ஞாயிறு, 15 ஜூன், 2025

இஸ்ரேல் - இரான்: கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு!!

இஸ்ரேல் இரானை தாக்கியதாக கூறியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் திடீரென அதிகரித்த பதற்றத்தின் விளைவாக, உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரித்தன. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 10 சதவிகிதததுக்கும் மேல் அதிகரித்து, ஜனவரி மாதத்திற்குப் பிறகு மிக உயர்ந்த நிலையைத் தொட்டது. 

அதன் பிறகு விலை சற்று குறைந்தது. அதனையடுத்து, இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல், எண்ணெய் வளம் மிக்க இந்தப் பகுதியிலிருந்து வரும் விநியோகங்களைத் தடுக்கக்கூடும் என்று வர்த்தகர்கள் கவலையுற்றனர். 

கச்சா எண்ணெயின் விலை உங்கள் காரில் எரிபொருள் நிரப்ப எவ்வளவு செலவாகும் என்பதிலிருந்து, பல்பொருள் அங்காடியில் உணவுப் பொருட்களின் விலை வரை அனைத்தையும் பாதிக்கிறது. 

 தொடக்கத்தில் உயர்ந்த எண்ணெய் விலைகள் பின்னர், சிறிது குறைந்தன. ஆனால் வியாழக்கிழமை இறுதியில் காணப்பட்ட விலையை விட, பிரென்ட் கச்சா எண்ணெய் 7 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு 74.23 டாலருக்கு விற்பனையானது.வெள்ளிக்கிழமையன்று விலைகள் உயர்ந்தாலும், கடந்த ஆண்டு இதே நேரத்தில் காணப்பட்ட எண்ணெய் விலையை விட, 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே தற்போதைய விலை உள்ளது. 

 2022-ன் தொடக்கத்தில் ரஷ்யா யுக்ரேனில் போர் தொடங்கிய நேரத்தில், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டியது. அப்போது காணப்பட்ட உச்ச நிலையைவிட தற்போது விலை மிகவும் குறைவாக உள்ளது . வெள்ளிக்கிழமை ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் பங்கு விலைகள் சரிந்தன. ஜப்பானின் நிக்கேய் பங்குச்சந்தை 0.9% சரிந்தது, பிரிட்டனின் ஃஎப்டிஎஸ்ஈ (FTSE) 100 பங்குச்சந்தை 0.39% சரிந்தது.டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி (The Dow Jones Industrial Average) பங்குச்சந்தை 1.79% சரிந்தது, அதே நேரத்தில் எஸ்&பி 500 (S&P) பங்குச்சந்தை 0.69% சரிந்தது.

 மறுபுறம், தங்கம் மற்றும் சுவிஸ் பிராங்க் போன்ற "பாதுகாப்பான" சொத்துக்கள் லாபம் ஈட்டின. நிச்சயமற்ற காலங்களில் இந்தச் சொத்துக்களை மிகவும் நம்பகமான முதலீடுகளாக, சில முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. 1.2% உயர்ந்த தங்கத்தின் விலை, ஒரு அவுன்ஸ் 3,423.30 டாலராக இருந்தது. 

இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, இரான் தங்கள் நாட்டை நோக்கி சுமார் 100 டிரோன்களை ஏவியதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை கூறியது. மோதல் மேலும் மோசமடையுமா இல்லையா என்பதை வரும் நாட்களில் எரிசக்தி வர்த்தகர்கள் கூர்ந்து கவனிப்பார்கள் என்று ஆய்வாளர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

நீர்கொழும்பு ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய இருவர் கைது!!

ஒரு கோடி ரூபாவை கப்பமாக கேட்டு, அதிலிருந்து 20 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்...