மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் அந்நாட்டின் ஆயுதங்களைத் தயாரிக்கும் திறனைத் தடுக்க முயல்கின்றன.
ஆனால், அதே வேளையில் சீனா, இரான், வட கொரியா போன்ற நாடுகள் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி உதவுவதாகக் கூறப்படுகிறது.
ஃபாத்-360 என்பது 150 கிலோ வெடிபொருட்களை சுமந்து, சுமார் 120 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய ஒரு ஏவுகணை. குறுகிய தூரம் தாக்கும் இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சுமார் 200 அல்லது அதற்கும் மேற்பட்ட அளவில் ரஷ்யாவுக்கு வழங்க இரான் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
ரஷ்யாவின் ஆயுதப்படையைச் சேர்ந்த பல வீரர்கள் இந்த ஏவுகணையைப் பயன்படுத்த இரானில் பயிற்சி எடுத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குறிப்பிடுகிறது.
மேலும், எதிர்காலத்தில் இந்த ஏவுகணைகள் மூலம் யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.ரஷ்யா ஃபாத்-360 ஏவுகணைகளைப் பயன்படுத்தி யுக்ரேனின் பல்வேறு நகரங்கள் மற்றும் அந்நாட்டின் எல்லைகளுக்கு அருகிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற இடங்களைத் தாக்கலாம்.
இதனால் யுக்ரேனின் மிகவும் உள்ளார்ந்த பகுதிகளில் இருக்கும் இலக்குகளைத் தாக்குவதற்கு மட்டும் அதன் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த முடியும்.
"ஃபாத்-360 ஏவுகணை ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள யுக்ரேனிய இலக்குகளைத் தாக்குவதற்கு உதவும். ரஷ்யாவிடம் இதுபோன்ற ஏவுகணை இல்லை," என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுத் துறையைச் சேர்ந்த முனைவர் மெரினா மிரோன் கூறுகிறார்.
ரஷ்யா இரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பம் உள்பட ராணுவத் தொழில்நுட்பத்தை வழங்கலாம் என்றும் அவர் கூறுகிறார். ரஷ்யாவுக்கு ஏவுகணைகளை வழங்கியதற்காக இரான் மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் புதிய தடைகளை விதித்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் இரானை சேர்ந்தவர்களின் மீது, பயணத் தடைகள், சொத்து முடக்கம் ஆகியவற்றுடன் சேர்த்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிற்குள் நுழைய இரானின் விமானங்கள் மீது கட்டுப்பாடுகள் போன்றவை விதிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவிற்கு ஃபாத்-360 போன்ற சுயமாக இலக்கை நோக்கிச் செல்லும் ஆயுதங்களை வழங்குவதை இரான் பலமுறை மறுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக