புதன், 15 ஜூலை, 2026

தென்தாமரைகுளம் சிறை காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சபரிவர்மன்!!

நாகர்கோவில் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றதாகக் கூறி சபரிவர்மன்(34) என்ற இளைஞரை தென்தாமரைகுளம் போலீசார் ஜூலை 9 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சபரிவர்மன் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் சிறையில் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். 

உறவினர்கள் சிறை காவலர்கள் அவரை அடித்து கொலை செய்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று அவரது உடல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பின் நீதிபதி நேற்று சிறைச்சாலையிலும் விசாரணை நடத்தினார். 

 சபரிவர்மனின் 4 பக்க பிரேதப் பரிசோதனை அறிக்கை நேற்று இரவு அவரது உறவினர்களிடம் அளிக்கப்பட்டது. அதில் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறையில் சிறை காவலர்கள் அடித்து கொலை செய்ததும் உறுதி செய்யப்பட்டது. நேற்று இரவு சித்ரவதை மற்றும் படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தலைமைக் காவலர் திருமலை நம்பி சுரேஷ், வார்டன்கள் சிவகுமார் மற்றும் ஜெகன் ஆகிய மூன்று சிறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதனை தொடர்ந்து சபரிவர்மனின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராடி வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

சபரிவர்மனின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கை முன் வைத்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்ட சபரிவர்மனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks