புதன், 11 செப்டம்பர், 2024

22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்களில் 10 பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நேற்று (10) உத்தரவிட்டுள்ளது. இரண்டு படகுகளில் தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து வந்த 22 மீனவர்களில் 10 மீனவர்களுக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


 குறித்த இந்திய மீனவர்கள் 22 பேரும் எல்லை தாண்டி புத்தளம் - கற்பிட்டி வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில். ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இரவு கடற்படையிரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குறித்த இந்திய மீனவர்கள் பயணித்த இரண்டு விசைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

 இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். சட்டவிரோதமாக இலங்கை எல்லைக்குள் நுழைந்தமை தொடர்பில் இந்த 22 இந்திய மீனவர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது. இதன்போது சந்தேக நபர்களான இந்திய மீனவர்கள் 22 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான் உத்தரவிட்டிருந்தார். 

 இந்த நிலையில், சந்தேக நபர்கள் 22 பேரும் கடந்த 3 ஆம் திகதி புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேக நபர்களான 22 இந்திய மீனவர்களில் 12 பேர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக, குறித்த 12 மீனவர்களுக்கும் தலா ஒன்றரை கோடி ரூபா வீதம் அபராத தொகையை செலுத்துமாறும், அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

 மேலும், ஏனைய 10 பேரையும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், குறித்த 10 இந்திய மீனவர்களும் நேற்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

 இதேவேளை, இந்த வருடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இலங்கையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 44 இந்திய மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், 322 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஈழத் தமிழர்களின் தவிர்க்க முடியாத சுயநிர்ணயத்தை jvP எப்போதும் மறுத்தது.

ஒற்றையாட்சி அரசை ஒருங்கிணைத்து, கொழும்பில் அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அதன் நீண்டகால லட்சியத்தை நனவாக்கும் அமெரிக்க முயற்சிகளுக்கு ஜே.வி...