தேர்தல் முடிவுகள் எப்போது தெரியும்?
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பொருளாதார நெருக்கடி இன்னும் முற்றிலுமாக தீராத நிலையில், அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. திட்டமிட்டபடி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
தலைநகர் கொழும்பில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பெரிய அளவில் வரிசை ஏதும் இல்லை. வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் காத்திருக்காமல் உடனே வாக்களித்துவிட்டுச் செல்ல முடிவதாக அங்குள்ள நமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
வாக்களித்துவிட்ட வாக்காளர்களுக்கு இடது கையின் சுண்டுவிரலில் அழியாத மை வைக்கப்படுகிறது. இதற்காக, பிரத்யேக பேனாவை வாக்குச்சாவடி அலுவலர்கள் பயன்படுத்துகின்றனர்.தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
அதேநேரத்தில், வாக்குப்பதிவு மந்தமாகவே இருக்கிறது. வாக்குச்சாவடிகளுக்கு வெளியே மக்கள் காத்திருப்பதை காண முடியவில்லை.
இந்த ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுதான் மிக நீளமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
களத்தில் 38 வேட்பாளர்கள் இருப்பதே இதற்குக் காரணம்.இலங்கையில், காலை 7 மணிக்குத் துவங்கிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும். வாக்குப்பதிவு முடிவடைந்த சில மணி நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை துவங்கும். சனிக்கிழமை நள்ளிரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரியவரலாம்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரை, விருப்ப வாக்கு அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.
அதன்படி வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்வுசெய்யலாம். 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லையென்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, அவர்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படும். அதில் அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக