கடந்த 15 வருடங்கள் திட்டமிட்ட அடிப்படையில் செயல்பட்டு மியான்மார் (பர்மா) மற்றும் சிரியாவிற்கு கொண்டு வந்த குற்றவியல் நீதி விசாரணை தரத்தில் அமைந்த சாட்சியங்கள் திரட்டும் பொறிமுறை (Sri Lanka Accountability Project - SLAP) ஒன்று 2021 மார்ச்சில் ஐ.நா.மனித உரிமை கழகத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை அதன் சகோதர அமைப்புகளுடன் இணைந்து கொண்டு வரப்பட்டது.
இது மீண்டும் செப்டம்பர் 2022 தீர்மானம் மூலம் பலப்படுத்தப்பட்டது.
இதற்கான சாட்சியங்கள் ஐ.நா. அதிகாரிகளினால் மிகவும் பொறுப்பாகவும் இரகசியம் பேணும் நடைமுறை அடிப்படையிலும் திரட்டப்பட்டு வருகின்றது. நாம் பல்வேறு தடவைகள் பலரை அணுகி சாட்சியங்களை திரட்டி தர கோரினோம், அல்லது அவர்களை நேரடியாக இதனை கையாளும் பொறிமுறைக்கு அறிமுகப்படுத்தி விடுகின்றோம் என்றும் தாழ்மையாக விண்ணப்பித்து வருகின்றோம்.
இங்கே மிகவும் கவலைக்குரிய விடயம் எதுவென்றால் தத்தமது அரசியல் தேவைகளுக்காக அல்லது மேடைகளுக்காக அல்லது ஊடக செயல்பாட்டிற்காக பல தடவைகள் “இன அழிப்பு” என்று உரக்க குரல் கொடுத்த பலர் இப் பொறிமுறையை (SLAP) பயன்படுத்தி சாட்சியம் திரட்டவோ அல்லது மக்கள் மத்தியில் எடுத்து செல்லவோ முன்வராதது.
உரிய நேரத்தில் காத்திரமான கடமைகளை செய்யாமல் ஏனையோரை குற்றம் சாட்டுவது மட்டுமே தமது பாதையாக வரித்து கொண்டவர்களைப் பற்றி நாம் கரிசனை கொள்ள வேண்டியதில்லை.
ஆனால் தமிழ் தேசியத்தையும் இன விடுதலையையும் உயிராக நேசிப்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த இறுதி கட்டத்திலாவது துரித கதியில் ஐ.நா. பொறிமுறைக்கான சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகளுக்கு உதவ முன் வரவேண்டும் என்று வேண்டி கொள்கின்றோம்.
வரலாற்றின் தவறான பக்கங்களில் நாம் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் உடன் செயல்பட முன்வாருங்கள்.
நிச்சயம் வெல்வோம்.
இது குறித்த விடயங்கள் இந்த காணொளிகளில் விபரமாக உரையாடப்படுகின்றது.