ஞாயிறு, 21 ஜூன், 2026

தமிழின அழிப்பில் முதன்மைப் பங்காளியாகச் செயற்பட்ட அமெரிக்கா!!

தமிழின அழிப்பில் முதன்மைப் பங்காளியாகச் செயற்பட்ட அமெரிக்காவின் பங்கை எமது மக்களுக்கு மீள நினைவூட்டும் ஒரு வாய்ப்பை 2026 FIFA போட்டிகள் நமக்கு வழங்கியிருக்கிறது. 


2026 FIFA உலகக் கோப்பையில் ஈரான் அணி அமெரிக்காவில் விளையாடுவதற்கான நிபந்தனைகளை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஈரான் அணி போட்டி நாளில் போட்டி ஆரம்பமாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது. போட்டி முடிந்ததும் உடனேயே மெக்சிகோ திரும்ப வேண்டும். 

 அனைத்து வீரர்களுக்கும் விசா வழங்கப்பட்டாலும், சில நிர்வாகிகள், Physiotherapist, மருத்துவர்கள், மற்றும் உதவி ஊழியர்களுக்கு அமெரிக்கா விசா மறுத்திருக்கிறது. அடுத்து, ஈரான் ரசிகர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சில உலகக் கோப்பை டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் ஈரானிய ரசிகர்களுக்கு முழுமையாகவே விசா மறுக்கப்பட்டிருக்கிறது. 

இதன் விளைவாக போட்டி நடைபெறும் நாட்டின் காலநிலைக்கு தம்மைத் தயார்படுத்த முடியாமை, மைதானங்களில் பயிற்சி எடுக்க முடியாமை, நீண்ட நாள் பயிற்சியாளர்கள் இன்மை, மாறி மாறிப் பயணிப்பதால் வரும் பயணக் களைப்பு, அயர்ச்சி, உளவியல் சிக்கல், வீரர்களின் பெரும் பலமான மைதானத்தில் ரசிகர் ஆதரவு இல்லாமை என்று ஈரான் அணியின் சிக்கலை எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் ஈரான் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும் அணிகளுடன் மோத வேண்டும். 

இது எப்படி சம தரப்பு போட்டியாக இருக்க முடியும்.? ஆனால் இதுதான் அமெரிக்காவின் நீதி. இதை FIFA வால் கூட கேள்வி கேட்க முடியாது. காலா காலம் மேற்குலக - குறிப்பாக அமெரிக்கா வரையும் வளைகோட்டு நீதி இது. உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு தத்துவ மேதை Jean Baudrillard இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட போது இந்த 'நீதி' கேள்விக்குட்படுத்தப்பட்டதை பின்வருமாறு வரையறுத்தார். 

'ஒரு அதிகார வர்க்கம் அனைத்து சீட்டுக்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு மறு தரப்பை விளையாட்டுக்கு அழைத்தபோது, கையறு நிலையிலிருந்த மறு தரப்பு ஆட்டத்தை தொடர வேண்டிய நிர்ப்பந்தத்தின் பொருட்டு விளையாட்டின் விதிகளை மாற்ற வேண்டிய புறநிலைக்குத் தள்ளப்பட்டது. 

அந்த விதிகள் அதிகாரத்தின் சமன்பாடுகளை கொடுரமாகக் குலைத்துப் போட்டன.” நாம் எமது வரலாற்றுக்குத் திரும்புவோம். 2002 இல் சமாதான உடன்படிக்கை கைச்சாத்தாகி தொடர் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நகர்ந்து கொண்டிருந்தன. 

புலிகளிடம் இடைக்கால நிர்வாக சபை ஒன்றைக் கையளிப்பதற்கான வாய்ப்புகள் நெருங்கியிருந்தன. தாய்லாந்து, ஒஸ்லோ, ஜெனிவா என்று நகர்ந்து கொண்டிருந்த பேச்சுக்கள் ஒரு கட்டத்தல் உதவி வழங்கும் மாநாடாக நியூயோர்க்குக்கு நகர்ந்திருந்தது. இங்கேதான் சிக்கல் ஆரம்பமாகியது. நோர்வே தலைமை அனுசரணையாளராக இருந்தாலும் இணைத் தலைமை நாடுகள் ( Co - Chairs) என்ற அடிப்படையில் அமெரிக்காவும் இதில் பங்கெடுத்திருந்தது. 

ஆனால் சம தரப்பு அங்கீகாரத்தின் அடிப்படையில் பேச்சுக்கு வந்த புலிகளை - அதன் அங்கீகாரத்தைக் குலைப்பது போல் புலிகளுக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது. 

இரு தரப்பில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பு இல்லாமலேயே அந்த மாநாட்டை நடாத்த அமெரிக்க முயன்றது. பேச்சு முறிவிற்கான முதல் புள்ளி மட்டுமல்ல இறுதித் தமிழின அழிப்பிற்கான முதல் வித்தும் இடப்பட்ட சம்பவம் இது.

புலிகளுக்கும் சிறீலங்காப் படைகளுக்குமிடையில் வலுச் சமநிலை காணப்பட்டது என்ற அடிப்படையிலும், பேச்சு வார்த்தைகளின் போது இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமத்துவம் கொண்டவர்கள் (Parity of Status) என்ற அடிப்படையிலுமேயே புரிந்துணர்வு ஒப்பந்தமும், தொடர் பேச்சுக்களும் இடம் பெற்றன.

 போர் நிறுத்தம் முறிவுற்றமைக்கும் பேச்சுவார்த் தைகளிலிருந்து விடுதலைப்புலிகள் வெளியேறியமைக்கும் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் காரணமல்ல. திருப்திகரமான முன்னேற்றம் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டிருந்தது. 

எனினும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளை அமெரிக்கா தடைசெய்தமையும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும் வடக்கு – கிழக்கின் அபிவிருத்தி தொடர்பாகவும் வாஷிங்டனில் அமெரிக்க அரசு ஏற்பாடு செய்த மாநாட்டுக்கு விடுதலைப் புலிகளை அழைக்க மறுத்தமையும் தான் இலங்கையில் சமாதான முயற் சிகள் சீர்குலைந்து போனமைக்குக் காரணம்' என்று டப்ளின் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. 

'இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் சமத்துவம் கொண்ட தரப்புகளாக அமெரிக்கா ஏறறுக்கொள்ளாத் தொடர்ச்சியாக மறுத்து வந்தமையின் விளைவு தான் போர் மறுபடி மூண்டெழக் காரணமாக அமைந்தது. 

எத்தகைய பேச்சுவார்த் தைகளும் வெற்றி பெறுவதற்கு அரசியல் ரீதியான சமத்துவ நிலையிலேயே இரண்டு தரப்பினரும் கலந்து கொள்ளவேண்டும் என்பதும் அச்சமநிலை தொடர்ந்தும் பேணப்படவேண்டும் என்பதும் அடிப்படையான நிபந்தனைகள் ஆகும். 

இலங்கைச் சூழலில் இந்த அடிப்படை விதியை மிகவும் திட்டமிட்ட வகையில் உடைத்தெறிந்த பொறுப்பு அமெரிக்க அரசையே சாரும்' என்று பாசண அபேவர்த்தன தனது வாக்குமூலத்தில் அதே டப்ளின் தீர்ப்பாயத்தில் சாட்சியமளித்திருக்கிறார். புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்கா இன்னுமொரு நடவடிக்கையிலும் இறங்கியது.

 2007ல் இலங்கை அரசுடன் Acquisition and Cross Services Agteement (ACSA) எனப்படும் இராணுவ ஒப்பந் தத்தை ஏற்படுத்தியது. இப்படி அமெரிக்காவின் சதி நடவடிக்கைகளை எழுதிக் கொண்டே போகலாம். Jean Baudrillard தியரிப்படி புலிகளுக்கும் ஒரு இக்கட்டு நிலையை அமெரிக்கா - அதாவது உலக அரச பயங்கரவாதம் ஏற்படுத்தியது. 

ஆனால் அரச பயங்கரவாதத்தின் எண்ணத்தைப் புலிகள் தோற்கடித்தார்கள். அவர்கள் கொடூரமான விதிகளை நோக்கி நகரவில்லை. போராடும் தேசிய இனங்களின் ஒற்றைப் பிரதிநிதிகளாக நின்று இறைமையை அடகு வைக்காமல் மண்டியிடாது இறுதி வரை போராடி புதிய கோட்பாட்டை அறிமுகம் செய்தார்கள். தலைவர் சற்றேனும் நிதானம் தவறியிருந்தால் புலிகளின் வரலாறு மட்டுமல்ல உலகின் போராடும் தேசிய இனங்கள் அனைத்தினது வரலாறும் தலைகீழாக மாறியிருக்கும். 

ஏனெனில் தமிழீழம் உலக அரச பயங்கரவாதத்தின் ஒரு புதிய பரீட்சார்த்த களமாகவே அப்போது முற்றுகையிடப்பட்டிருந்தது. புலிகள் இதை உணர்ந்து விட்டுக்கொடுக்காமல்/ அடிபணியாமல்/ எந்தச் சமரசமும் செய்யாமல் இறுதிவரை போராடி தேசிய இனங்களின் இறைமைக்கு புதிய வரைவிலக்கணம் எழுதினார்கள். 

சோவியத் யூனியன் உடைந்த போது/ பெர்லின் சுவர் தகர்ந்த போது/ இரட்டை கோபுரம் நொருங்கிய போது உலக வரலாறு தன்னை புதுப்பித்து கொண்டது. இதை முன் வைத்து Francis fukuyama போன்ற கோட்பாட்டாளர்கள் வரலாற்றுக்கு முடிவுரை எழுதக்கூடப் புகுந்தார்கள். தற்போது அந்த வரிசையில் ‘நந்திக்கடல்’. 2009 மே 17 நள்ளிரவில், ஒரு சிறிய நீர்ப்பரப்பை மட்டும் சாட்சியாக வைத்து இதுவரை கால மனித குல வரலாற்றை அசைத்து பார்க்கும் ஒரு பிரளயம் நடந்தேறியது உலகின் கண்களுக்கு தெரியாமலே போனது.

நவீன மனித குல வரலாற்றை உலகில் ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு அல்லலுறும் இனங்களுக்கான வரலாறாக மாற்றி எழுதியஇந்த நூற்றாண்டின் தாய்ச் சமர்க்களம் அது. வரலாற்றின் அதி உச்ச நிகழ்வு அது. காலங் கடந்து உலக வரலாற்றாசிரியர்களுக்கு, தத்துவவாதிகளுக்கு, கோட்பாட்டாளர்களுக்கு தீனி போடக் காத்துக் கிடக்கிறது அந்த நீர்ப்பரப்பு.

 (பின் குறிப்பு: இறுதியாக மேற்குலகத்தைக் - குறிப்பாக அமெரிக்கா பின்னால் இழுபடும் நம்மவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இது. அத்தோடு விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று இன அழிப்பு அரசின் கிரிக்கெட் பின்னால் இழுபடும் ஒரு சாராரும் தெரிந்து கொள்ள வேண்டிய சமகால வரலாறு இது.) 

இது ஒரு முகப்புத்தகத்தின் பிரதியாக்கம்.

பரணி கிருஷ்ணராஜனி தரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks