இதில் “கொசுப் படை” என்று அழைக்கப்படும் ஒரு இராணுவ பிரிவு ஒன்று ஹோர்முஸ் நீரிணையின் நிழலில் பதுங்கியுள்ளது. இதில் அவர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் எதிரிப்படைகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.
கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறிய, வேகமான, சுறுசுறுப்பான படகுகளின் தொகுப்பான இது, ஈரானின் வழக்கமான கடற்படையிலிருந்து தனிப்பட்ட ஒரு படையான ஈரானிய புரட்சிகர காவலர் படையால் நிலைநிறுத்தப்பட்ட கடற்படையின் இதயப் பகுதியாக அமைகிறது.
இந்தப் படகுகளும், குறிப்பாக அவற்றிலிருந்தோ அல்லது கரையோரத்தில் உள்ள உருமறைப்பு செய்யப்பட்ட தளங்களிலிருந்தோ பாதுகாப்புப் படை கடற்படை ஏவக்கூடிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களும், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தைத் தடுக்கும் முக்கிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.
லெபனானில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை நீரிணையை மூடியே வைத்திருப்பதாக ஈரான் உறுதியளித்திருந்தது. அங்கு கடந்த வியாழக்கிழமை போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
எனினும் மறுநாள் வெள்ளிக்கிழமையன்று, அந்தப் போர் நிறுத்தம்தான் நீரிணையை திறக்க ஈரானைத் தூண்டியதா என்பது குறித்து மூத்த ஈரானிய அதிகாரிகள் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டனர்.
எனினும் நேற்று சனிக்கிழமை, அந்த நீர்வழிப்பாதை தனது முந்தைய நிலைக்குத் திரும்பிவிட்டது. அது ஆயுதப் படைகளின் கடுமையான மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்றும் ஈரான் இராணுவம் தெரிவித்தது.
முன்னதாக திறப்பு குறித்த ஈரானின் ஆரம்ப அறிவிப்பை வரவேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நிலைமை "முடிந்துவிட்டது" என்று அறிவித்ததோடு, ஒரு அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடரும் என்றும் சமூக ஊடகங்களில் வலியுறுத்தினார்.
எனினும் இந்த முற்றுகையால் நீரிணையை மூடி வைக்கும் பணி புரட்சிகர காவலர் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த பின்னணியை அரசியல் அறிவியல் ஆய்வாளர்கள் "IRGC கடற்படையானது கடலில் ஒரு கொரில்லாப் படையைப் போலவே செயல்படுகிறது," என்று விளக்கியிருந்தனர்.
இது சமச்சீரற்ற போரை, குறிப்பாக பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில், மையமாகக் கொண்டுள்ளது. எனவே, பெரிய போர்க்கப்பல்கள் மற்றும் பாரம்பரிய கடற்படைப் போர்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, இது திடீர்த் தாக்குதல்களைச் சார்ந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அமைப்பான சர்வதேச கடல்சார் முகமையின் கூற்றுப்படி, போரின் போது குறைந்தது 20 கப்பல்கள் தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களுக்குப் ஈரானின் பாதுகாப்புப் படை கடற்படை அரிதாகவே பொறுப்பேற்றது.
மாறாக, தரையில் உள்ள நகரும் ஏவுதளங்களில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் மூலமே இவை பெரும்பாலும் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும், அவை தடமறிவதற்குக் கடினமான, மங்கலான ஒரு தடயத்தை உருவாக்குவதே இதற்குக் காரணம் என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக