“டெல்லியில் இருந்து இந்தியா முழுமைக்கும் திட்டமிடுவது என்பது அகற்றப்பட்டு, அந்தந்தப் பகுதியில் இருப்பவர் துணையோடு திட்டமிடுவது தான் என்னுடைய அணுகுமுறையாக இருக்கும்” என்று சொன்னார்.
நான் கேட்கிறேன், ஒருகாலத்தில் குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி அவர்களே, கடந்த பத்தாண்டு காலத்தில் நீங்கள் கூறியபடி மாநிலங்களிடம் நடந்து கொண்டீர்களா?
இல்லையே. அதற்கு மாறாக, உங்களின் செயல்பாடுகளும், உங்கள் அமைச்சரவையின் அணுகுமுறையும் எவ்வாறு இருக்கிறது? மாநிலங்களை எப்படி அழிப்பது, எப்படி ஒழிப்பது, மாநில உரிமைகளை எப்படி பறிப்பது, சிதைப்பது என்று சர்வாதிகார எண்ணமாகத்தானே இருக்கிறது.
“நான் பிரதமரானால் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தருவேன்” என்று சொன்னீர்கள்…
அவ்வாறு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கூட்டாட்சி ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து நீங்கள் செயல்படுத்திய செயல்கள் என்ன? அதுதான் என் கேள்வி.
பிரதமராகும் போது, நீங்கள் சொன்னதை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புறேன். “மாநில அரசுகள் டெல்லிக்குக் காவடி தூக்கும் நிலைமையை மாற்றி, அதிகாரப் பகிர்விற்கு வழிகாட்டுவதுதான் என்னுடைய அணுகுமுறையாக இருக்கும்.
மாநில முதல்வராக நான் அடைந்த பன்னிரண்டு ஆண்டுகால அனுபவத்துடன் தேசியத் தலைமையை ஏற்பதால், மாநிலங்களின் பிரச்சினையும் எனக்குத் தெரியும். ஒன்றிய அரசின் முக்கியத்துவமும் எனக்குப் புரியும்” என்று சொன்னீர்களே… சொன்னபடி நடந்து கொண்டீர்களா?
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் அரசியலை மட்டுமே நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.
இப்போதுகூட எங்களுடைய தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான, ரூ.2,151 கோடி நிதியை கொடுக்காமல் பழிவாங்கும் அரசியலைத்தானே நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள்?
இன்னும் இருக்கிறது, குஜராத் முதல்வராக இருந்தபோது கூறியது ஞாபகம் இருக்கிறதா? “குஜராத் மக்கள் 60 ஆயிரம் கோடியை டெல்லிக்கு அனுப்புகிறார்கள்… ஆனால், திரும்ப வருவது மிகக் குறைவு.குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா?” என்று கேட்டீர்களே… அதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கிறேன்.
“தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?” நாங்கள் உழைத்து வரியாகச் செலுத்திய பணத்தில் எங்களுக்கான நிதியைக் கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?. 43 இலட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்கான நிதியை விடுவிக்காமல் மிரட்டுவது நியாயமா?
சமூகநீதி எனப்படும் இட ஒதுக்கீட்டை தேசிய கல்விக் கொள்கை ஏற்கவில்லை. பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தரும் உதவித் தொகையை இந்தக் கொள்கை மறுக்கிறது. மூன்று, ஐந்து, எட்டு ஆகிய வகுப்புகளில் பொதுத்தேர்வை வைத்து வடிக்கட்டப் பார்க்கிறார்கள்.
ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையைக் கொண்டு வரப் போகிறார்கள். அதாவது ஆல் இந்தியா எக்ஸாம் போன்று நடக்கும். உங்கள் மகனோ, மகளோ 12 ஆம் வகுப்பு முடித்துட்டு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தில் உடனே சேர முடியாது.
இப்போது மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நீட் தேர்வு வைப்பது போன்று, கலைக் கல்லூரிக்கும் தேர்வு வைத்துதான் எடுப்பார்கள்.
அந்தத் தேர்வையும், கல்லூரிகள் நடத்தாது. தேசிய அளவில் தேர்வு ஏஜென்சி தான் நடத்தும். 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படிப்பைத் தொடர விரும்பாத மாணவர்கள், அவர்களாகவே வெளியேறலாம். இவ்வாறு சொல்வதே, “போ…” என்று விரட்டுவதற்குச் சமம்.
ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி என்ற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகிறார்கள். குலத் தொழிலை, சாதித் தொழிலைத் தொடராமல், படித்து முன்னேற நினைப்பவர்களை மீண்டும் அதை நோக்கித் தள்ளப் பார்க்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்துதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஆணித்தரமாகச் சொல்கிறோம்.
ஆனால், இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்று தர்மேந்திர பிரதான் சொல்கிறார். இரண்டாயிரம் கோடி என்ன? பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஸ்டிராங்காக சொல்லிவிட்டேன். அந்தக் கோபத்தில்தான் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மேல் கோபப்படுகிறார்.
நமக்கு ஜனநாயகத் தன்மை இல்லையாம், நாகரிகம் இல்லையாம். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய இனம், நம்முடைய தமிழினம். உலகத்திற்கு, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பாட்டை உருவாக்கிக் கொடுத்தது. அத்தகைய தமிழர்களுக்கு ஜனநாயகம் தெரியாதா? நாகரிகம் தெரியாதா? வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அறம் பேசும் தமிழினத்துக்கு ஜனநாயகத்தைப் பற்றி வகுப்பு எடுக்காதீர்கள்.
நீங்கள் என்னவோ ஹெட்மாஸ்டரைப் போல, நாங்கள் மாணவர்கள் போல எங்களுக்கு வகுப்பெடுக்க வந்திருக்கிறீர்களா? தமிழ்நாடு விடாமல் போராடுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நாகரிகமற்றவர்கள் என்று சொல்கிறார் தர்மேந்திர பிரதான்.
தமிழ்நாட்டைக் கொச்சைப்படுத்துவதுதான் உங்களின் வழக்கம்.
ஒடிசா மாநிலத்தில் தேர்தல் நடந்தபோது, நவீன் பட்நாயக்கின் செயலாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இருந்தார் என்பதற்காக, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் தமிழ்நாட்டை எவ்வாறெல்லாம் கொச்சைப்படுத்தினார்கள்?. ஜெகந்நாதர் கோயில் கருவூலச் சாவியைத் தமிழ்நாட்டிற்கு திருடிச் சென்றுவிட்டார்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கருவூலச் சாவி தொடர்பான விசாரணை அறிக்கையைப் பொதுவில் வெளியிடுவோம் என்று பேசினார்களா? இல்லையா?
ஜெகந்நாதர் கோயில் கருவூலச் சாவிக்கும், தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? பிரதமரும், உள்துறை அமைச்சரும் செய்தது எவ்வளவு பெரிய அவதூறு? அங்கு ஆட்சி மாற்றம் நடந்து பாஜக ஆட்சிக்கு வந்து 5 மாசம் ஆகிவிட்டது.
கருவூலச் சாவி எங்கே என்று ஒடிசா எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார். தமிழர்களைத் திருடர்கள் என்று சொன்னதை வாபஸ் பெறுங்கள் என்று அந்த எம்.பி. சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு அவையில் வாய்மூடி மவுனம் சாதித்திருக்கிறார்கள்.
இதுதான் அநாகரிகம்.
அநாகரிகம் பற்றிப் பேசும் தர்மேந்திர பிரதான், எது நாகரிகம்? என்று உங்களால் சொல்ல முடியுமா? எங்கள் மாநிலத்தில் இருந்து வரிய வசூல் செய்துவிட்டு, எங்களையே பட்டினி போடுவதுதான் நாகரிகமா? “தமிழ் பிடிக்கும், தமிழில் பேச முடியவில்லையே” என்று சொல்லிக் கொண்டே, தமிழுக்கு நிதி ஒதுக்காமல் சமஸ்கிருதத்திற்கு நிதி ஒதுக்குவதுதான் நாகரிகமா? . தாய்மொழியை வலியுறுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டே அதைச் செய்யாமல் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதுதான் நாகரிகமா?
குஜராத்தில் இயற்கைப் பேரிடர் வந்தால், அன்று மாலையே 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதும், தமிழ்நாட்டில் பேரிடர் வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும், நாங்கள் கேட்டதில் ஒரு விழுக்காடு நிதிகூட ஒதுக்காமல் இருப்பதுதான் நாகரிகமா?.
ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை மட்டும் அறிவித்துவிட்டு, ஏழு ஆண்டுகாலமாக அதைக் கட்டாமல் ஏமாத்துவதுதான் நாகரிகமா? நாகரிகத்தைப் பற்றி யார் பேசுவது?
அநாகரிகத்தின் அடையாளமே நீங்கள் தான்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை அராஜகவாதிகள் என்று சொன்ன தர்மேந்திர பிரதானை, அரை மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார்கள் நம்முடைய தமிழ்நாட்டு எம்.பி.க்கள். தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி, தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதைக் குறைக்கும் அபாயம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
பொதுவாக, மக்கள் தொகையை வைத்துதான் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. மக்கள் தொகை குறைவாக இருப்பதால், நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கையும் குறையும். தென் மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத பாஜக, வடமாநிலங்களில் பெறும் வெற்றியை வைத்தே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறது.
அதுதான் சதி, தங்களுக்கு செல்வாக்கான மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு, தங்களை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். இதைத் திமுக தடுத்து நிறுத்தும். தென் மாநிலக் கட்சிகள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டு தடுப்போம். தொகுதி மறுசீரமைப்பில் பாதிக்கப்படவுள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்த்து, கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க இருக்கிறோம்.
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் இருக்கும் 29 கட்சிகளுக்கு நான் கடிதம் அனுப்பி இருக்கிறேன். பிற மாநில முதலமைச்சர்களுடன் நானே நேரடியாக தொலைபேசியில் பேசி வருகிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று இந்தக் கருத்தை எடுத்துச் சொல்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாகச் சென்னையில் பல்வேறு மாநிலக் கட்சிகள் கலந்துக் கொள்ளும் கூட்டத்தை மார்ச் 22 ஆம் நாள் நடத்த இருக்கிறோம்.
நிதி தரமாட்டோம், அதிகாரத்தைப் பறிப்போம், இதைக் கேள்வி கேட்டால், தொகுதி எண்ணிக்கையைக் குறைப்போம் என்ற அளவுக்கு எதேச்சாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறது பாஜக அரசு. உறுதியோடு சொல்கிறேன், பாஜகவின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்.
பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்.
நாடு இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது. ஜி.டி.பி. எனப்படும் இந்திய நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை என்னவாக வைத்திருக்கிறீர்கள்? கடந்த அக்டோபர் – டிசம்பர் ஆகிய மூன்றாவது காலாண்டில் 6.8 விழுக்காடாக வளரும் என்று சொன்னார்கள். ஆனால், 6.2 விழுக்காடுதான் வந்திருக்கிறது.
இதுதான் உங்களின் வளர்ச்சி இந்தியாவா? அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து சரிந்து படுபாதாளத்துக்குச் செல்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட கைது செய்யப்பட மாட்டார் என்று சொன்னவர் மோடி. அவருடைய பத்தாண்டு கால ஆட்சியில் 3,000 பேர் கைது செய்யப்பட்டார்கள். கடந்த ஆண்டு மட்டும் 550 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு மாதத்தில் 130 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
சிறிய நாடான இலங்கை கூட உங்களை மதிக்கலையே. இதுதான் உங்களுடைய பரிதாபங்கள், அதனால் தான் அதல பாதாளத்திற்கு இந்தியா இறங்கிக் கொண்டு இருக்கிறது. இதைத் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மாநிலக் கட்சியாக இருந்தாலும் திமுகவுக்கு இருக்கிறது.
நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்து ஊடகங்களில் பார்த்தீர்கள் என்றால், இப்போது வரைக்கும் தமிழ்நாட்டைப் பற்றிதான் அனைத்து ஒன்றிய அமைச்சர்களும் பேசுகிறார்கள்.
நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, நீங்கள் நாள்தோறும் வசைபாடினாலும், தமிழ்நாடு தொடர்ந்து போராடும், தமிழ்நாடு இறுதிவரை போராடும், தமிழ்நாடு இறுதியில் வெல்லும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்தப் பேச்சில் ஒன்றிய அரசின் தவறுகளையும் பிரதமர் மோடியின் பலவீனத்தையும் வெளிப்படுத்தியதோடு அதல பாதாளத்திற்கு இறங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவைக் காப்பாற்றுவோம் என்று சொல்லியிருப்பது வட இந்தியாவில் பேசுபொருளாகியுள்ளது.
ஒரு மாநில முதலமைச்சர் இவ்வளவு ஆணித்தரமான உண்மைகளைப் பேசியிருப்பதால் ஒன்றிய அரசு அரண்டு போயிருப்பதாக தில்லியிலுள்ள பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக