புதன், 19 ஆகஸ்ட், 2026

அதிவேக வீதியில் ஆசனப்பட்டி அணியா பயணிக்கு1,000 ரூபாய் அபராதம் .

செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக வீதிகளுக்கும் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, அனைத்துப் பயணிகளும் இருக்கை வார் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.


 ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் நபருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அதிவேகப் பேருந்துகளில் ஆசனப்பட்டி அணியாத பயணிகளிடமிருந்தும் இந்த அபராதத் தொகையை அறவிடுவதற்கான சட்டப்பூர்வ வசதி உள்ளதாகத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, ஆசனப்பட்டி அணிவதன் அவசியத்தை இலங்கை மக்கள் தீவிரமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

 அனைவரின் உயிர் பாதுகாப்பிற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய விபத்துகளில் ஆசனப்பட்டி அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இதற்கிடையில், தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன கருத்துத் தெரிவிக்கையில், ஆசனப்பட்டி இல்லாத வாகனங்களில் அவற்றை பொறுத்திக்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலமும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதியுடன் முடிவடடைவதாகத் தெரிவித்தார்.

 2025 செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2455/29 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, அதிவேக வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks