சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23ம் தேதி இரவு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், தனது காதலனான 4ம் ஆண்டு மாணவனுடன் தனியாக பேசி கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து மாணவியை மிரட்டி ‘பாலியல் தொந்தரவு’ செய்தார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, அளித்த புகாரின் படி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளி ஞானசேகரனை, புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஓரிரு நாளிலேயே இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. போலீஸ் துணை கமிஷனர்கள் சினேக பிரியா, ஐமன் ஜமால், பிருந்தா ஆகிய 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ‘சிறப்பு புலனாய்வு குழு’ ஒன்று நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து சிறப்பு விசாரணை குழு கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து ஞானசேகரன் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஆவணங்களை பெற்றது.
பிறகு ஞானசேகரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். அதேநேரம் ஞானசேகரன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த அன்று செல்போனில் வேறு யாரிடமாவது பேசினரா, என்பது குறித்து அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்யும் வகையில் ஞானசேகரனை கடந்த பிப்ரவரி 6ம் தேதி தடயவியல் அறிவியல் துறை அலுவலகத்தில் ஆஜர்படுத்தி ஞானசேகரனிடம் 3 மணி நேரம் குரல் மாதிரி சோதனை நடத்தினர்.
அப்போது கடந்த டிச. 23ம் தேதி மாலை 6.29 மணிக்கு மேல் இரவு 8.52 வரையில் ஞானசேகரன் மாணவியை மிரட்டும் வகையில் செல்போனை ‘பிளைட் மோடில்’ தான் வைத்திருந்தது அறிவியல் பூர்வமான ஆய்வு மூலம் உறுதியானது என்று தடயவியல் அறிவியல் துறை அறிக்கை அளித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக