புதன், 22 மே, 2024

பாலஸ்தீன மாணவர் போராட்டமும் புலம்பெயர்-ஈழத்தமிழ் மாணவர் இணைப்பின் தேவைப்பாடும்!

15ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்தை ஈழத்தமிழர்கள் கடக்கின்றார்கள். எனினும் ஈழத்தமிழர்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை நினைவுகூரக்கூட போராட வேண்டிய சூழலிலேயே காணப்படுகின்றது. 


உலகம் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு நீதியை கோரும் சமதளத்தில், 15 ஆண்டுகளிற்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை சர்வதேசத்தில் போதிய கவனத்தை பெறாது பலவீனப்பட்டு போகும் அபத்தத்தில் காணப்படுகின்றது. 

ஒரு தசாப்தத்தை சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்களின் நீதிசார்ந்த உரையாடல் கடந்தும், முன்னேற்றங்களின் தேடலும் எதிரான பதில்களையே கொண்டுள்ளது. நிலைமாறுகால நீதி, உலகளாவிய நீதி என பல பரிமானங்களில் நீதி உரையாடப்படுகின்ற போதிலும் செயல்வடிவங்களில் யாவும் பூச்சிய நிலையையே பகிருகின்றது. சர்வதேச அரசியல் இராஜதந்திரிகளுடன் உரையாடும் தமிழ் அரசியல் தரப்பு, சர்வதேச சிவில் சமுக செயற்பாட்டாளர்களின் ஆதரவை திரட்ட தவறியுள்ளது. 

சமகாலத்தில் மேற்கு நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது மேற்கு நாட்டு அரசியலை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. இத்தகையதொரு ஆதரவு தளத்தை தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இனப்படுகொலைக்கு திரட்ட முடியாமை தமிழ் அரசியல் தந்திரோபாய பலவீனமாகவே காணப்படுகின்றது. 

இக்கட்டுரை பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான மேற்கு நாடுகளின் பல்கலைக்கழக மாணவர் போராட்டங்களின் அரசியல் முக்கியத்துவத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனியக் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது முன்னோடியில்லாத வகையில் அக்டோபர்-7 அன்று தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் காசா நிலப்பரப்பரப்பில் உக்கிரமான போரை நிகழ்த்தி வருகின்றது. 

காசாவில் குறைந்தது 34,789 பேரைக் கொன்றுள்ளதாகவும், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஹமாஸ் நடத்தும் பிராந்தியத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் காசா பகுதியில் இனப்படுகொலையை நிகழ்த்துவதாக தென்னாபிரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. மேலும் கொலம்பியா, பொலிவியா மற்றும் பெலிஸ் ஆகிய இலத்தின் அமெரிக்க நாடுகள் இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியில் நிகழ்த்தும் இனப்படுகொலை தாக்குதல்களை கண்டித்து இராஜதந்திர உறவை துண்டித்துள்ளனர். 

எனினும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ச்சியாக இராணுவ மற்றும் ஆயுத உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெப்ரவரி-08அன்று அமெரிக்க செனட் 95 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவிப் பொதிக்கு வாக்களிக்கத்திருந்தது.

இவ் உதவி தொகையில், இஸ்ரேலுக்கு 14 பில்லியன் டொலர் உதவி உட்பட உக்ரைன் மற்றும் இந்தோ-பசிபிக் நட்பு நாடுகளுக்கான உதவித்தொகைகளும் உள்ளடங்கியிருந்தது. இந்நிலையிலேயே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மக்களிடையே தமது அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கை தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 

 காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலின் காரணமாக, இஸ்ரேலிய நிறுவனங்களுடனான கூட்டுறவை நிறுத்தக் கோரி, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஏப்ரல் நடுப்பகுதியில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அமெரிக்க பல்கலைக்கழக ஆர்ப்பாட்டங்களால் ஈர்க்கப்பட்ட பல்வேறு ஐரோப்பிய பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக அரங்குகள் மற்றும் வசதிகளை ஆக்கிரமித்து வருகின்றனர். 

ஆரம்பத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் காசா ஒற்றுமை முகாம் எனத் தொடங்கியது. அங்கு மாணவர்கள் தங்கள் நிறுவனத்தை இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து விலக்கி வைக்க வளாகத்திற்குள் முகாமிட்டனர். பின்னர் இது கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களுக்கும் பரவியது. தற்போது, அமெரிக்காவில் உள்ள 20இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றன.

 பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த ஆயுதமேந்திய பொலிசாரை பல்கலைக்கழக நிர்வாகம் வரவழைத்துள்ளது. ஏப்ரல்-18அன்று நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதற்கட்ட கைதுகளில் இருந்து 2,700 க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கல்லூரி வளாகங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாரின் ஈடுபாடு மாணவர் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. மே மாதம் முதல் வாரங்களில் மேற்கு ஐரோப்பா முழுவதும் காசா யுத்தம் தொடர்பாக இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டிக்குமாறு பல்கலைக்கழகங்களைக் கோரி மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் மோதல்கள் மற்றும் டஜன் கணக்கான புதிய கைதுகளைத் தூண்டியுள்ளது. நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்திருந்தனர். 

பாலஸ்தீனத்திற்கான ஆம்ஸ்டர்டாம் மாணவர்களின் அமைப்பின் உறுப்பினரான மாயா, 'கூடார முகாம்கள் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களால் ஈர்க்கப்பட்டதாகவும், அவர்களுடன் அவர்கள் ஒற்றுமையாக நிற்கிறார்கள்' என்றும் தெரிவித்துள்ளார். 

கிழக்கு ஜேர்மனிய நகரமான லீப்சிக்கில், 50 முதல் 60 பேர் வரையிலான மாணவர்கள் விரிவுரை மண்டபத்தை ஆக்கிரமித்து, 'இனப்படுகொலைக்கு எதிரான பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு' என்று எழுதப்பட்ட பதாகைகளை அசைத்ததாக பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேலும், பேர்லினின் இலவச பல்கலைக்கழகத்தில், 80 பேர் வரை வளாகத்தின் முற்றத்தில் ஒரு எதிர்ப்பு முகாமை அமைத்ததை அடுத்து, காவல்துறை ஆர்ப்பாட்டத்தை அகற்றியது. பிரான்ஸில், புகழ்பெற்ற சயின்ஸ் போ பல்கலைக்கழகத்தின் பிரதான மண்டபத்தில் தங்களைத் தாங்களே முற்றுகையிட்ட சுமார் 20 மாணவர்களைக் கலைக்க இரண்டு முறை காவல்துறை தலையிட்டது. 

மேலும் சுமார் 13 மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், லொசேன், ஜெனிவா மற்றும் சூரிச் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கு எதிர்ப்புகள் பரவின. ஆஸ்திரியாவில், டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் வியன்னா பல்கலைக்கழக வளாகத்தில் முகாமிட்டுள்ளனர். இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்த பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பை கையாள மேற்குலக நாடுகள் பல வியூகங்களை திட்டமிடுகின்ற போதிலும், அதன் முடிவுகள் எதிர்வினையாகவே அமைகின்றது. 

சில பல்கலைக்கழக தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் மாணவர் எதிர்ப்புகளை கடுமையாக கண்டனம் செய்து, 'யூத எதிர்ப்பு' என்று அழைத்தனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டை நிராகரிக்கிறார்கள். 

பல யூத ஆர்வலர்கள் மற்றும் சில ஆர்த்தடாக்ஸ் யூதர்களும் பாலஸ்தீன விடுதலையை மையப்படுத்திய போராட்டத்தில் இணைந்துள்ளனர். 'ஹோலோகாஸ்டில் இருந்து தப்பியவர்களின் குழந்தையாக, நாங்கள் அனுபவித்த சிலவற்றை எனது சொந்த மக்கள் செய்வதைப் பார்ப்பது என் மனதைத் தொந்தரவு செய்கிறது' என்று யூத போர் எதிர்ப்பு போராட்டக்காரர் சாம் கோப்ராக் அல் ஜசீராவிடம் ஒரு வளாக கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேலிலும் ஆங்காகங்கே போருக்கு எதிரான மக்கள் போராட்டம் இடம்பெறுவது தொடர்பில் சர்வதேச செய்திகள் வெளிப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களிடையே ஆம்பிக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் வியாபித்துள்ளது போன்றே, பல்கலைக்கழக ஆசிரியர்களையும் ஈர்க்க ஆரம்பித்துள்ளது. 

பல துணிச்சலான ஆசிரிய உறுப்பினர்கள் தங்களை நெருப்பு வரிசையில் ஈடுபடுத்தியுள்ளனர். ஏப்ரல்-22 அன்று, நியூயார்க் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பாலஸ்தீன ஒற்றுமை முகாமைச் சுற்றி ஒரு சங்கிலியை உருவாக்கியிருந்தனர். நியூயார்க் காவல் துறை, முகாமை அகற்றுவதற்காக வளாகத்திற்குள் நுழைந்தபோது சட்ட அமலாக்கத்துடன் ஆசிரியர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. 

ஆனால் அவர்கள் தங்கள் மாணவர்களை, முழு ஆயுதம் ஏந்திய கலகக் காவலர்களுக்கு எதிராக வெறுமனே பாதுகாப்பதாக சாட்சிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, பல துறைகளைச் சேர்ந்த நியூயார்க் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியூயார்க் காவல் துறையின் தலையீட்டைக் கண்டித்து பல்கலைக்கழகத் தலைமைக்கு கடிதங்கள் எழுதினர். நியூயார்க் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் ஆசிரியர்களின் கடிதம் காவல்துறையின் தலையீட்டை 'பல்கலைக்கழகத்தின் மீது ஒரு கறை' என்று அழைத்துள்ளனர். 

அவ்வாறே மே-1அன்று, விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் முகாமிட்ட போராட்டக்காரர்களுக்கு எதிராக மாநில கால்துறை ஈடுபட்ட போது, ஆசிரியர்கள் முன் வரிசையில் இருந்தனர். இதன்போது பல பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மற்றும் சட்ட அமலாக்கத்திற்கு இடையில் நின்று, இந்த ஆசிரிய உறுப்பினர்கள் கல்வியாளர்களாக நமது பொறுப்புகளை நினைவூட்டியுள்ளனர். 

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள், அமெரிக்காவின் ஆதிக்க கொள்கைக்கு எதிராக வரலாறு தோறும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்துள்ளமையின் ஒரு பகுதியாகவே இஸ்ரேல் எதிர்ப்பும் பாலஸ்தீன ஆதரவும் காணப்படுகின்றது. 

கடந்த 60 ஆண்டுகளில், வியட்நாம் போர், நிறவெறி தென்னாப்பிரிக்காவுடனான உறவுகளின் கேள்வி மற்றும் ஈராக் போர் உட்பட, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பொதுமக்கள் மீது கட்டாயப்படுத்திய ஒவ்வொரு பெரிய தார்மீகப் பரீட்சையையும் அது கடந்து வந்துள்ளது.

கொலம்பியாவில் உள்ள மாணவர்கள், இஸ்ரேலிய அரசாங்கத்துடன் பெரிய ஒப்பந்தம் செய்துள்ள கூகுளிலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களில் பட்டியலிட அனுமதிக்கும் யுசைடிnடி நிறுவனத்திலும் தங்கள் பள்ளி பங்குகளை விற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். 

1980களில் தென்னாப்பிரிக்கா நிறவெறி ஆட்சியின் கீழ் இருந்தபோது அதனுடன் வணிகம் செய்த நிறுவனங்களை எதிர்ப்பாளர்கள் குறிவைத்தபோது மாணவர்கள் தற்போதைய இயக்கம் மற்றும் செயல்பாட்டிற்கு இடையே இணையை வரைந்துள்ளனர். '

நீங்கள் கொலம்பியாவிற்குச் செல்லும்போது, அமெரிக்க எதிர்ப்பு வரலாற்றில் ஒரு கௌரவமான இடத்தைப் பெற்றுள்ள ஒரு நிறுவனத்திற்கு நீங்கள் செல்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்' என்று போர்டாம் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் ஆப்பிரிக்க மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க ஆய்வுகள் பேராசிரியர் மார்க் நைசன் கூறினார். 

இன்றும் கொலம்பியாவில் ஆரம்பிக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு போராட்டமே மேற்குலக அரசுகளின் வெளியுறவுக்கொள்கையில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. எனவே, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக திரண்ட பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டமானது, 

பாலஸ்தீனம் தொடர்பிலான ஐரோப்பா நாடுகளின் வெளியுறக்கொள்கையில் சடுதியமாக மாற்றத்தை பிரதிபலித்துள்ளது. குறிப்பாக ஐ.நா.வில் பாலஸ்தீனத்துக்கான உறுப்புரிமை வழங்கும் தீர்மானத்தை ஐரோப்பிய நாடுகள் எதிர்த்திருக்கவில்லை. இது மாணவர் புரட்சியின் வெளிப்பாடாகும். எனினும் இத்தகையதொரு மாணவர் புரட்சியை தமிழர்களுக்கு சார்பாக தமிழ் மக்களால் திரட்ட முடியாமை தமிழ் மக்களின் தந்திரோபாய பலவீனத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றது. 

தமிழ் பரப்பில் பலமானதொரு புலம்பெயர் கட்டமைப்பு காணப்படுகின்றது. எனினும் புலம்பெயர் சமுகத்தின் இளைய வாரிசுகள் தாயக இளையோருடன் ஆரோக்கியமான இணைப்பை பெறவில்லை. இது எதிர்காலத்தில் தமிழ் புலம்பெயர் சமுகத்திற்கும் தாயகத்திற்குமான இடைவெளியையே அதிகரிக்கக்கூடியதாகும். 

மேற்கு நாடுகளில் இடம்பெறும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திலிருந்து படிப்பினையை பெறுவதாயின், தாயகத்தின் பல்கலைக்கழக மாணவ அமைப்புக்களுடன் புலம்பெயர் தமிழ் மாணவர்களை முதற்கட்டமாக இணைப்பது காலத்தின் தேவையாகும்.

 ஐ.வி.மகாசேனன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வேல்ஸ் மற்றும் தெற்கு இங்கிலாந்தின் பெரும்பகுதி ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் எச்சரிக்கை!!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரிய பகுதிகளுக்கு வானிலை அலுவலகம் மஞ்சள் வானிலை எச்சரிக்கைகளை வெளியிடுவதால், வார இறுதியில் வெறும் 12 மணி நேர...