தியத்தைச் சேர்ந்த 10 கிராமங்களைச் சேர்ந்த, 20 முதல் 58 வயதுக்குட்பட்ட 146 பெண்களைக் கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 'YIARI' என்ற அரசு சாரா அமைப்பால் 2022-ல் உருவாக்கப்பட்ட இக்குழுவின் உறுப்பினர்களுக்கு, தீயணைப்புப் பணிகள் முதல் கண்காணிப்பு ட்ரோன்களை இயக்குதல் மற்றும் அத்தியாவசியமான சமூக விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளுதல் வரை பல்வேறு துறைகளில் தீவிரப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, குழுவின் தன்னார்வலர்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் ரோந்து செல்கின்றனர். அவர்கள் அபாயப் பகுதிகளைக் கண்டறியும்போது, இருப்பிடங்களைப் பதிவுசெய்து, வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சிறப்புப் படையான மங்களா அக்னி வனப் படைக்குத் தகவல் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் தோட்ட மற்றும் வன எல்லைப் பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து, இருப்பிடக் குறியீடுகளைப் பதிவுசெய்து, புகைப்படங்கள் எடுத்து, அந்தத் தகவல்களைச் சிறப்பு கண்காணிப்புச் செயலியில் உள்ளிடுகின்றனர்.
இது சில நேரங்களில் கடினமான சூழ்நிலைகளில் செய்யப்படும் சோர்வூட்டும் பணியாகும்.


