யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றில், கடந்த மார்ச் 29ஆம் திகதி குடிநீர் எடுக்கச் சென்ற 17 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த விகாரையில் இருந்த பிக்கு ஒருவருக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டதுடன், அவர் ஆரம்பத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர், ஏப்ரல் 09ஆம் திகதி அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் வெளியிட்ட கருத்துக்கள், குறித்த பிக்குவின் கைது மற்றும் சாவகச்சேரி நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து தாக்கம் செலுத்தும் வகையிலும், நீதிமன்றத்தை சவால் செய்யும் தன்மையிலும் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான 12 சட்டத்தரணிகள் குழு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கட்டளை வழங்குவதற்காக எதிர்வரும் 29ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
