குறிப்பாக, தாக்குதல் நடைபெறுவதற்கு 43 நிமிடங்களுக்கு முன்னதாக, அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் நிலாந்த ஜயவர்தன, சிங்கப்பூரில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு இந்த அச்சுறுத்தல் குறித்து அறிவித்திருந்தமை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வுகளில் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள் அடங்கிய தகவல்கள், அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு வட்ஸ்அப் (WhatsApp) மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் வாயிலாகத் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டிருந்தன.
புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட இந்தத் தகவல்களை உரிய முறையில் கையாளத் தவறியமை மற்றும் பொறுப்புக் கூற வேண்டிய நிலையில் இருந்தவர்கள் காட்டிய அலட்சியம் குறித்து ஆணைக்குழுவின் அறிக்கையில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், கடமை தவறிய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் துயரச் சம்பவத்தைப் பயன்படுத்தி சிலர் வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் ஒருபுறமிருக்க, அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் ஆணைக்குழுவின் வெளிப்படுத்தல்கள் மூலம் உண்மைத் தன்மை தற்போது பொதுவெளியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் சாட்சியங்கள் அடங்கிய அறிக்கைகள் தொடர்ந்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக