சனி, 15 ஆகஸ்ட், 2026

சிறைச்சாலை அதிகாரிகளை நோட்டமிட்ட நபர் கைது

சிறைச்சாலை அதிகாரிகளின் தகவல்களை இரகசியமாகச் சேகரித்து வந்த நபர் ஒருவரை சகஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் அண்மையில் புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தின் போது உயிரிழந்த மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்பவரின் நெருங்கிய தொடர்பை பேணியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


குறித்த சந்தேகநபர், அஸ்மான் என்பவரால் கடந்த ஆண்டு தெஹிவளை வட்ரப்பல வீதியில் நடத்தப்பட்ட இரட்டைக்கொலை சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் என்றும் தெரியவந்துள்ளது. புதிய மெகசின் சிறைச்சாலையில் பதற்றம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர். 

மேலும், இவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள 'கொஸ் மல்லி' என்ற குற்றவாளியின் நெருங்கிய சகா என்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கைபேசியைப் பரிசோதித்த போது, 'கொஸ் மல்லி' என்பவருடன் நடத்திய பல உரையாடல்களின் குரல் பதிவுகளைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

 அந்த தொலைபேசி உரையாடல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் திரட்டப்பட்ட தகவல்கள் உள்ளடங்கியிருந்ததுடன், அவர்களுக்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

மேற்கு மிட்லாண்ட்ஸ் காட்டுத்தீ நால்வர் மருத்துவமனைக்கு, வீடுகள் சேதமடைந்தன.

மேற்கு மிட்லாண்ட்ஸில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் தீ வேகமாகப் பரவியதில், நான்கு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் மற்றும் பல வீடுகள் சேதமடைந்தன. 

இந்த ஆண்டின் இங்கிலாந்தின் வெப்பமான நாளான வியாழக்கிழமையன்று, ஸ்டோர்பிரிட்ஜில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்திற்கு அருகில் 16 ஹெக்டேர் (40 ஏக்கர்) பரப்பளவில் ஏற்பட்ட புல்வெளித் தீ, அப்பகுதியில் ஏற்பட்ட பல குறிப்பிடத்தக்க தீ விபத்துக்களில் ஒன்றாகும். 

வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்குச் சற்று முன்னதாக, வேகமாகப் பரவும் தீ குறித்து மேற்கு மிட்லாண்ட்ஸ் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 60 பணியாளர்களுடன் பன்னிரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. 

மூன்று தீயணைப்பு வீரர்களும் ஒரு குழந்தையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

மேலும் ஆறு பேர் புகை சுவாசித்ததற்காக சிகிச்சை பெற்றனர். சில உள்ளூர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன, அதே நேரத்தில் புகை, தீ மற்றும் விழுந்த மரங்கள் காரணமாக அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டன.

திருக்கேதீஸ்வரம் ஆலய தொல்பொருள் திணைக்கள அத்துமீறல்!!

மன்னார்-திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருள் திணைக்களம் அத்துமீறல் முயற்சி மேற்கொண்டதாக தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று (13) நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட போதே ப.சத்தியலிங்கம் இந்த விடயத்தினைக் ஒருங்கிணைப்பு குழுவிற்கு தெரியப்படுத்தினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களம் ஆலய வளாகத்திற்குள் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் இரவு நேரத்தில் இது தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடமென்று பெயர்ப்பலகை நாட்டியுள்ளது.

அந்த பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் ஒரு அபிவிருத்தியும் மேற்கொள்ளக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறு இரவு நேரத்தில் இவ்வாறு செய்ய முடியும். இந்த ஆலயம் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

 ஆலயச்சூழல் தொல்பொருளுடன் தொடர்புடையது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.ஆனால், ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் குறித்த பெயர்ப்பலகையை நாட்டியது மட்டுமல்லாமல், அந்த பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் கூட அந்த ஆலயத்தின் உண்மையான வரலாற்றை மாற்றியமைப்பதாக உள்ளது. 

 குறித்த ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படாமல் முற்றிலுமாக வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியுமா என கேட்க விரும்புகிறேன்.

ஏற்கனவே அங்கு அகழ்வாராய்ச்சிகள் நடந்த இடங்களில் சில பதாகைகள் தொல்பொருள் திணைக்களத்தால் நாட்டப்பட்டிருக்கின்றது. அதற்கு மேலதிகமாகவே இவை தற்போது யாருக்கும் அறியப்படுத்தப்படாமல் நாட்டப்பட்டுள்ளது/

ஆபிரகாம் லிங்கன் கப்பல் தகவல்!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் உள்ள சில மாலுமிகள் கப்பலில் இருந்து கடலில் குதித்துத் தற்கொலைக்கு முயன்றதாகவும், கப்பலில் உள்ளவர்களின் மனநலம் குறித்து அவர்களது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளதாகவும் இராணுவ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்சேத் நேற்று (14) கூறுகையில், கப்பலின் நிலைமை குறித்த செய்திகள் முழுமையாகத் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 250 நாட்களுக்கும் மேலாக பயணிக்கும் இந்த விமானம் தாங்கிப் போர்க்கப்பல் கடந்த நவம்பர் மாதம் கலிபோர்னியாவிலிருந்து தென் சீனக் கடலுக்குப் புறப்பட்டது. 

பின்னர் பெப்ரவரியில் ஈரான் மீதான தாக்குதல்களுக்கு முன்னதாக இது மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டது. ஆரம்பத்தில் மே மாதத்துடன் முடிவடைய வேண்டிய இவர்களின் சேவைக்காலம், பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 நீண்ட காலம் பணிக்கமர்த்தல் மற்றும் ஏனைய விடயங்களால் அதன் பணியாளர்கள் பாரிய மன அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ளனர். 

எனினும் திரும்பும் திகதி எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், முன் திட்டமிடப்பட்ட சுழற்சி முறையின்படி, இக்கப்பலுக்குப் பதிலாக 'யுஎஸ்எஸ் ஜோர்ஜ் வொஷிங்டன் கப்பலை அனுப்ப அமெரிக்கா ஆயத்தமாகி வருவதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறுவர் சித்திரவதை தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!!

சிறுவர்களை கைவிடுதல், உடலளவிலும் மனதளவிலும் சித்திரவதைக்கு உட்படுத்துதல் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 

மாதமொன்றிற்கு 600 முதல் 1,000 வரையிலான முறைப்பாடுகள் கிடைப்பதாக அதன் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் பெற்றோருக்கு, தண்டனைச் சட்டக்கோவையின் படி 2 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்றும் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் குறிப்பிட்டார்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

வெப்பம் NHS செவிலியர்கள் மயங்கி விழுவதாகத் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

கடுமையான வெப்பம் மற்றும் 'மனிதாபிமானமற்ற' சூழலால் செவிலியர்கள் மயங்கி விழுவதாகத் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.கடும் வெப்பத்தால் ஏற்படும் "மனிதாபிமானமற்ற மற்றும் சாத்தியமற்ற" சூழ்நிலைகளுக்கு மத்தியில், பணி நேரங்களில் செவிலியர்கள் மயங்கி விழுவதாக அவர்களின் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. அதேவேளையில், காலநிலை தழுவலின் "பெரிய கேள்விகளை" எதிர்கொள்வதாக ஆண்டி பர்ன்ஹாம் உறுதியளித்துள்ளார். 

காலநிலை நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், தழுவல் நடவடிக்கைகளின் அவசரத்தை முழுமையாக அங்கீகரிக்க வேண்டும் என்று தொழிலாளர் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களிடமிருந்து அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு மத்தியில், தொடர்ந்து வரும் கோடைக்கால கடும் வெப்பத்தால் ஏற்பட்ட உடனடி நெருக்கடிகளில் தற்போதைக்கு கவனம் செலுத்துவதாக பர்ன்ஹாம் கூறினார். 

 அரசாங்கத்தின் கோப்ரா அவசரகாலக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு பேசிய பர்ன்ஹாம், தனது அரசாங்கம் பரிசீலித்து வரும் வட கடலில் மீண்டும் துளையிடும் பணிகளுக்கு எதிராக இந்தக் கோடைக்காலம் ஒரு காரணத்தை உருவாக்கிவிட்டதா என்று கூற மறுத்துவிட்டார். 

 "நாம் தற்போது இருக்கும் சூழ்நிலையை இன்று கையாள்வதும், நாடு முழுவதும் தீவிரமான சம்பவங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதும் மிகவும் முக்கியம்," என்று அவர் கூறினார்.

யாழ். ஆனைக்கோட்டையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள்

யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாவாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் இந்தக் காட்சிப்படுத்தல் நிகழ்வானது இன்று (13.08.2026) மற்றும் நாளை (14.08.2026) ஆகிய இருதினங்கள் இடம்பெறவுள்ளது. இக் கண்காட்சியில் எமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பண்டைய பண்பாட்டு எச்சங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவும் காட்சிப்படுத்தப்படுகின்றன.இக் கண்காட்சியில் ஈழத்தின் பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தின் தொன்மைச் சிறப்பையும் நேரில் கண்டுகொள்ள முடிகிறது.இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதகுருக்கள், வாழ்நாள் பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராசா, தொல்லியல் பேராசிரியர் ராஜ்சேமதேவா, யாழ். பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் அனித்தா சசிதரன். மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரபாகரமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், களனி பல்கலைக்கழக மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மக்கள் என பலரும் கலந்துகொண்டு தொல்லியல் சின்னங்களை பார்வையிட்டனர்.

Thank You Google

Thank You Google
Thanks