இங்கு சுற்றுலா வரும் பயணிகள், மாமல்லபுரம் எல்லைப் பகுதியான கருகாத்தமன் கோயிலின் பின்புறமுள்ள பிடாரி ரதத்தைச் சுற்றி பார்க்கவும் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
பின்னர் பிடாரி ரதத்தை சுற்றி பார்த்துவிட்டு வெளியே வரும் சுற்றுலா பயணிகளில் பலர், அங்கு தொல்லியல் துறையின் மதில்சுவரை ஒட்டியுள்ள காலி இடத்தில் பிளாஸ்டிக் பைகள், வாட்டர் பாட்டில் உள்பட ஏராளமான குப்பைக் கழிவுகளை போட்டுவிட்டு செல்கின்றனர். அதேபோல், அப்பகுதியில் ஏராளமான ஓட்டல் கழிவுகள் மற்றும் குப்பைகளை இரவு நேரங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
இதனால் அப்பகுதியே குப்பைமேடு போல் காட்சியளித்து, கடும் துர்நாற்றம் வீசியது.
குப்பை கழிவுகளை அகற்றி, அங்கு ஏராளமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து அழகுபடுத்த வேண்டும் என்று நகராட்சிகளின் மண்டல இயக்குனர் மாரிச்செல்வி உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில், மாமல்லபுரம் நகராட்சி ஆணையர் அபர்ணா மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில், நேற்று முதல் அப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலமாக குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க, அங்கு 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதற்கு மாமல்லபுரம் நகராட்சி ஆணையர் அபர்ணா, சுகாதார ஆய்வாளர் குருசாமி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாமல்லபுரம் சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளதால், எங்களுக்கு அந்நகரை தூய்மைப்படுத்த வேண்டிய கடமை உள்ளது.
ஒருசில இடங்களில் சுற்றுலாப் பயணிகள் விழிப்புணர்வு இல்லாமல், கண்மூடித்தனமாக குப்பைக் கழிவுகளை வீசிவிட்டு செல்கின்றனர். இங்கு குப்பை போடக்கூடாது என பல்வேறு அறிவிப்பு பலகைகள் வைத்து எச்சரிக்கிறோம். இவற்றை மீறுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக சுற்றுலா பயணிகளிடையே விரைவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக