வெள்ளி, 4 செப்டம்பர், 2026

மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழம் சிறுவன் பலி!!

மட்டக்களப்பு, வெல்லாவெளியில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

மட்டு வெல்லாவெளி காவல்துறை பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (03) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6ம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று மாலை எடுத்து உண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்ததையடுத்து அவரை உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதால் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

 இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட் படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.றுவன் மரத்தடியில் விழுந்து கிடந்த நாவற்பழத்தை எடுத்துச் சாப்பிட்டதாகவும், அதில் பாம்பின் விஷம் பட்டிருந்ததாலேயே இந்த மரணம் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. 

ஆனால், மருத்துவ மற்றும் விஞ்ஞான ரீதியாக ஆராயும்போது, பாம்பின் விஷம் பட்ட ஒரு பழத்தைச் சாப்பிட்டதால் ஒருவர் உயிரிழப்பது என்பது முற்றிலும் சாத்தியமற்ற ஒரு விஷயமாகும். இது மக்களிடையே நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு தவறான நம்பிக்கையே தவிர இதில் எந்த அறிவியல் உண்மையும் இல்லை. ​

இதற்கான முக்கிய காரணம், பாம்பின் விஷம் என்பது அடிப்படையில் சில புரதங்கள் மற்றும் நொதிகளால் ஆன ஒரு திரவமாகும். பாம்பு ஒருவரைக் கடிக்கும் போது அந்த விஷம் தோலினூடாக நேரடியாக இரத்தத்தில் கலப்பதால் மட்டுமே அது மனிதர்களுக்கு ஆபத்தாக மாறுகிறது. ஆனால், விஷம் பட்ட ஒரு பழத்தையோ அல்லது உணவையோ நாம் சாப்பிடும்போது, அது நேரடியாக நமது இரைப்பையைச் சென்றடைகிறது. 

நமது வயிற்றில் சுரக்கும் சக்திவாய்ந்த அமிலங்கள், சாதாரண உணவைச் செரிப்பது போலவே அந்த விஷத்திலுள்ள புரதங்களையும் சிதைத்து முற்றிலும் செயலிழக்கச் செய்துவிடும். விஷத்தை உண்பதும், அது நேரடியாக இரத்தத்தில் செலுத்தப்படுவதும் முற்றிலும் வெவ்வேறானவை. ​அப்படியானால் இந்த மரணத்திற்கான உண்மையான காரணம் என்னவாக இருக்கலாம் என்று சிந்தித்தால், வேறு சில நடைமுறைச் சாத்தியங்களே உள்ளன. 

சிறுவன் பழத்தைப் பொறுக்கும்போது, எறும்பு கடிப்பது போன்று மிகச் சிறிய வலியை மட்டுமே ஏற்படுத்தக்கூடிய கட்டுவிரியன் போன்ற கொடிய பாம்புகள் ஏதேனும் நேரடியாகக் கடித்திருக்கலாம், அதைச் சிறுவனும் உணராமல் விட்டிருக்கலாம். அல்லது கீழே கிடந்த பழத்தில் அல்லது அந்த நிலப்பகுதியில் வீரியமிக்க விவசாயப் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருக்கலாம். 

இது தவிர, திடீரென ஏற்பட்ட கடுமையான ஒவ்வாமை (அலர்ஜி) அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பாதிப்புகள் கூட இந்தத் திடீர் மரணத்திற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். ​எனவே, "பாம்பின் விஷம் பட்ட நாவல் பழம்" என்பது ஆரம்பக்கட்ட விசாரணையின் யூகமே தவிர, அது முடிவான உண்மையல்ல. 

சிறுவனின் உடற்கூற்றுப் பரிசோதனை (Post-mortem) முடிவுகள் மூலமாக மட்டுமே மரணத்திற்கான உண்மையான காரணத்தை மருத்துவத்துறையினரால் உறுதியாகக் கூற முடியும். அதுவரை தேவையற்ற அச்சத்தையும், அறிவியலுக்குப் புறம்பான தகவல்களையும் பகிர்வதைத் தவிர்த்து, துயரத்தில் இருக்கும் அந்தச் சிறுவனின் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்போம்.

நீலாங்கரை, உத்தண்டி பகுதிகளில் 21 பங்களாக்களுக்கு நோட்டீஸ்

துரைப்பாக்கம், செப்.4: கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட 21 சொகுசு வீடுகளுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. 

கிழக்கு கடற்கரை சாலை என்பது சென்னை திருவான்மியூரில் தொடங்கி கன்னியாகுமரி வரை நீண்டுள்ள ஒரு அழகிய மற்றும் முக்கியமான கடலோர சாலையாகும். இதில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடற்கரை ரிசார்ட்டுகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கலாச்சார மையங்கள், கேளிக்கை விடுதிகள் அதிகளவில் அமைந்துள்ளன. 

இந்த பகுதியின் கடற்கரையின் அழகை ரசிப்பதற்காக பல பிரபலங்களும், வசதி படைத்தவர்களும் கோடிக்கணக்கில் செலவு செய்து, கடற்கரை அருகில் சொகுசு பங்களாக்களை கட்டி உள்ளனர்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளில், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதியை மீறி கட்டப்பட்ட 21 சொகுசு வீடுகள் மற்றும் பங்களாக்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 அதாவது வீட்டின் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து வீடுகளை காலி செய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பிறகு கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, இடிக்கும் பணிகள் தொடங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த குடியிருப்போரின் மேல்முறையீட்டு மனுக்களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நிராகரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. 

கடற்கரை ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி, 1991ம் ஆண்டுக்கு முன்பு ஏற்கனவே இருந்த சாலைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட உள்கட்டமைப்பு சார்ந்த உட்புற பகுதியில் உள்ள நிலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி உண்டு.

 இங்கு அனுமதிக்கப்பட்ட தரையமைப்பு குறியீடு 0.8 ஆகும். ஆனால் கடலோரப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட தள பரப்பளவு குறியீடு 0.8 அளவுக்கு மேல் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பது மற்றும் உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 

 அதாவது, 192, 194 மற்றும் 197 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பல கட்டிடங்கள் 0.8க்கும் அதிகமான அனுமதிக்கப்பட்ட தரையமைப்பு குறியீடு அளவை கொண்டு விதிமுறைகளை மீறியுள்ளன.கடற்கரையோரம் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வீடுகள், கட்டிடங்கள் இருக்கக் கூடாது என்ற தீர்ப்பு சில வருடங்களுக்கு முன்பு நீதிமன்றம் வழங்கியது. 

இதை தொடர்ந்து நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி ஆகிய பகுதிகளில் கடற்கரை அருகில் உள்ள வீடுகளை சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 798 வீடுகள் விதிகளை மீறி கட்டப்பட்டு உள்ளதாக தெரியவந்தது. இதுகுறித்த விவரங்களை, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையிடம் மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.

கடலோர ஒழுங்கு முறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை அறிந்த 440 வீடுகளின் உரிமையாளர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையிடம் மேல் முறையிடு செய்து மனு அளித்தனர். 

அதில் 24 வீடுகளின் மனுக்களை தள்ளுபடி செய்த தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை 21 வீடுகளை அகற்ற சென்னை மாநகராட்சி 15வது மண்டத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. 

இதையடுத்து 21 வீடுகளுக்கு சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு மண்டல உதவி கமிஷனர் லோகேஸ்வரன் தலைமையில் செயற்பொறியாளர் மனோகரன் மற்றும் உதவி பொறியாளர்கள் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கினார்.

வியாழன், 3 செப்டம்பர், 2026

2026 பரீட்சையில் யாழ் சுரேந்தர் சபின் செய்த சாதனை

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்றுக் கொண்ட சுரேந்தர் சபின் தமிழ் மொழிமூலம் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்

யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் இவர், தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அதேநேரம் சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியது.

 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (2) மாலை வௌியாகின. இம்முறை அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 139 அமைந்துள்ளதுடன், பெறுபேறுகளுக்கு அமைய 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 

 கடந்த ஒகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சைக்காக 294,132 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுலா முன்னாள் ஜனாதிபதி மதுரோ மனு

அமெரிக்க நீதிமன்றத்தில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மனு தாக்கல் செய்துள்ளார். 

தன்னாதிக்கம் கொண்ட ஒரு நாட்டின் தலைவர் (Head of State) என்ற ரீதியில் தனக்கு சர்வதேச சட்டங்களின்படி குற்றவியல் நடவடிக்கைகளிலிருந்து முழுமையான விலக்குரிமை (Immunity) உள்ளதாக அவர் தனது மனுவில் வாதிட்டுள்ளார். அமெரிக்காவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 3-ஆம் திகதி காரகாஸ் நகரில் வைத்து மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

தற்போது புரூக்ளின் கூட்டாட்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதுரோவின் சட்டத்தரணி பாரி போலாக் (Barry Pollack), மன்ஹாட்டன் நீதிமன்ற நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டீனிடம் (Alvin Hellerstein) சமர்ப்பித்த மனுவில், “நூற்றாண்டுகளாக வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு உள்ள முழுமையான பாதுகாப்பை மீறி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

 2018 மற்றும் 2024 வெனிசுலா தேர்தல்கள் முறைகேடானவை என்று கூறி, 2019-ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்க ஜனாதிபதி நிர்வாகம் மதுரோவை அந்நாட்டின் முறையான ஜனாதிபதியாக அங்கீகரிக்க மறுத்து வருகிறது. 

இந்த மனு மீது அமெரிக்க அரசுத் தரப்பு எதிர்வரும் ஒக்டோபர் 2-ஆம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான விசாரணை நவம்பர் 17-ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நிராகரிக்கப்பட்டால், மதுரோ மீதான நீதிமன்ற விசாரணை 2027 ஜூன் 1-ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

ஈரான் டேங்கர் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக ஈரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. 

ஈரான் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாகவும், சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதாகவும் கூறி, அமெரிக்க ராணுவம் ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது சக்திவாய்ந்த வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் அரசுக்குச் சொந்தமான இரண்டு பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்களும் இந்த தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஹார்முஸ் ஜலசந்தி பகுதி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் ஈரானும் அமெரிக்காவும் உடன்பாட்டை எட்டாமல் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் Tanker-for-Tanker என்ற கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது ஈரானின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் அந்த நாட்டின் டேங்கர் கப்பல்களை தாக்குவது என முடிவு செய்துள்ளது. 

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை கடலில் கண்ணிவெடிகளை பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு அருகில் உள்ள லாராக் தீவு பகுதியில், ஈரான் படையினர் கடல் கண்ணிவெடிகளை ஏற்றி செல்லும் ராக்கெட் லாஞ்சர்களை தயார்படுத்தி கொண்டிருந்தபோது அமெரிக்கப் படைகள் அவற்றை தாக்கி அழித்தன என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 29,108 காவலர் பணியிடங்கள்-முதல்வர் விஜய்

தமிழகத்தில் புதிதாக 29,108 காவல் பணியிடங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார். விரைவில் 10,000 காவலர்கள் நியமிக்கப்படுவர், இதில் 5,000 பெண் காவலர்கள் அடக்கம். 

காவல்துறையை நவீனமயமாக்க ரூ.212 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். காவல் நிலையங்களுக்கு சில்லறை செலவினம் உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 

ரூ.14 கோடியில் டிஎன்ஏ பரிசோதனை மையம் அமைக்கப்படும். 6 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.

புதன், 2 செப்டம்பர், 2026

இங்கிலாந்துக்கு மாணவர் விசா வீட்டை விற்று விமானம் ஏறுவதற்கு முன் !!

வீட்டை விற்று விமானம் ஏறாதீர்கள்—இங்கே வீடே இல்லாமல் போகலாம்! இங்கிலாந்துக்கு மாணவர் விசாவில் வர நினைப்பவர்களே… நான் இதைப் பொறாமையால் எழுதவில்லை. உங்கள் வெளிநாட்டுக் கனவை உடைப்பதற்காகவும் எழுதவில்லை. நான் நடந்த முட்பாதையில் நீங்கள்

வெறும் கால்களுடன் நடக்க வேண்டாம் என்பதற்காக எழுதுகிறேன்! 

நானும் இங்கிலாந்துக்கு மாணவர் விசாவில்தான் வந்தேன். திருமணமான பெண்ணாக, வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு எட்டு மாதங்கள் படித்தும் வேலை செய்தும் வாழ்ந்தேன். 

இன்று நான் சிரித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்துவிட்டு, “இவருக்கு எல்லாமே எளிதாகக் கிடைத்திருக்கும்!” என்று நினைக்காதீர்கள். இங்கு நான் எழுதுவது என் போராட்டத்தின் 20% மட்டுமே! மீதமுள்ள 80% பசி, கண்ணீர், அவமானம், ஏமாற்றம், தனிமை—இன்னும் என் மௌனத்திற்குள்ளேயே புதைந்திருக்கிறது! பேருந்து நிறுத்தத்தில் சாய்ந்திருந்த கர்ப்பிணி நான்! 

கர்ப்பகால வாந்தியால் (Morning Sickness) உடல் தளர்ந்து, பேருந்து நிறுத்தத்தில் நிற்கக்கூட முடியாமல், அங்கிருந்த கம்பத்தில் தலையைச் சாய்த்துக்கொண்டு பேருந்துக்காகக் காத்திருந்த நாட்களை இன்றும் மறக்கவில்லை. அதிகாலையில் வேலைக்குச் செல்வேன். காலை வேலை முடிந்ததும் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழியில் பசியுடன் McDonald’s உணவகத்தில் உணவுக்காகக் காத்திருப்பேன். 

சில நாட்களில் அதுதான்— எனக்கும், என் வயிற்றில் வளர்ந்த குழந்தைக்கும் கிடைத்த முதல் உணவு! கையில் முதுகலைப் பட்டத்தின் கனவு இருந்தது; ஆனால் வயிற்றுக்குள் குழந்தையும், வயிற்றில் பசியும் ஒன்றாக இருந்தன!

 அங்கிருந்து பல்கலைக்கழகம்… வகுப்புகள் முடிந்ததும் மீண்டும் பிற்பகல் வேலை… இரவு வீட்டிற்குச் செல்லும்போது என் கால்கள் மட்டும் நடந்தன; என் உயிர் ஏற்கெனவே சோர்ந்து ஏதோ ஒரு பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தது! ஆனாலும் படிப்பை விட்டுவிடவில்லை. என் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் என் முதுகலைப் பட்டப்படிப்பை (Master’s Degree) முடித்தேன். ஒரு கையில் கர்ப்பத்தின் வலி… மறுகையில் கல்வியின் கனவு… இரண்டையும் கீழே விழாமல் சுமந்துதான் என் பட்டத்தைப் பெற்றேன்! 

ஏழு மாதக் குழந்தையைப் பிரிந்து இரவுப் பணிக்குச் சென்றேன்! மாணவர் விசாவுக்குப் பிறகு எனக்கு வேலை அனுமதி (Work Permit) கிடைத்தது. என் குழந்தைக்கு ஏழு மாதங்கள் மட்டுமே இருந்தபோது, அவளை குழந்தைப் பராமரிப்பாளரிடம் (Childminder) விட்டுவிட்டு வேலைக்குச் சென்றேன்.

குழந்தைப் பராமரிப்புக் கட்டணம், வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து—எல்லாவற்றையும் நாங்களே செலுத்தினோம். என் குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய இரவுகளில், அவளைப் பிரிந்து சென்று 12 மணிநேர நீண்ட இரவுப் பணிகள் செய்தேன். 

அவள் தூங்கும்போது நான் வேலை செய்தேன். அவள் விழித்திருக்கும்போது நான் சோர்ந்து தூங்கினேன். அவள் வளர்ந்த சில அழகான தருணங்களை வாழ்க்கைச் செலவும் விசா அழுத்தமும் என்னிடமிருந்து பறித்துக்கொண்டன! 12 மணிநேரம் வேலை செய்தாலும் சம்பளம் குறைவாகவே இருந்தது. 

ஆனால் குழந்தைப் பராமரிப்பாளருக்கு, “என்னிடம் பட்டம் இருக்கிறது; கட்டணத்தில் தள்ளுபடி செய்யுங்கள்!” என்று சொல்ல முடியுமா? வீட்டு உரிமையாளரிடம், “நான் கர்ப்பமாகப் படித்தேன்; இந்த மாத வாடகையை மன்னித்துவிடுங்கள்!” என்று கேட்க முடியுமா? 

இங்கிலாந்தில் மழை இலவசம்; வீட்டு வாடகை இலவசமல்ல! வாக்குறுதி கொடுத்த நிறுவனம் இறுதியில் கைவிட்டது! நான் வேலை செய்த நிறுவனம் வேலை விசாவுக்கான அனுசரணை (Sponsorship) வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. 

அதை நம்பி உண்மையாக உழைத்தேன். ஆனால் இறுதியில் தேவையான சுமார் £41,000 அளவிலான சம்பளத்தை வழங்க முடியாது என்று சொல்லிக் கைவிரித்துவிட்டார்கள். வாக்குறுதி கொடுத்தபோது அவர்களுக்கு என் உழைப்பு தேவைப்பட்டது,

வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியபோது அவர்களுக்கு நான் தேவையில்லாமல் போனேன்! “கவலைப்படாதீர்கள்; நாங்கள் Sponsor செய்வோம்!” என்ற ஒரு வாக்கியம், எழுதப்பட்ட சட்ட ஆவணம் அல்ல. வாயால் வழங்கப்படும் சில வெளிநாட்டு வாக்குறுதிகள், விசா தேவைப்படும் நேரத்தில் காற்றோடு கரைந்துவிடும்! 

இன்றைய பொதுவான Skilled Worker Visa விதிகளின்படி, வேலை கிடைத்தால் மட்டும் போதாது. நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட Licensed Sponsor ஆக இருக்க வேண்டும்; தகுதியான வேலை, Certificate of Sponsorship (CoS) மற்றும் தேவையான சம்பளம் இருக்க வேண்டும். பொதுவாக £41,700 அல்லது அந்த வேலைக்கான Going Rate—இரண்டில் எது அதிகமோ அதை எட்ட வேண்டும்.

 சில துறைகள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு விதிவிலக்குகள் உள்ளன. Skilled Worker Visa விதிகள் பட்டம் உங்களுக்குச் சான்றிதழைக் கொடுக்கலாம்; ஆனால் அந்தச் சான்றிதழே உங்களுக்கு Sponsorship கொடுக்காது! வேலை முடிந்ததும் ஒரு வயதுக் குழந்தையுடன் வீடு வீடாகச் சென்றேன்! 2011 முதல் 2013 வரை என் வழக்கமான வேலை முடிந்த பிறகும் என் நாள் முடிந்துவிடவில்லை.

அப்போது ஒரு வயதே ஆன என் மகளையும் அழைத்துக்கொண்டு பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணம் செய்து, மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் கற்பித்தேன். ஒரு கையில் பாடப் புத்தகங்கள்… மறுகையில் என் குழந்தை… தோளில் அவளுக்குத் தேவையான பொருட்கள்… மனத்தில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம்! 

மழை, குளிர், பசி, தூக்கமின்மை—எதுவும் என்னை நிறுத்தவில்லை. மற்றவர்கள் தங்கள் குழந்தைகளைத் தூங்கவைக்கும் நேரத்தில், நான் என் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அடுத்த மாணவரின் வீட்டைத் தேடிப் பயணம் செய்தேன். 

அவள் அழுதால் சமாதானப்படுத்துவேன்; அவள் தூங்கினால் தோளில் சுமப்பேன்; மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும்போது என் மகளையும் அருகிலேயே வைத்திருப்பேன். அந்த நாட்களில் நான் ஒரு ஆசிரியையாக மட்டும் உழைக்கவில்லை— என் குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்குவதற்காகப் போராடிய ஒரு தாயாக உழைத்தேன்! என் வெற்றியின் பின்னால் அதிர்ஷ்டம் மட்டும் இல்லை. 

ஒரு வயதுக் குழந்தையின் சிறிய பாதங்களும், அவளைச் சுமந்து நடந்த ஒரு தாயின் வலித்த கால்களும் இருக்கின்றன! குறைந்தபட்சம் என் உழைப்பால் நான் ஏதோ ஒன்றைச் சாதித்தேன். ஆனால் நான் அடைந்த இடத்திற்குப் பின்னால், சமூக வலைத்தளத்தில் பதிவிடாத ஆயிரம் கண்ணீர்க் கதைகள் இருக்கின்றன. உங்கள் நாட்டின் பதவி விமானத்தில் உங்களுடன் வராது! உங்களில் சிலர் உங்கள் நாட்டில் அரசாங்க வேலை செய்திருக்கலாம்.

அலுவலக வாகனம், ஓட்டுநர், உதவியாளர், உயர்ந்த பதவி, சொந்த வீடு என்று வாழ்ந்திருக்கலாம். ஆனால் இங்கிலாந்து விமான நிலையத்தில் இறங்கும்போது, குடிவரவு அதிகாரி உங்கள் பழைய பதவிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கமாட்டார்! உங்கள் நாட்டில் அலுவலக வாகனத்தில் சென்றவர், இங்கே அதிகாலை பேருந்து வராததால் மழையில் நின்று அழ வேண்டியிருக்கலாம். 

உங்கள் நாட்டில் பத்து பேருக்கு வேலை சொன்னவர், இங்கே ஒரு சிறிய வேலைக்காகப் பத்து நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கலாம். உங்கள் நாட்டில் நீங்கள் பத்தாவது படியில் இருந்தாலும், இங்கே வாழ்க்கை உங்களைப் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கச் சொல்லலாம். 

சிலருக்கு அந்த ஆரம்பம் பூஜ்ஜியம் கூட அல்ல— கடன், வாடகை, தனிமை, விசா அழுத்தம் ஆகியவற்றுடன் பூஜ்ஜியத்திற்கும் கீழிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும்! உழைப்பு அவமானமல்ல. எந்த நேர்மையான வேலையும் தாழ்வானதல்ல. ஆனால் அந்த யதார்த்தத்தை அறியாமல், பெற்றோரின் வீட்டையும் நிலத்தையும் விற்று வருவது மிகப்பெரிய ஆபத்து. 

உங்கள் குடும்பம் வீட்டை விற்று உங்களை விமானத்தில் ஏற்றலாம்; ஆனால் இங்கே வந்த பிறகு உங்களுக்கு வீடு கிடைக்கும் என்று யாரும் உத்தரவாதம் தரமாட்டார்கள்! இங்கே பிறந்த பிள்ளைகளுக்குக்கூட வேலை கிடைப்பது எளிதல்ல! இங்கிலாந்திலேயே பிறந்து, இங்குள்ள பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்த பிள்ளைகளுக்குக்கூட படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் போராடுகிறார்கள். 

நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள்… பல சுற்று நேர்முகத் தேர்வுகள்… அனுபவம் கேட்கும் நிறுவனங்கள்… அனுபவம் பெறுவதற்கே வேலை தர மறுக்கும் இன்னொரு உலகம்! 

பட்டம் உங்களை நேர்முகத் தேர்வின் வாசல்வரை அழைத்துச் செல்லலாம். ஆனால் அந்த வாசலைத் திறப்பது உங்கள் திறமை, அனுபவம், தொடர்பாடல், நற்சான்றுகள், நேர்முகத் தேர்வு மற்றும் மீண்டெழும் மனவலிமை (Resilience) ஆகியவையே. வேலை கிடைத்தாலும் கதை முடிந்துவிடாது. பணிச்சுமை, மொழி, கலாசாரம், தனிமை, குடும்பப் பிரிவு, குழந்தைப் பராமரிப்பு மற்றும் விசா அழுத்தங்களைச் சமாளிக்கும் மனவலிமை வேண்டும். 

CV-யில் பட்டங்கள் நிறைய இருக்கலாம்; ஆனால் பசித்த வயிறு “Certificate” கேட்காது— “Sandwich எங்கே?” என்றுதான் கேட்கும்! மாணவர் விசா என்பது முழுநேர வேலை விசா அல்ல! பட்டப்படிப்பு மட்டத்திலான முழுநேர மாணவர்களுக்கு கல்விக்காலத்தில் பொதுவாக வாரத்திற்கு 20 மணிநேர வேலை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 

மாணவர் விசாவில் சுயதொழில் பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் விசாவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளே இறுதியானவை. Student Visa வேலை விதிகள் படிப்பை முடித்த பின் கிடைக்கும் Graduate Visa நிரந்தர விசா அல்ல. 31 டிசம்பர் 2026க்குள் விண்ணப்பித்தால் இரண்டு ஆண்டுகள்; 1 ஜனவரி 2027 முதல் விண்ணப்பித்தால் 18 மாதங்கள்; முனைவர் பட்டதாரிகளுக்கு மூன்று ஆண்டுகள். 

இதை நீட்டிக்க முடியாது; தொடர்ந்து தங்க வேறு தகுதியான விசாவுக்கு மாற வேண்டும். Graduate Visa விதிகள் “இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன; மெதுவாக வேலை தேடலாம்!” என்று நினைக்காதீர்கள். விசா நாட்காட்டி மெதுவாக நகராது; அது ஓடிக்கொண்டே இருக்கும். வேலை தேடுதல், நேர்முகத் தேர்வு, அனுசரணை மற்றும் விசா விண்ணப்பம்—எல்லாவற்றுக்கும் நேரம் தேவை.

 மருத்துவர், செவிலியர் என்றாலும் நேரடியாக வேலை கிடைக்காது! “நான் என் நாட்டில் மருத்துவர்; இங்கிலாந்து சென்ற மறுநாள் மருத்துவமனையில் வேலை கிடைத்துவிடும்” என்று நினைக்காதீர்கள். வெளிநாட்டில் மருத்துவம் படித்த பல மருத்துவர்கள் தங்களின் தகுதி மற்றும் பதிவு வழியைப் பொறுத்து GMC Registration, ஆங்கில மொழித் தகுதி மற்றும் PLAB 1, PLAB 2 போன்ற தேர்வுகளை முடிக்க வேண்டியிருக்கலாம். 

எல்லோருக்கும் ஒரே பாதை இல்லை; ஆனால் UK, EEA மற்றும் Switzerlandக்கு வெளியே படித்த பலருக்கு PLAB தேவைப்படலாம். GMC–PLAB வழிகாட்டுதல் மருத்துவர் அல்லது செவிலியராகப் பணியாற்ற அனைவரும் IELTS 8.5 பெற வேண்டும் என்பது சரியல்ல. மருத்துவர்களுக்கான பொதுவான GMC IELTS வழியில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது 7.0 மற்றும் மொத்தமாக 7.5 தேவைப்படலாம்.

 OET Medicine போன்ற வேறு ஆதாரங்களும் ஏற்கப்படுகின்றன. GMC ஆங்கில மொழித் தகுதி வெளிநாட்டில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் NMC Registration பெற வேண்டும். IELTS வழியில் Listening, Reading, Speaking ஆகியவற்றில் பொதுவாக 7.0 மற்றும் Writing-இல் 6.5 தேவை; OET வழியும் உள்ளது. NMC–IELTS விதிகள் ஆகவே மருத்துவப் பட்டம் கையில் இருப்பதால் மட்டும் மறுநாள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் தொங்கிவிடாது! 

மொழித் தகுதி, தொழில்முறைப் பதிவு, தேர்வுகள், ஆவணங்கள், நற்சான்றுகள், அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு—எல்லாவற்றையும் கடந்துதான் வேலை கிடைக்கும். மற்றவர் விதியை மீறுகிறார் என்பதால் நீங்களும் பின்பற்றாதீர்கள்! உறவினர்கள் இல்லாமலேயே சிலர் முழுநேரம் வேலை செய்வதையும், படிப்புக்குச் சரியாகச் செல்லாமல் இருப்பதையும் நீங்கள் பார்க்கலாம்.

 “அவர் செய்கிறார்; அவருக்கு ஒன்றும் நடக்கவில்லை; நானும் செய்யலாம்!” என்று நினைக்காதீர்கள். பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் கல்வி ஈடுபாட்டைக் கண்காணிக்க வேண்டும். ஒருவர் பதிவு செய்யவில்லை, படிப்பை நிறுத்தினார் அல்லது தொடர்ந்து கல்வியில் ஈடுபடவில்லை என்றால், விசா அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். Student Sponsor கடமைகள் அதேபோல், “வேலை விசா கிடைக்காவிட்டால் புகலிடம் (Asylum) கோரிவிடலாம்!” என்று நினைக்காதீர்கள். 

தங்கள் நாட்டிற்குத் திரும்பும்போது துன்புறுத்தல் அல்லது கடுமையான ஆபத்து ஏற்படும் உண்மையான பாதுகாப்புத் தேவை உள்ளவர்களுக்கான சட்டப் பாதுகாப்புதான் புகலிடம். அது மாணவர் விசாவுக்கான மாற்றுத் திட்டமோ, வேலை அனுமதி பெறும் குறுக்குவழியோ அல்ல. UK Asylum வழிகாட்டுதல் உண்மையான ஆபத்திலிருந்து தப்பி வருபவர்களை நாம் அவமதிக்கக்கூடாது. அதேநேரம், பாதுகாப்பு தேவையில்லாமல் அந்த முறையைப் பயன்படுத்தலாம் என்றும் நினைக்கக்கூடாது. 

தயவுசெய்து யோசித்து வாருங்கள்! உறவினர் அல்லது நம்பகமான ஆதரவு வட்டம் இல்லாமல் வருவதற்கு முன் நூறு தடவை சிந்தியுங்கள். அவசரத்தில் தங்குவதற்கு இடம் இருக்கிறதா? வேலை கிடைக்காவிட்டால் உணவுக்கு பணம் இருக்கிறதா? நோயுற்றால் உதவ ஒருவர் இருக்கிறாரா? உங்கள் படிப்புக்கு உண்மையான வேலைவாய்ப்பு இருக்கிறதா? அந்தத் துறையில் அனுசரணை வழங்கும் நிறுவனங்கள் எத்தனை? ஆறு மாதங்கள் வருமானமின்றி வாழ முடியுமா? நாடு திரும்ப வேண்டியிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

பல்கலைக்கழகம் இடம் கொடுத்துவிட்டது என்பதால், இங்கிலாந்து உங்களுக்கு வேலை வழங்கக் கடமைப்பட்டதல்ல. வங்கி இருப்பு பனிக்கட்டி போல— வாடகை, கட்டணம், போக்குவரத்து, உணவு என்று ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துவிடும்! இங்கிலாந்து வாய்ப்புகளின் நாடாக இருக்கலாம்; ஆனால் வெற்றியைத் தட்டில் வைத்து வழங்கும் உணவகம் அல்ல! நான் உங்களை வரவேண்டாம் என்று சொல்லவில்லை. திட்டமின்றி வராதீர்கள் என்றுதான் சொல்கிறேன். 

கனவுடன் வாருங்கள்—ஆனால் கண்களை மூடிக்கொண்டு வராதீர்கள். பட்டத்துடன் வாருங்கள்—அதற்கான அனுபவத்தையும் வளர்த்துக்கொண்டு வாருங்கள். பணத்துடன் வாருங்கள்—அது தீர்ந்தால் என்ன செய்வது என்ற மாற்றுத் திட்டத்துடனும் வாருங்கள். உறவினர் இல்லாவிட்டால், குறைந்தபட்சம் நம்பகமான ஆதரவு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு வாருங்கள். 

உங்கள் நாட்டில் நீங்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், இங்கே நீங்கள் தொடங்கும் இடம் பூஜ்ஜியமாக இருக்கலாம். சில நேரங்களில்— கடன், பசி, தனிமை, விசா அழுத்தத்துடன் பூஜ்ஜியத்திற்கும் கீழே இருக்கலாம்! நான் பேருந்து நிறுத்தத்தில் தலையைச் சாய்த்து நின்ற வலியை நீங்கள் அனுபவிக்க வேண்டாம் என்பதற்காக எழுதுகிறேன். ஏழு மாதக் குழந்தையைப் பிரிந்து, 12 மணிநேர இரவுப்பணி செய்த கண்ணீரை நீங்கள் சிந்த வேண்டாம் என்பதற்காக எழுதுகிறேன். 

ஒரு வயதுக் குழந்தையைச் சுமந்துகொண்டு, வேலை முடிந்த பின்னரும் வீடு வீடாகச் சென்று கற்பித்த களைப்பை நீங்கள் சந்திக்க வேண்டாம் என்பதற்காக எழுதுகிறேன். வாக்குறுதிகளை நம்பி உழைத்து, கடைசியில் கைவிடப்பட்ட ஏமாற்றத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டாம் என்பதற்காக எழுதுகிறேன். நான் இங்கே எழுதியது என் போராட்டத்தின் 20% மட்டுமே— மீதமுள்ள 80% இன்னும் என் மௌனத்திற்குள்ளேயே இருக்கிறது! வீட்டை விற்று விமானம் ஏறுவதற்கு முன் சிந்தியுங்கள்… இங்கே வந்து வீடே இல்லாமல் போகாதீர்கள்

Thank You Google

Thank You Google
Thanks