வெள்ளி, 17 அக்டோபர், 2025

மட்டக்களப்பு சட்டவிரோத மணல் அகழ்வு - 13 உழவு இயந்திரங்களுடன் !!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் முந்தனையாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்யும் விசேட நடவடிக்கையை கிழக்கு மாகாண விசேட அதிரடிப்படை இன்று (17) அதிகாலை மேற்கொண்டது. இதன் போது, 13 உழவு இயந்திரங்களையும் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 


கிழக்கு மாகாண விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேசர் ரத்தினவீரவின் ஆலோசனையில், மட்டக்களப்பு-அம்பாறை பொலிஸ் வலய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.என். குலதுங்கவின் வழிகாட்டலில், அரந்தலாவை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி சந்தனம் மற்றும் கிச்சிறி தலைமையிலான குழுவினர், சம்பவ தினமான இன்று அதிகாலை 2:00 மணிக்கு முந்தனையாறு ஆற்றுப் பகுதியை முற்றுகையிட்டனர். 

இதன் போது, சட்டவிரோதமாக மணல் அகழ்த்து உழவு இயந்திரங்களில் ஏற்றிக்கொண்டிருந்த 13 பேரை மடக்கி கைது செய்ததுடன், 13 உழவு இயந்திரங்களையும் மணலுடன் மீட்டு, கைது செய்யப்பட்டவர்களையும் இயந்திரங்களையும் கரடியனாறு பொலிஸ் நிலையத்தினரிடம் ஒப்படைத்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் கித்துள் மற்றும் கரடியனாறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு நீண்ட காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks