பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இச்செயற்பாட்டை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.
இந்நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் வாகன விபத்துக்களுக்குச் சாரதிகளின் கவனயீனம் மற்றும் வாகனங்களில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளுமே பிரதான காரணம் எனச் சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பில் கவனம் செலுத்தி பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இந்தத் தரப் பரிசோதனைக்காகத் தகுதிவாய்ந்த தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்காகத் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த ஆட்சேர்ப்புகளின் பின்னர் செப்டெம்பர் மாத இறுதிக்குள் இச்செயற்பாட்டை ஆரம்பிக்க முடியும் எனத் தெரிவித்த அவர், அதற்கமைய இந்நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, ஈரான் மீது ஞாயிற்றுக்கிழமை மேலும் வான்வழித் தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா, மற்றொரு படை வீரரின் மரணத்தை அறிவித்தது. மேலும், ஈரான் ஜோர்டான் மீது ஏவுகணைகளை ஏவியது, இது மோதலை அண்டை நாடான இஸ்ரேலுக்கும் விரிவுபடுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியது.
சண்டையை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கடந்த மாதம் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் சிதைந்துவிட்டதாலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பெருமளவில் முடங்கிவிட்டதாலும், அமெரிக்காவும் ஈரானும் படிப்படியாக ஒரு முழுமையான போரை நோக்கி நெருங்கி வருகின்றன. இரு தரப்பினரும் மில்லியன் கணக்கான மக்கள் நம்பியிருக்கும் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்துள்ளனர்.
சனிக்கிழமை ஈராக்கில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானிய ஆளில்லா விமானத்தை "கட்டுப்பாட்டுடன் வெடிக்கச் செய்த" போது அந்தப் படை வீரர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியது.முன்னதாக, ஜோர்டானில் வெள்ளிக்கிழமை நடந்த துருப்புக்கள் படுகொலைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் துணை ராணுவப் படையான புரட்சிகரக் காவலர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இராணுவம் தெரிவித்திருந்தது.
அந்தத் தாக்குதலுக்குப் பிறகு ஒரு படை வீரர் காணாமல் போன நிலையில், "அடையாளம் தெரியாத எச்சங்கள்" ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவதாக இராணுவத்தின் புதிய அறிக்கை தெரிவித்தது.
போர் தொடங்கியதிலிருந்து, 17 அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது இரண்டாவது வாரமாகத் தொடரும் இந்த மீண்டும் தொடங்கியுள்ள துப்பாக்கிச் சண்டைகளில், ஈரானில் உள்ள பாலங்கள், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மின்சார வசதிகளை அமெரிக்கா குறிவைத்துள்ளது.
மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துள்ள நாடுகளை தெஹ்ரான் தாக்கியுள்ளது.
குவைத், ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், ஈரானிடமிருந்து வரும் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை எதிர்கொள்ள மீண்டும் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்படுத்தியுள்ளன.அண்டை நாடான ஜோர்டானை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள், பல வாரங்களுக்குப் பிறகு முதன்முறையாக இஸ்ரேலியப் பகுதிக்குள் தீ பரவக் காரணமாகலாம் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு, "ஈரானிய இராணுவத்தின் கடலோரக் கண்காணிப்பு மற்றும் வான் பாதுகாப்பு வசதிகள், கடல்சார் திறன்கள் மற்றும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான சேமிப்புத் தளங்கள்" மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியது.
இந்தத் தாக்குதல், ஈரானின் நீர்வழியைக் கட்டுப்படுத்தும் திறனைக் குறைக்கவும், அதன் பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் கிடங்கைக் கட்டுப்படுத்தும் ஈரானின் இறையாட்சியில் ஒரு அதிகார மையமாக விளங்கும் "இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரை விரைவாகத் தண்டிக்கவும்" வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அது கூறியது.
அமெரிக்க இராணுவத்தால் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகளில், போர் விமானங்கள் மற்றும் கடலில் இருந்து ஏவப்பட்ட டோமஹாக் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இலக்கு வைக்கப்பட்ட தளங்களில் ஒன்று, ஒரு மலைப் பிராந்தியத்தின் பள்ளத்தாக்கில் அமைந்திருந்தது போல் தோன்றியது.
இந்தப் பாதுகாப்புப் படையினர் பெரும்பாலும் ஏவுகணைத் தளங்களையும் பிற இராணுவ உபகரணங்களையும் மலைத்தொடர்களுக்குள் மறைத்து வைத்திருப்பார்கள்.
தென்மேற்கில் திட்டமிடப்பட்ட அணுமின் நிலையத்தின் கட்டுமானத் தளத்தை அமெரிக்கத் தாக்குதல்கள் குறிவைத்ததாக ஈரானின் அணுசக்தி நிறுவனம் கூறியதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்குப் பிறகு இடம்பெற்றுள்ள மர்ம மரணங்கள் தொடர்பில் முறையான சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பது பொருத்தமானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், ”323 கொள்கலன் விவகாரம் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவித்த டேன் பிரியசாத் மர்மமான முறையில் உயிரிழந்தார்.எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் அதிகாரியும் மரணித்தார்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பான விவகாரத்தில் ரங்க நிஷாந்த ராஜபக்ச என்ற திறைசேரி அதிகாரி, உயிரிழந்தமை தொடர்பில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.
தற்போது, முன்னாள் காவல்துறை மா அதிபர் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் எதுவுமே புரியாமல் உள்ளது. இவற்றை உயிர்மாய்ப்பு சம்பவங்கள் என்று மறந்துவிட முடியாது, இவற்றில் சந்தேகம் நிலவுகின்றது.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் உண்மையை வெளிக்கொணர உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கத்துக்குத் திறனோ அல்லது வலிமையோ இல்லையெனில், FBI போன்ற சர்வதேச விசாரணை அமைப்புகளின் உதவியைப் பெற்று விசாரணைகளை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், தன்னை தோற்கடிக்க சீனா பல்வேறு சதித்திட்டங்களில் ஈடுபட்டதாக டிரம்ப் பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவின் 22 கோடி வாக்காளர்களின் விவரங்களை சீனா விலை கொடுத்து சட்டவிரோதமாகப் பெற்றதாகவும், தனக்கு எதிராக எதிர்மறையான செய்திகளை எழுத, அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு சீனா பெருமளவில் பணம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் குறித்து அதிபர் டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 25 நிமிட உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சீனா, அமெரிக்க தேர்தல் அமைப்பில் ஊடுருவி 22 கோடி வாக்காளர்களின் தரவுகளை திருடி வைத்துள்ளதாவும் இது அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகப்பெரிய தேர்தல் தரவுத் திருட்டு என்றும் குறிப்பிட்டார்.
இந்த தரவு கசிவு அமெரிக்க தேர்தல் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சீனாவின் இந்தத் தரவு மோசடியை மூடிமறைக்க. அப்போதைய அரசின் சில உறுப்பினர்கள் முயன்றனர். இப்போதும் நமது நாட்டின் தேர்தல் அமைப்புவெளிப்படைத்தன்மையற்றதாகவும் துல்லியமற்றதாகவும் உள்ளது.
நிர்வாகிகள் விலகும் முடிவால் அதிமுக கட்சி வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்ததால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் போர்க்கொடி தூக்கினார்.
தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து, சி.வி. சண்முகத்தை அமைப்புச் செயலாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக பசுபதி என்பவரைப் புதிய மாவட்டச் செயலாளராக நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அணி, எடப்பாடி பழனிசாமி தரப்பின் பசுபதி அணி என இரு பிரிவினராகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வள்ளம் ஒன்றிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்து, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
இதனால் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த பசுபதியின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளர்களான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஆனால், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் கட்சிப் பதவிகளை வழங்கியுள்ளார்.தொடர்ந்து சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததால், அவர்கள் தங்களது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களான மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர், எடப்பாடி பழனிசாமியிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்குவதற்காகச் சென்னைக்குப் புறப்பட்டுள்ளனர். அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகும் இந்த முடிவால், விழுப்புரம் மாவட்டத்தில் அக்கட்சி வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரியவருகையில், குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் காவல்துறையினர் , பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.இதன்போது, 1997 ஆம் ஆண்டு பிறந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
சடலத்திற்கு அருகில் பியர் போத்தலும், ஊசி செலுத்த பயன்படுத்தப்படும் சிரிஞ்சும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில்,, அவர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினரால் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உயிரிழந்தவரின் உறவினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும், அவர் சங்கானையில் தனியாகவே வசித்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினரால் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு என்ற தமிழ் அழகு, இவர் காவல்துறையின் 'ஏ' (A) கேட்டகிரி பட்டியலில் உள்ள ரவுடி ஆவார். இவர் மீது கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 19 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பொதுமக்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு பின்புறம் உள்ள காலி மைதானத்தில், ரவுடி கருப்பு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக திருமுடிவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்.
அப்போது, ரவுடி கருப்பு மற்றும் ஒட்டேரி பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்கின்ற சூர்யா இருவரும் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
போலிசாரைக் கண்டதும், தான் தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது வீச ரவுடி கருப்பு முயன்றுள்ளார்.
மேலும் சுற்றி வளைக்க முயன்றபோது தலைமை காவலர் விஜயகுமாரை வலது முழங்கையில் வெட்டி விட்டு தப்ப முயன்றுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட காவல் ஆய்வாளர் ரவுடியின் வலது கணுக்காலில் சுட்டார். இதில் காயமடைந்த ரவுடி அங்கேயே கீழே விழுந்தார். தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.