செவ்வாய், 8 ஏப்ரல், 2025

இந்தியாவுக்கு தெற்கே உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்குவோம்- இரான்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சூழலில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஏவுகணைகளை பதுக்கி வைத்துள்ள புதிய ரகசிய நிலத்தடி தளங்களை, இரான் சமீபத்தில் வெளிப்படுத்தியது.

கடந்த வாரம் அமெரிக்கா, ரகசிய தொழில் நுட்பம் மற்றும் சக்தி வாய்ந்த குண்டுகளைச் சுமந்து செல்லக் கூடிய திறன் கொண்ட ஆறு கூடுதல் போர் விமானங்களை, இரான் மற்றும் யேமன் நாடுகளை எளிதில் அணுகக் கூடிய ஒரு இராணுவ தளத்திற்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். 

பெயர் தெரிவிக்க விரும்பாத அவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இத்தகவலை வழங்கினார்கள். இதற்கு பதில் அளித்த இரான், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மிகப்பெரிய ராணுவ ஆற்றலை கொண்டிருப்பது, அவர்களை 'கண்ணாடி அறையில்' அமர்ந்துள்ளவர்களாக மாற்றுகிறது. எனவே அவர்கள் 'மற்றவர்கள் மீது கற்களை எறியக் கூடாது' என்று குறிப்பிட்டது.

இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கு தெற்கே அமைந்துள்ள பிரித்தானியப் பிரதேசமான டியாகோ கார்சியா தீவில் உள்ள ராணுவத் தளத்தை தாக்கப்போவதாக இரான் மிரட்டல் விடுத்துள்ளது. 

இந்த டியாகோ கார்சியா தீவின் கட்டுப்பாட்டை மொரீஷியஸிடம் திருப்பி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற தாக்குதலை மேற்கொள்ள முடியும் என இரான் இதற்கு முன் எப்போதும் கூறியதில்லை. இந்த "ஏவுகணை நகரங்கள்" என்பவை என்ன? இரான், தற்போது இதுகுறித்த தகவலை பகிர்ந்து கொள்வதற்கான காரணம் என்ன? இது மத்திய கிழக்கில் மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளில் எத்தகைய பங்கு வகிக்கும்?"ஏவுகணை நகரங்கள்" என்பது இரானின் ராணுவப் படைப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையானது (IRGC) நிலத்திற்கு அடியே பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள ஏவுகணை தளங்களை குறிப்பதற்காக பயன்படுத்தும் சொல். இந்த தளங்கள் நாடு முழுவதும் பரந்த, ஆழமான மற்றும் ஒன்றோடொன்று சுரங்கங்கள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. 

அவை பெரும்பாலும் மலைப்பிரதேசங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் அமைந்துள்ளன. அவை பாலிஸ்டிக் ஏவுகணைகள், க்ரூயிஸ் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற பிற முக்கிய ஆயுதங்களை சேமிக்க, தயாரிக்க மற்றும் ஏவுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. 

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) தளபதிகளின் கூற்றுப்படி, இந்த ஏவுகணை நகரங்கள் ஏவுகணை சேமிப்பு தளங்கள் மட்டுமல்ல, அவற்றில் சில தளங்கள், "ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்காக செயல்படும் தொழிற்சாலைகளாகும்." இந்த ஏவுகணை தளங்கள் அமைந்துள்ள துல்லியமான இடங்கள் தெரியவில்லை. அவற்றின் அமைவிடங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை.

"பிராந்தியத்திலோ அல்லது இரானிய ஏவுகணைகளின் எல்லைக்குள்ளாகவோ இரான் தாக்கப்பட்டால், பிரிட்டிஷ் அல்லது அமெரிக்கப் படைகளை குறி வைப்பதில் எந்த விதமான வேறுபாடும் இருக்காது" என்று இரான் எச்சரித்துள்ளது. ஏராளமான ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை சேமித்து வைத்துள்ள நிலத்தடி சுரங்கங்களின் படங்களை, ஐ.ஆர்.ஜி.சி. கடந்த பத்து ஆண்டுகளில், அவ்வப்போது வெளியிட்டு, அவற்றை "ரகசிய ஏவுகணை நகரங்கள்" என கூறி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

ஏமனின் ராஸ் இசா மீது அமெரிக்க தாக்குதல்களில் 58 பேர் பலி!!

ஏமனில் உள்ள ஒரு எரிபொருள் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 58 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹவுத்திகளால் நடத்தப்படும்...