வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

யாழ். உள்ளிட்ட வடக்கில் காணிகளை உடனடியாக விடுவியுங்கள் -அநுர குமார

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார். கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளையே உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அநுர குமார தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (20) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புடன் தொடர்புடையவர்களின் பொறுப்பாகும்.அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்கலாம், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு வருமாறும் அறிவுறுத்தினார்.

 அவசியமான காணி அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்குமாறு மேலும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

அதற்காக உயர் உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks